ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவைப் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமரைப் பிரதமரைச் சந்தித்தனர்.

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் (European External Action Service - EEAS) பிரதிநிதிகள், பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குவதைச் சுட்டிக்காட்டியதுடன், இருதரப்புக்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் பலப்படுத்தலும் ஆழப்படுத்தலும் எத்துணை முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.

அண்மையில் ஏற்பட்ட சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய காலோசிதமான உதவிகளுக்காகப் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, தேவையேற்பட்ட தருணங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து காட்டிவரும் ஒற்றுமையையும் ஆதரவையும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பொருளாதார ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை எளிதாக்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லாட்சி ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கும், நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும் புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்துப் பிரதிநிதிகள் குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவருமான செல்வி பாவ்லா பம்பலோனி (Ms. Paola Pampaloni), ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவருமான செல்வி கார்மென் மோரேனோ (Ms. Carmen Moreno), ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் பிரதிநிதிகள், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு