பிரதமரின் பங்கேற்புடன் உலக இரத்த தான தேசிய நிகழ்வு
ஜூன் 14 ஆம் திகதி இடம்பெறும் உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு, ஜூன் 14 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றதுடன், அதனுடன் இணைந்ததாக இரத்த தானம் செய்பவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
"வாழ்க்கைக்கு நம்பிக்கையை கொடுப்போம், இரத்த தானத்திற்காக ஒன்றுபடுவோம்" என்பது உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளாகும். நாட்டின் வருடாந்த இரத்தத் தேவையில் சுமார் 85% நடமாடும் இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்களினால் செய்யப்படும் ஒப்பற்ற பங்களிப்பாகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
தேசிய இரத்தமாற்ற சேவைக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் 450,000 இரத்த அலகுகளில், 380,000 க்கும் மேற்பட்டவை அல்லது சுமார் 85% இந்த நடமாடும் முகாம்களிலிருந்து சேகரிக்கப்படுகின்றன, இந்த நோக்கத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 5,000 நடமாடும் இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்த பாராட்டு நிகழ்வில் சுமார் 1,500 இரத்த தானம் செய்பவர்களும் 1,000 இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்களும் பங்கேற்கிறார்கள்.
இனம், மதம், மாகாணம் அல்லது பிரதேசம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வணிக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பாடசாலைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் தனிநபர்கள் உட்பட பல்வேறு வகையான பங்களிப்பாளர்கள் இங்கு விருதுகளைப் பெறுகிறார்கள்.
இந்த ஏற்பாட்டாளர்கள், எந்தவொரு தனிப்பட்ட நன்மையையும் எதிர்பார்க்காமல், தங்கள் செல்வம், உழைப்பு மற்றும் நேரத்தை இந்த நோக்கத்திற்காக தானாக முன்வந்து அர்ப்பணிக்கும் பிரிவினராகும். இலங்கையில் உள்ள இந்த தனித்துவமான இரத்த தான முறைமை உலகின் வேறு நாடுகளில் காணக் கிடைப்பதில்லை.
அரச நிறுவனங்களுக்கு இரத்த தானம் செய்வதற்காக வருடத்திற்கு ஒரு நாளை ஒதுக்கும் திட்டத்தை எதிர்காலத்தில் ஒரு முறையான திட்டத்துடன் மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
பாடசாலை முறைமையினுள்ளும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எதிர்கால இரத்த தானம் செய்பவர்கள் உருவாகும் இடமாக பாடசாலை முறைமை இருப்பதால் இது மிகவும் முக்கியமானது.
இரத்த தானம் செய்பவர்கள் கோவிட் தொற்றுநோய் போன்ற சிரமங்களுக்கு மத்தியிலும், அவர்கள் தங்கள் பொறுப்புகளை மறக்காமல் தங்கள் தேசியப் பொறுப்பை நிறைவேற்றினர். இன்று இலங்கை தன்னார்வ இரத்த தானம் மூலம் 100% இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாடாக மாறியுள்ளது என்றும், அவர்களின் உன்னத பணிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர், வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,
நாட்டின் சுகாதாரத் துறையில் இரண்டு முன்னணி துறைகளான, நோய் நிவாரண ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு சேவை மற்றும் தேசிய இரத்த மாற்று சேவை ஆகியவை சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளன. 2010 ஆம் ஆண்டு உலக சுகாதார தாபனம், ஒவ்வொரு நாடும் 2020 ஆம் ஆண்டுக்குள் தன்னார்வ இரத்த தானங்கள் மூலம் 100% இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது, மேலும் இலங்கை ஏற்கனவே 2014 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைந்துவிட்டது. இதுவரை, உலகம் முழுவதும் 70 நாடுகள் மட்டுமே இந்த நிலையை அடைந்துள்ளன.
இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் முக்கிய இயக்குனர்கள் நாட்டின் இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் இரத்த முகாம் ஏற்பாட்டாளர்கள், அவர்கள் "மிகவும் தூய்மையான இதயங்களைக் கொண்ட விசேட குழுவினர்" இரத்தமாற்ற சேவையை மேலும் நவீனமயமாக்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஸ்டெம் செல்கள் (stem cells) மற்றும் இரத்த பிளாஸ்மாவை (blood plasma) தானம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும், NAT சோதனை (Nucleic Acid Amplification Test) போன்ற நவீன ஆய்வக சோதனைகளை அறிமுகப்படுத்துவதற்கும், அனைத்து இரத்த வங்கிகளிலும் தரக் கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு செயற்பட்டு வருகிறது. AABB தரநிலைகள் மற்றும் GMP (சிறந்த உற்பத்தி நடைமுறைகள்) போன்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முறைகளை நிறுவுவதன் மூலம் இரத்தமாற்ற சேவைகளை மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன, தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் இரத்த தானம் செய்பவர்களும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு