நேர்மையான அரச சேவைக்கான “நேர்மையான கலாசாரம் - தூய்மையான இலங்கை” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான விழிப்புணர்வுப் பட்டறை, பிரதமரின் செயலாளரின் பங்கேற்பில் ஜூலை 27 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகவுள்ள இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதோடு, ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பும் இலக்கை அடைவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ’க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்துடன் இணைந்து, அரச சேவையின் ஒழுக்கப் பண்பாடுகளைப் பலப்படுத்துவதே இந்த விழிப்புணர்வுப் பட்டறையின் நோக்கமாகும்.
இலங்கை முழுவதையும் உள்ளடக்கும் வகையில் “நேர்மையான கலாசாரம் - தூய்மையான இலங்கை” எனும் தலைப்பில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நேர்மை வாரம், 2026 ஜூலை 27 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைபெறும். இது இந்த ஒரு வாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்ட விழாவாக அன்றி, அரச சேவையின் அடிப்படைகளை நிலையானதாக மாற்றுவதற்கான குறுகியகால, நடுத்தரகால மற்றும் நீண்டகால வேலைத்திட்டத்திற்கான ஆரம்பமாகும்.
இந்த விழிப்புணர்வுப் பட்டறையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள்,
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நல்லாட்சி எனும் எண்ணக்கருவைப் பற்றி மீண்டும் சிந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படுவதாகவும், ஊழல் குறித்த கண்ணோட்டக் குறியீட்டின்படி (Corruption Perceptions Index - CPI) உலகளாவிய ரீதியில் இலங்கை 14 நாடுகளை முந்திச் சென்று முன்னிலைக்கு வந்துள்ளதையும் வலியுறுத்தினார்.
இந்த விழிப்புணர்வுப் பட்டறை, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரதீபா சேரசிங்க அவர்களின் வளவாளர் பங்களிப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தின் பதவிநிலை அதிகாரிகள், பிரிவுகளின் பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு