பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

அனைவருக்கும் அன்பும் பாதுகாப்பும் கிடைக்கப்பெறும் கருணைமிக்க ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்புவோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அழகியலை குழந்தைகளின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றுவோம் என உறுதியளிக்கிறோம்

அனைவருக்கும் அன்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கப்பெறுகின்ற கருணைமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தென் மாகாண கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, மாகம் சஹூர்தயோ, காலு சஹூர்தயோ, மற்றும் துருது சஹூர்தயோ ஆகிய கலைச் சங்கங்களின் ஒன்றியத்தினால் தென் மாகாணத்தை உள்ளடக்கி நடத்தப்பட்ட ’தக்ஷிண புனருதய’ (தெற்கின் மறுமலர்ச்சி) கலை விழாவை முன்னிட்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கடற்கரைப் பூங்காவில் நடைபெற்ற ஹம்பாந்தோட்டை மாவட்டக் கலை விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஒக்டோபர் 10, 11 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்தக் கலை விழாவில், திரைப்படம், நாடகம், காட்சிக்கூடங்கள், பல்வகை கலை, கலாசார அம்சங்களுடன் பெருமளவு கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

கடந்த ஒரு மாத காலமாகத் ’தக்ஷிண புனருதய’ கலை விழாவை முன்னிட்டு தென் மாகாணத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைப் பாராட்டியதோடு, நாட்டில் உயரிய கலாசார மனிதர்களையும், உயரிய கலாசார சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு இத்தகைய அர்த்த புஷ்டியான நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுவதாகக் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

"அபிவிருத்தி, முன்னேற்றம் என்பது வெறுமனே வீதிகள், துறைமுகங்கள், கட்டிடங்களை உருவாக்குவது மாத்திரமல்ல. நமக்கு பொருளாதார அபிவிருத்தி தேவை. அதேபோன்று நல்ல பொருளாதார வாய்ப்புகளும் தேவைப்படுகின்றன. ஆயினும், இவை அனைத்தையும் நாம் உருவாக்குவது எமது வாழ்க்கையை மேலும் அர்த்தம் உடையதாக மாற்றுவதற்கே ஆகும். எமது வாழ்க்கையை மகிழ்விக்கவும், எமது சமூகத்தை மேலும் முன்னேற்றம் அடையச் செய்வதற்குமே நாம் இவற்றை மேற்கொள்கின்றோம். நம்முள் கருணையை வளர்த்து, பாதுகாப்பும், பாசமும் நிறைந்த குடும்பங்கள், அன்பையும் அரவணைப்பையும் பெரும் குழந்தைகள் வாழும் சமூகத்தை உருவாக்குவதே எமது இறுதி இலக்காகும். இவை அனைத்தையும் அதற்காகவே நாம் மேற்கொள்கிறோம்."

"நமது சமூகத்தில் அனைவரும் பாதுகாப்பானவர்கள் என்ற உணர்வு ஏற்படும், அனைவருக்கும் அன்பும் பாசமும் கிடைக்கப்பெறுகின்ற, எவருமே தனிமைப்படுத்தப்படவில்லை என உணரக்கூடிய, ஒரு முன்னேற்றம் அடைந்த சமூகத்தையே நாம் கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம்," எனத் தெரிவித்த பிரதமர்,

அத்தோடு, 2026 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தவிருக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், அழகியல் கல்வி வகுப்பறைக்கும், புத்தகங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பாடமாக அமையாது, பிள்ளைகளின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக அதனை மாற்றுவதற்கு உறுதியளிப்பதாகவும், அழகியலை உணரவும், பாராட்டவும், அனுபவிக்கவும் அறிந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப பாடசாலை மற்றும் உயர்கல்வித் துறைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த பிரதமர், ஹம்பாந்தோட்டை மாவட்டக் கலைஞர்களைப் பாராட்டி பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

இவ்விழாவில் உரையாற்றிய தொழில் கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே:

"கடந்த காலம் முழுவதும் உங்களால், ஒரு புத்தகம், நாடகம், திரைப்படம் ஆகியவற்றை ரசிக்கக்கூடிய ஒரு சூழல் இருக்கவில்லை. உங்களது வாழ்க்கை உங்களை விட்டு விலகிப் போயிருந்தது. பல ஆண்டுகளாக நீங்கள் இழந்திருந்த அந்த வாழ்க்கையை மீண்டும் உங்களுக்குப் பெற்றுக்கொடுக்கவே நாம் முயற்சிக்கிறோம். இன்று இந்த மேடையில் நிகழ்ச்சிகளை வழங்கும் குழந்தைகள் ஒரு நாள் கலையின் மாபெரும் விருட்சங்களாக மாற வேண்டும்."

"உங்கள் கிராமத்திற்கு கலை படைப்புகள், ரசிப்புத்தன்மையுள்ள நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வாராந்தம் கொண்டு வருவதாக நாம் தேர்தலின் போது உங்களுக்கு உறுதியளித்தோம். அந்த வாக்குறுதியையே இப்போது நாம் இவ்வாறு நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆகையினால், இது இதோடு நின்றுவிடாது. மாபெரும் மானிட மாற்றத்திற்காக இந்த முயற்சி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும். அதற்காகப் பெரும் பங்களிப்பை பெற்றுக் கொடுத்த தென் மாகாண அரச அதிகாரிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," எனத் தெரிவித்தார்.

இங்கே உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நிஹால் கலப்பத்தி,

"இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ என்ற எமது தொனிப்பொருளை யதார்த்தமாக்குவதற்கு, ஒவ்வொரு துறையையும் இணைக்கும் அந்த மாபெரும் வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பாதகமற்ற, பாசம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் கருணைமிக்க ஒரு கலாசார மனிதனை இந்த மண்ணில் உருவாக்குவதே ஆகும். நாம் எதிர்பார்த்த அந்த மாற்றம் தற்போது உங்கள் வாழ்க்கையை நெருங்கியுள்ளதாக நாம் உணர்கிறோம்."

"2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின் பின்னர் இந்த ஹம்பாந்தோட்டை நகரம் முற்றிலும் "வெற்று நிலமாக" மாறியது. இந்த நகரை அந்த வெறுமையிலிருந்து மீட்க அன்று முதல் இங்கே அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் தலையிடவில்லை. எனவே, தனிமையில் இருக்கும் இந்த மக்களுக்கு ஒரு பக்கபலமாக இருக்க வேண்டும் என இந்தச் செயல்திட்டத்தை ஆரம்பித்த நாம் சிந்தித்தோம். இன்று அந்தப் பயணத்திற்குப் பக்கபலமாக இருப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து இருக்கிறோம்," எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கௌரவ மகா சங்கத்தினர்கள், கத்தோலிக்க குருமார்கள்,மௌலவிமார்கள் உட்படச் சர்வமதத் தலைவர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதுல வெளந்தகொட, வைத்தியர் சாலிய சந்தருவன், திலங்க யூ. கமகே, ஹம்பாந்தோட்டை இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் ஹர்விந்தர் சிங், தென் மாகாணப் பிரதம செயலாளர் சட்டத்தரணி சுனில் அலஹகோன், ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் பிமல் இந்திரஜித், காலி மாவட்டச் செயலாளர் W.A தர்மசிறி ஆகியோருடன், அரச அதிகாரிகள், கலைஞர்கள், அழைப்பு விடுக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

எமது சிறார்களுக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருக்கின்றது - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அதற்குத் தேவையான பாதைகளைத் திறந்து விடுவதுதான் பெரியவர்களாகிய நமது கடமையாகும்

நமது சிறார்களுக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருப்பதாகவும், அதற்குத் தேவையான பாதைகளைத் திறந்து விடுவதுதான் பெரியவர்களின் கடமையாகும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"Sri Lanka Skills Expo 2025" கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஒக்டோபர் 10 ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் இளைஞர்களிடையே நிலவும் தொழில்வாய்ப்பின்மை வீதத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்தக் கண்காட்சி மூன்றாவது முறையாகவும் ஒக்டோபர் மாதம் 10, 11 ஆகிய இரு தினங்களில் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடத்தப்படுகின்றது. கைத்தொழில் துறை திறன் சபையும் (Industry Sector Skills Councils - ISSC), கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.

இதில் மேலும் உரையாற்றிய பிரதமர்:

நாம் ஆரம்பித்துள்ள கல்விச் சீர்திருத்தத்தில் இதுவொரு சிறப்பான சந்தர்ப்பமாகும். இதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது, குறிப்பாக எமது பிள்ளைகளுக்குக் கல்வித் துறையில் காணப்படுகின்ற வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை மாத்திரமல்ல, அந்த வாய்ப்புகளை இனங்கண்டுகொள்வதற்கான பாதையைத் திறந்து விடுவதோடு, இந்த அனுபவங்களை கல்வி மூலம் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்கின்றோம்.

இந்தக் கண்காட்சி மூலம் உங்கள் எதிர்காலப் பயணத்திற்கான வழிகாட்டல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். உங்களதும் பெற்றோரினதும் விருப்பம், உங்களது திறமைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இன்றைய உலகில் உருவாகும் வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகும் என நான் நினைக்கிறேன்.

உண்மையில், இந்தக் காலகட்டத்தில் கல்வி கற்று சமூகத்தில் இணைந்து கொள்ளவிருக்கும் உங்களது தலைமுறையினர் முகம் கொடுக்க வேண்டிய பல சவால்கள் காணப்படுகின்றன. தொழில்நுட்பத்தின் காரணமாக உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. குறிப்பாக, எவராலும் நினைத்துப் பார்க்க இயலாத வகையில் சமூகம் மாற்றம் பெரும்போது, மாறிவரும் அந்தச் சமூகத்தில் தொழில்களும் மாற்றமடைகின்றன. நாம் சிந்திக்கப் பழகியிருக்கும் பாரம்பரியப் பாதையில் பயணிப்பதன் மூலம் இந்தச் சமூகத்தில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள இயலாது. ஆகையினால், மாறிவரும் சமூகத்தைப் பற்றி நாம் நன்கு புரிந்துகொண்டு எமது கல்விப் பயணத்தைத் தொடர வேண்டும்.

இதன் மூலமே எமது தேசிய அபிவிருத்தித் திட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்வது சாத்தியமாகும். நாம் நமது பொருளாதாரத்தை மேம்படுத்தச் பயணிக்கும் பாதைகள் எவை என்பதை இந்த நிகழ்ச்சிகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த அபிவிருத்திப் பொருளாதாரத் திட்டத்தில் நீங்கள் எங்கு இணைந்து கொள்ளலாம், எங்குப் பங்காளியாக இருக்கலாம், எந்தப் பாதையில் செல்லலாம் என்பதைப் பற்றி உங்களுக்கு மாத்திரமின்றி, உங்களது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் ஒரு புரிதலைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்தக் கண்காட்சி மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலம் உங்களுக்கு ஒரு புதிய உலகத்திற்கான, சமூகத்திற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. உலகத்தின் புதிய போக்குகள் என்ன என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. நீங்கள் நினைப்பதை விடச் சமூகத்தில் உங்களுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன, உங்களுக்கென ஓர் இடம் இருக்கின்றது. அந்த இடத்திற்கு நீங்கள் வரும்வரை நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதனுடன் இணைந்து முன்னோக்கிச் செல்லுங்கள். நீங்கள் முன்னோக்கிச் செல்லும் அந்தப் பயணத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

எம்மால் செய்யக்கூடியது, உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை வழங்குவதும், புதிய வாய்ப்புகளுக்கான பாதையை அமைத்துக் கொடுப்பதுமே ஆகும். அந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே உங்கள் பொறுப்பாகும்.

இங்கு கூடியிருக்கும் சிறார்களாகிய உங்களுக்கு இந்தச் சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருக்கின்றது என நான் நம்புகிறேன். நீங்களே அடுத்த தலைமுறையின் தலைமையை ஏற்கப் போகிறீர்கள். இது எல்லோரும் உங்களுக்குச் சொல்லும் விடயம் என்று நான் நினைக்கிறேன். ஆயினும், நாம் அதைச் சொல்வதோடு நின்றுவிடாது, அந்தச் சந்தர்ப்பங்களை, அந்தத் தலைமையைப் பெறக்கூடிய கல்விப் பின்னணி, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான பாதைகளை உங்களுக்காகத் திறந்து விடுகிறோம். பெரியவர்களாகிய எமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது, இதை எப்படியாவது உங்களுக்குச் செய்துகொடுப்போம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, தொழில் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுத்தந்திரீ, கல்வி அமைச்சின் செயலாளர் நாளக களுவெவ உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரும் போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு ஓர் உணர்வுப்பூர்வமான துறையாக அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட அத் துறை சார்ந்த அனைவரும், மக்களுக்கு உணர்வுபூர்வமான போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் தொடர்புடைய போக்குவரத்து அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவு குறித்த விவாதத்தில் இன்று (ஒக்டோபர் 08) பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர்:

"குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவானது ஒரு அமைச்சின் வெளிப்படைத்தன்மைக்கும், பணக் கட்டுப்பாடுக்கும் ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும். வருட இறுதியில் ஏதேனும் ஒரு திட்டத்தைச் செய்வதற்குத் தடைகள் ஏற்படும்போது, குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவு மூலம் இவ்வாறான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவது ஒரு சிறந்த உதாரணமாகும்."

"இதற்கு முன்னர் விடயங்கள் நடந்தேறிய விதம் நமக்கு நினைவிருக்கின்றது. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. போக்குவரத்து அமைச்சு என்பதை மோசடி, ஊழல் அதிகமாகக் காணப்படும் ஓர் அமைச்சாகவே சமூகத்தால் இனம் காணப்பட்டிருந்தது. ஆயினும், தற்போது இந்த மனநிலை மாற்றம் கண்டுள்ளதோடு, அந்த ஊழல் மோசடிகளுக்கு எதிராக மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சின் பொதுப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான இரு துறைகளாகும்."

"மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை வழங்கும் இந்த அமைச்சு, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு, மக்களின் தேவைகளுக்காகச் செயற்படும் நிறுவனங்களாக மாறி வருகின்றன. போக்குவரத்து அமைச்சின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடிச் செல்லும் பயணம் பாராட்டத்தக்கது என நான் நினைக்கிறேன். இந்த குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவின் மூலம், இந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினை மேலும் மக்கள் மையப்படுத்தியதாகவும், மக்களுக்காகச் சேவை செய்யும் திறமையான நிறுவனமாகவும் மாற்ற ஒரு நல்ல வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன்."

"பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்குப் பிரதான காரணங்களில் ஒன்று பண முகாமைத்துவத்தில் இருந்த பலவீனமே என்பதை நாம் அறிவோம். திட்டங்களைக் கண்டறிவதிலும், அத்திட்டங்களில் இருந்த நிபந்தனைகளில் காணப்பட்ட பலவீனத்தினாலேயே நாம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆகையினாலே, இந்தத் தாக்கம் நமக்கு மிகவும் முக்கியமான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் போன்ற துறைகளிலும் காணப்படுகிறது."

"கடந்த காலம் முழுவதும், மோசமான முறையில் சிந்தித்து பலவீனமான திட்டங்களை ஆரம்பித்தமையையும், அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் இருந்த பலவீனங்களையுமே காண முடிந்தது. நாட்டின் மக்களைப் பற்றியோ, நாட்டின் பண முகாமைத்துவம் பற்றியோ சிந்திக்காது எடுக்கப்பட்ட முடிவுகள், முற்றிலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது ஊழல், மோசடியை அடிப்படையாகக் கொண்டோ எடுக்கப்பட்டதால், அந்தத் திட்டங்கள் முன்னோக்கிச் செல்லவுமில்லை, செயற்படுத்தப்படவுமில்லை."

"அத்தகைய பல பிரச்சினைகளை இந்த அமைச்சில் மாத்திரமன்றி, ஒவ்வொரு அமைச்சிலும் நாம் கண்டோம் என நினைக்கிறேன். இந்த ஆண்டு முழுவதும் பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள், நிறுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றுக்காக மீண்டும் நிதி ஒதுக்குவது மாத்திரமன்றி, அவற்றை முடிவுக்குக் கொண்டு வரவும், எப்படியாவது முடிக்கவும் வேண்டியிருந்தது. இவை அனைத்தும் இந்தப் பொருளாதார நெருக்கடியின் மற்றுமொரு பக்கமாகும்."

"இவ்வாறான பல காரணிகளை இந்தத் திட்டங்களில் நாம் காண்கிறோம். எனவேதான், குறைநிரப்பு மதிப்பீடு மூலம் மீண்டும் மீட்க முடியாத, முடிக்க முடியாத வேலைகளைத் தொடர வேண்டியுள்ளது. இந்த நாட்டிற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் குறைந்தபட்ச இழப்பை ஏற்படுத்தும் வகையில் இவற்றை முடிக்கவே நாம் இந்த முயற்சியை எடுக்கிறோம்."

"பொதுப் போக்குவரத்து நமக்கு மிகவும் முக்கியமானது. மக்கள் பாதுகாப்பாக, விரைவாகவும், வசதியாகவும் தமது பயணங்களை மேற்கொள்ள முடிவது மிகவும் அவசியமானதாகும். அதேபோல், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் போக்குவரத்து வசதிகளைப் பெறக்கூடிய வகையிலும், பொதுப் போக்குவரத்தை அணுகக்கூடிய வகையிலும் இவற்றை மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானதாகும்."

"இதற்காக இந்த அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் மிகவும் பாராட்டுகிறோம். கல்வி அமைச்சு ஊடாக நாம் போக்குவரத்து அமைச்சுக்கு ஒரு யோசனையை முன்மொழிந்திருக்கின்றோம். பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என்பது ஒரு கட்டிடத்தைக் கட்டுவது மாத்திரமல்ல. அந்தப் பாடசாலையைச் சென்றடையும் வீதியை மேம்படுத்துவது, அந்தப் பாடசாலைக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவது, அந்தப் பொதுப் போக்குவரத்துச் சேவையின் தரத்தை உறுதிப்படுத்துவது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இவை அனைத்தையும் பாடசாலை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாகவே நாம் காண்கிறோம்."

"எனவே, போக்குவரத்து அமைச்சியுடன் இந்தக் கலந்துரையாடலை ஏற்படுத்த முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் பல யோசனைகளை முன்மொழிந்திருக்கின்றோம். குறிப்பாக, தூரப்பிரதேசங்கள், கிராமப்புறப் பாடசாலைகள் ஆகியவற்றுக்கான வீதிகள் நேர்த்தியாக இல்லை. அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் சிறுவர்களின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் இவை மேம்படுத்தப்பட வேண்டும்."

"பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் நாம் கலந்துரையாடி வருகிறோம். சிறுவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வசதிகளில் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். முன்பெல்லாம், குழந்தைகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட நடத்துநர் மற்றும் சாரதிகளின் தரம் இருந்ததை நாம் அறிவோம். அவர்கள் வீதியில் பேருந்தைச் செலுத்திச் செல்லுவதோடு நின்றுவிடாது. அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் மனப்பான்மையும் கொண்டிருந்தார்கள்."

"அந்த மனப்பான்மை மாற்றமும் இந்த நேரத்தில் நமக்கு மீண்டும் தேவைப்படுகிறது. தமது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்காகக் காட்டும் அந்தப் பொறுப்புணர்வும், அர்ப்பணிப்பும் அந்த மனப்பான்மை மாற்றமும் நமக்குத் தேவைப்படுகின்றது. எனவே, இந்த நேரத்தில் போக்குவரத்து அமைச்சு அந்த மனப்பான்மையை மேம்படுத்த ஒரு நல்ல முயற்சியை மேற்கொள்வதைக் காண்கிறோம்."

"மாற்றுத்திறனாளிகள் சமூகம், எமது முதியோர்கள் ஆகியோருக்குப் பேருந்துகளில் மாத்திரமின்றி, எமது ரயில் நிலையங்களில், எமது ரயில்களில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். பயணிகளின் சுகாதார வசதிகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்," என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

எந்தவொரு குறிப்பிட்ட குழுவினருக்கும் விசேட சலுகையையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம்

அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினருக்கும் விசேட சலுகையையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்காது என்றும், சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இன்று (ஒக்டோபர் 08) பாராளுமன்ற விவாதத்தின்போது LGBTQ+ குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம். அத்தகைய விடயங்களை முன்வைக்கும்போது நாம் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். இதனால் சிரமப்படும் ஒரு சமூகம் இருக்கவே செய்கிறது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகத் தெளிவானதாகும், நாம் எந்தவொரு குழுவிற்கும் விசேட சலுகையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்கப்போவதில்லை, எனத் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துக் கௌரவ நீதி அமைச்சரும் அமைச்சும் ஆராய்ந்து வருகின்றன. அத்தோடு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் இத்தகைய இடங்களில் இருப்பதைத் தடுக்க வேண்டுமாயின், நீதித்துறைச் செயல்முறையை மாற்றி அமைக்க வேண்டும், என கூறினார்.

கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், பிரதமர் பின்வருமாறு தெரிவித்தார்:

கல்வியியற் கல்லூரிகள் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படவில்லை. வளங்கள் மாத்திரமன்றி, அவை செயற்படும் விதம் குறித்தும் பெரிதாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்த ஆண்டில், காலத்திற்குப் பொருத்தமான அதே வேளை, உத்தேசக் கல்விச் சீர்திருத்தங்களுக்கும் பொருத்தமான வகையில் ஒரு பாடத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். நமக்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக, கல்வியியற் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்து வருகின்றோம்," என்றார்.

எமது அரசாங்கத்தின் இலக்கு, அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற நிலையை அடைவதே ஆகும். கல்வியியற் கல்லூரிகளை பட்டத்தை வழங்கும் நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எமது இலக்காகும். ஏற்கனவே குலியாப்பிட்டிய கல்வியியற் கல்லூரிகளில் பட்டம் வழங்கப்படுவதாகவும், எஞ்சியிருக்கும் 19 கல்வியியற் கல்லூரிகளையும் அந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒக்டோபர் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கையில் முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதுடன், தேர்தல் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களின் சட்ட மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தேர்தல் ஆணைக்குழு உட்படப் பிரதான தேர்தல் நிறுவனங்களின் ஆற்றல் மற்றும் தயார்நிலை பற்றிய புரிதலைப் பெறுதல், அத்துடன் அரசியல் பங்குதாரர்களின் ஈடுபாடு ஆகியன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் தொழில்நுட்பத் தேர்தல் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகள், இலங்கையில் தற்போதுள்ள தேர்தல் வழிமுறைகளை கவனத்தில் கொண்டு, தேர்தல் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் எதிர்கொள்ள நேரிடுகின்ற சவால்களுக்குத் தீர்வுகளைத் தேடுவதற்குத் தமது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். பெண்கள் மற்றும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், தேர்தல் நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தேர்தல் செயற்பாட்டில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு, அவர்களை வேட்பாளர்களாக மாத்திரம் அன்றி, செயலூக்கமிக்க வாக்காளர்களாகவும் செயல்பட, ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். அத்தோடு, சுதந்திரமான, நீதியான அதேவேளையில் அரசியலமைப்புக்கு அமைவான தேர்தல்களை நடத்துவதற்கு, வன்முறை, ஊழல் மற்றும் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் உதவிப் பிரிவின் பணிப்பாளர் (DPPA) Michele Griffin, தேர்தல் கொள்கை நிபுணர் Dan Malinovich, அரசியல் அலுவல்கள் அதிகாரி (ஆசியா - பசிபிக் பிரிவு) (DPPA-DPO) திருமதி. Amanda Stark மற்றும் அரசியல்/தேர்தல் அலுவல்கள் அதிகாரி Mikyong Kim ஆகியோர் உட்பட ஐக்கிய நாடுகள் சபை தலைமையக மற்றும் UNDP இன் இலங்கைக்கான சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆர்.எம்.ஐ.டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

இன்று, அக்டோபர் 02, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற ஆர்.எம்.ஐ.டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பங்கேற்றார்.

இலங்கையின் இளம் கல்வியாளர்களின் அறிவைப் பாலப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குதல் ஆகிய துறைகளில் கலாநிதி பட்டப் படிப்பிற்கான பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி (RMIT) பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் (UGC) இடையேயான கூட்டு மதிப்பு வடிவமைப்பாக இந்த உத்தியோகபூர்வ விழா அமைந்தது. இத்திட்டம் பேராதனைப் பல்கலைக்கழகம், மொரட்டுவப் பல்கலைக்கழகம், ருஹுணுப் பல்கலைக்கழகம் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கலாநிதிப் பயிற்சிக்காக 30 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் அவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் திறனை வலுவூட்டுவதில் ஆர்.எம்.ஐ.டி உடனான இந்த கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். மேலும், நாடு தற்போது இனம் கண்டிருக்கும் முக்கிய துறைகளைத் திறம்படக் கையாள்வதற்கு ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் தீவிர பங்களிப்பு அரசாங்கத்திற்குத் தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்தினார்.

அத்தோடு, சம்பிரதாய அணுகுமுறைகளுக்கு அப்பால், அதிகமான பல்துறையசார் மற்றும் பல்வகைப்பட்ட உத்திகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நிலையான அதே நேரம் அனைவரையும் உள்வாங்கிய அபிவிருத்தியை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்லும் தலைமைப் பொறுப்பை இன்று புலமைப்பரிசில்களைப் பெற்ற கல்வியாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஆஸ்திரேலியாவின் பதில் உயர்ஸ்தானிகர் Lalita Kapur, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், ஆர்.எம்.ஐ.டி பிரதிநிதிகள், பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள், உபவேந்தர்கள், பீடாதிபதிகள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு