இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா உறுதியளிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்தார்.

2024.03.26 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, பொருளாதார பின்னடைவின் பின்னர் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை சீனப் பிரதமர் பாராட்டினார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை பலப்படுத்த நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தொடர்ச்சியாக உழைத்துள்ளீர்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ‘ஒரே சீனா’ கொள்கையை இலங்கை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் சர்வதேச மன்றங்களில் சீனாவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என பிரதமர் லீ கியாங் தெரிவித்தார். இலங்கையின் சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறைமை ஆகியவற்றிற்காக சீனா முன்நிற்பதற்கும், சர்வதேச அரசியல் பிரச்சினைகள் அல்லது பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது இலங்கைக்கு ஆதரவளித்தமைக்காகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் அமைச்சர்கள், இலங்கை இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு