வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு... - பிரதமர் தினேஷ் குணவர்தன

டவர் மண்டப மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வயதான கலைஞர்களுக்கான ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பித்த கலைஞர்களை உள்வாங்குதல் மற்றும் அவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்புகளை வழங்குவதற்காக நேற்று (2024.04.08) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை தெரிவுசெய்யப்பட்ட வயதான கலைஞர்கள் 102 பேருக்கு மாதாந்த ஓய்வூதிய வாழ்வாதார உதவியாக ரூ.7,500/- வழங்கப்பட்டு வருகிறது. டவர் மண்டப மன்றத்தின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற டவர் மண்டப மன்ற நம்பிக்கையாளர் சபை, இந்த கொடுப்பனவை ரூபா 10,000/- ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இம்மாதம் முதல் டவர் மண்டப மன்றத்தினால் வயதான 122 கலைஞர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக ரூ.10,000/- வழங்கப்படவுள்ளது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்

இந்நாட்டின் கலாசாரம் மற்றும் பல்வேறு கலைத் துறைகளை உயிர்பித்த உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் உங்களது இளமையும் போய்விட்டது. டவர் மண்டப மன்றம் உங்களை மதிக்கிறது மேலும் உங்கள் வாழ்வில் வசதியை சேர்க்கும் நம்பிக்கையுடன் தொடங்கப்பட்ட இந்த செயற்பாட்டை எங்களால் மேலும் முன்னேற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கலைஞர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடிய நம்பிக்கையாளர் சபை, அந்த கஷ்டங்களை ஓரளவுக்கு போக்க ஓய்வுக்கால வாழ்வாதார உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்தது. இது தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கவனத்திற்கொண்டாகும். எதிர்காலத்தில், மேலும் வயதான பல கலைஞர்களை இந்த ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியும்.

பல்வேறு துறைகளில் கலையை உயிர்ப்பித்த எம் நாட்டின் கலைஞர்கள் இன்று தொலைதூர கிராமங்களில் இருந்து வருகைதந்துள்ளனர். டவர் மண்டப மன்றம் புத்தாண்டைக் கொண்டாடுவதற்குத் தேவையான பொருட்கள் உட்பட அன்பளிப்புகளை வழங்குவதற்கு ஆண்டுதோறும் எடுக்கும் முயற்சிகளை பாராட்ட வேண்டும். உங்கள் அனைவருக்கும் அரசாங்கத்தின் கௌரவத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்வில், அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, டவர் மண்டப மன்ற நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், டவர் மண்டப மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி. எம். எஸ். திசாநாயக்க மற்றும் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு