நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு, வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் கட்டாயத் தேவைகளாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பின்னணியில், நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் அத்தியாவசியமானவையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூலை 20 ஆம் திகதி கொழும்பில், இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தினால் (CMA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட CMA இலங்கை தேசிய முகாமைத்துவ கணக்கீட்டு மாநாடு 2026இல் உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நெருக்கடி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி, முகாமைத்துவ கணக்கீட்டுக் கோணத்தில் (Crisis, Stability and Growth: A Management Accounting Lens) எனும் தலைப்பில் இம்மாநாடு ஜூலை 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்கள் கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் நடைபெற்றது.

ஆரம்ப விழாவில் CMA தேசிய முகாமைத்துவ கணக்கீட்டு மாநாட்டின் சஞ்சிகையை உத்தியோகபூர்வமாக வெளியிடுதலும், கணக்கீட்டுத் துறையில் 50 ஆண்டுகால சேவையை நிறைவுசெய்த சிரேஷ்ட தொழில்வல்லுநர்களுக்கான ’பொன் விழா விருதுகள்’ வழங்குதலும் பிரதமர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன. அரச உத்தியோகத்தர்களுக்காக CMA முகாமைத்துவ கணக்கீட்டு முறைமை பாடநெறியைக் கற்பதற்கு 100 பூரண புலமைப்பரிசில்களை CMA Sri Lanka நிறுவனம் அரசாங்கத்திற்கு வழங்கியமையும் இதன்போது இடம்பெற்றது. ’CMA Business Excellence Awards 2026’ மற்றும் தகுதிபெற்ற உறுப்பினர்களுக்கான ’Merit Awards’ விருது வழங்கல் என்பனவும் இங்கு இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

தற்போதைய உலகளாவிய அஸ்திரத்தன்மைக்கு மத்தியில் முகாமைத்துவ கணக்கீடு என்பது வெறும் நிதி அறிக்கையிடல் மாத்திரமல்ல, அரச மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளினதும் சரியான மூலோபாயத் தீர்மானங்களை எடுப்பதற்கு உதவும் முதன்மையான கருவிகளுள் ஒன்றாகும். நாட்டு மக்களின் அர்ப்பணிப்புகள் மற்றும் அரசாங்கம் மேற்கொண்ட கடினமான கொள்கை ரீதியான தீர்மானங்களின் காரணமாக இலங்கை இன்று நிதி நெருக்கடியிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருகின்றது. குறிப்பாக உற்பத்தி, சுற்றுலா மற்றும் நிதி ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்துடன் உலக வங்கி இலங்கையை மீண்டும் ’உயர் மத்திய வருமானம் பெறும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு’ என வகைப்படுத்தியிருக்கின்றது. இந்நிலைக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தி, போட்டித்தன்மைமிக்க பலமானதொரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமே நாட்டின் முன் ஏற்பட்டிருக்கும் சவாலாகும்.

கடந்த காலப்பகுதியில் சில அரச நிறுவனங்களும் அமைச்சுக்களும் தமது வருடாந்த நிதி அறிக்கைகளையும் கணக்கீட்டு அறிக்கைகளையும் சமர்ப்பித்திருக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட தலையீடுகளுக்கு மத்தியில் அவ்வறிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிதி அறிக்கைகளை வழங்காத மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தரங்களை மீறும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரச நிர்வாகத்திற்குள் எடுக்கப்படும் தீர்மானங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அல்லாது, சான்றுகள், தரவுகள் மற்றும் அறிவியல் ரீதியான அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும். தற்போதைய உலகளாவிய தேவைகளுக்கு அமைவாக கணக்கீட்டில் தவறிவிடும் சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சமூகச் செலவினங்கள் குறித்தும் கவனத்திற் கொள்வது முக்கியமாகுமென நான் நம்புகின்றேன்.

அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் உயர்தரப் பிரிவிற்கு தொழிற்பயிற்சிப் பாடநெறிகளையும் ஓராண்டு நிறுவனப் பயிற்சியையும் (Internship) உள்ளடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குத் தேவைப்படுகின்றது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் (AI) முன்னோக்கிச் செல்லும் புதிய உலகிற்குப் பொருத்தமான நன்னடத்தை மற்றும் மூலோபாயச் சிந்தனையுடன்கூடிய தொழில்வல்லுநர்களை உருவாக்குவதில் CMA நிறுவனம் உள்ளிட்ட தொழில்சார் நிறுவனங்கள் வழங்கிவரும் பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும் எனப் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin), CPA Australia நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டேல் பின்டோ (Professor Dale Pinto), CMA Sri Lanka நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான பேராசிரியர் லக்ஷ்மன் ஆர். வட்டவல உள்ளிட்ட CMA Sri Lanka உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமளவு அதிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு