குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவைச் சேரந்த 24159 குடும்பங்களுக்கு உதவிகள்....

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தும் விதமாக கொழும்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளி குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2024.04.22 அன்று மட்டக்குளி ஸ்ரீ விக்கிரமராமயவில் இடம்பெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்...

“கொழும்பில் உள்ள மக்களும் பிள்ளைகளும் நம்பிக்கையுடன் வாழக்கூடிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப தேவையான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.அதன் முதல் கட்டமாக, அவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளோம் எனக் குறிப்பிட்டார்

இங்கு உரையாற்றிய கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஏ.விஜேசிறி...

கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளிகள், சிறுநீரக கொடுப்பனவு பெறுவோர், மாற்றுத்திறனாளி உதவி பெறுவோர், சமுர்த்தி உதவி பெறுவோர், முதியோர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் நோயுற்ற பயனாளிகள் இதற்கு தகுதி பெற்றுள்ளனர். 39 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்க அரசாங்கம் 126.1 பில்லியன் ரூபாவை செலவிடுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இதற்காக தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து எண்பத்து மூவாயிரமாகும்.

இங்கு உரையாற்றிய கொழும்பு அபிவிருத்திக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன...

“கடந்த வருடம் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அந்த தடைகளை எதிர்கொண்டு முன் வந்த போது ஒரு முக்கிய தகவலை இனங்கண்டோம். நாட்டின் சகல நிதி அமைப்புகளுக்கும் அடைக்கலம் வழங்கியுள்ள கொழும்பு மாநகரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, வங்கிக் கணக்குகள் எதுவும் இல்லை, அவர்கள் நாட்டின் நிதி முறைமைக்குள் உள்வாங்கப்படாதுள்ளனர். இலங்கையின் முக்கிய வர்த்தக நகரத்தில், இலங்கை உலக நாடுகளுடன் பரிவர்த்தனை செய்யும் முக்கிய நகரத்தில், பல்லாயிரம் வருட வரலாற்றை கொண்ட நகரம், அந்த நகரத்தில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் எந்த வங்கியுடனும் தொடர்பு படாத நிலைமையை கண்டறிந்தமை இந்த திட்டத்தின் ஒரு வெற்றியாகும்.

பிரதமர் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு முறையும், அவ்வப்போது இந்தப் பகுதிக்கு வந்து பொதுமக்களுக்கு பல்வேறு பணிகளுக்காக நிவாரணம் வழங்கவும், பயனளிக்கவும் நடவடிக்கை எடுத்தார். அவர் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இருந்தபோது, வீட்டுவசதி, வீடு நிர்மாணத்திற்கான உதவிகள், ஒதுக்கீடுகள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். இதன் மூலம் கொழும்பு மக்களுக்கு அவர் பெரும் சேவையாற்றினார். அவர் பொது நிர்வாக அமைச்சை பொறுப்பேற்றதும், உணவு பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நம் நாட்டில் பெரும் வரிசைகளில் நிற்கும் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நம்பிக்கை உள்ளது. அப்போது இலங்கையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று எமது நாட்டில் உள்ள சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் போஷாக்கை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் அதிக வறுமைப் புள்ளிவிபரங்களைக் கொண்ட இந்தப் பிரதேசத்தை மறக்காமல் இப்பகுதிக்கு வருகை தந்தமை ஒரு கௌரவமாகும். தொற்றுநோய் பரவிய காலத்தில் வீடுகள் தோறும் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக இன்று கொழும்பு வடக்கு சமித்புர பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அணிசேரா மாநாடு நடைபெற்றதை முன்னிட்டு மீள்குடியேற்ற நடவடிக்கையாக சமித்புர உருவாக்கப்பட்டது. அது ஐம்பது வருடங்களுக்கு முன்பு. இன்று, ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் பகுதிகளை மீண்டும் வெற்றி இலக்குக்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.

இந்த நிகழ்வில் ராமான்ய மகா நிகாயவின் அனுநாயக்க தேரர் ஸ்ரீ விக்கிராமாதிபதி மாத்தளே குசலதம்ம தேரர், கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி, கொழும்பு பிரதேச செயலாளர் சந்தருவன் அனுருத்த, அரச அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு