சுதேச சுற்றுலா சேவை வழங்குநர்களின் செயல்திறன் அதிகரிப்பு மூலம் சுற்றுலாத் துறை மேம்பாடு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுதேச சுற்றுலா சேவை வழங்குநர்களின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் கிராமிய சுற்றுலாவை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்திக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 16ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் ’பட்டுப்பாதை ஒருங்கிணைப்பு மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற ’சீனா-இலங்கை-மாலைத்தீவு சுற்றுலா மன்றத்தின்’ அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

சுற்றுலாத் துறையை ஒரு பொருளாதார வளர்ச்சியாக மட்டுமன்றி, மக்களிடையேயான உறவுகள், கலாசாரப் புரிதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புடன் கூடிய தெற்காசியப் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதே இந்த மன்றத்தின் முதன்மை நோக்கமாகும்.

சீனா அதன் பரந்த மற்றும் பன்மைத்துவ நிலப்பரப்புகள், பல நூற்றாண்டுகள் பழமையான தளங்கள் மற்றும் மாறுபட்ட நவீன நகரங்களுடன் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

மாலைத்தீவுகள் அழகிய பவளப்பாறைகள், தெளிந்த நீர்நிலைகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஓய்வு விடுதிகளைக் கொண்ட தீவுகளைக் கொண்டுள்ளது.

இலங்கை புனித நகரமான அனுராதபுரத்திலிருந்து சீகிரிய கோட்டை வரை, தெற்கின் அழகிய கடற்கரைகள் முதல் மத்திய மலைநாட்டின் பனி படர்ந்த தேயிலைத் தோட்டங்கள் வரை தனித்துவமான அனுபவங்களை வழங்குகிறது.

எமது நாட்டில் வருமானம் ஈட்டுவது மட்டுமல்லாமல், எமது சூழல் முறைமைகளைப் பாதுகாக்கும், எமது கலாசாரங்களை மதிக்கும் மற்றும் எமது மக்களை வலுவூட்டும் ஒரு சுற்றுலாத் துறையை எவ்வாறு உருவாக்குவது என்பதில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

இந்த விடயத்தில் இலங்கைக்கு பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது விசா நடைமுறையை எளிதாக்குதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களைச் சீரமைத்தல், கூட்டுச் சந்தைப்படுத்தல் பிரசாரங்களை உருவாக்குதல் மற்றும் சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதற்கான பொதுவான தளங்களை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்ய முடியும்.

சுற்றுலாத் துறையை கிராமிய சமூகங்களைச் சென்றடையும், பெண் தொழில்முயற்சியாளர்களை ஆதரிக்கும் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் ஒன்றாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.

அரசாங்கம் ஏற்கனவே சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், சுதேச சுற்றுலா சேவை வழங்குநர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக, சுற்றுலாவின் நன்மைகள் நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்த பகுதிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் சமூக அடிப்படையிலான சுற்றுலாத் துறையை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சீனப் புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் நாம் இணைந்து பணியாற்றினால், எமது நாட்டின் சுற்றுலாத் துறையை உயர் மட்டத்திற்கு மேம்படுத்த முடியும்.

சுற்றுலாவின் உண்மையான பெறுமதி அதன் பொருளாதார நன்மைகளில் மட்டுமன்றி, மனித தொடர்புகளை வளர்க்கும் திறனிலும் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பரிவுணர்வு வளர்க்கவும், அமைதியைக் கட்டியெழுப்பவும் எமக்கு உதவுகிறது. பிளவுபட்ட உலகில், எல்லைகளைக் கடந்து, கலாசாரங்களைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து ஒன்றிணைவதற்கான வாய்ப்புகளை சுற்றுலா உருவாக்குகிறது என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனா மற்றும் மாலைத்தீவு தூதரகங்களின் முக்கியஸ்தர்கள், சீன சுற்றுலா அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் அதிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு