பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு. ரெமி லம்பேர்ட் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 12 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிரதமர் அவர்கள் பிரெஞ்சு தூதுவர் திரு. ரெமி லம்பேர்ட்டை வரவேற்றதுடன், இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து பாராட்டு தெரிவித்தார்.இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இராஜதந்திர உறவுகள் துறையில் உள்ள அதிகாரிகளுக்கான பிரெஞ்சு மொழிப் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் சிவில் சேவை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் முக்கிய துறைகளில் பிரெஞ்சு அரசாங்கம் செய்துள்ள குறிப்பிடத்தக்க முதலீட்டிற்கும், இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு, குறிப்பாக பாரிஸ் கிளப் மூலம், பிரெஞ்சு அரசாங்கம் இலங்கைக்கு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பிரெஞ்சு அரசாங்கத்தின் உறுதிப்பாடு மற்றும் ஆதரவை இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் திரு. லம்பேர்ட், மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் கொழும்பில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் பிரதித் தூதுக்குழு தலைவர் மேரி-நோயல் டூரிஸ் மற்றும் ஒத்துழைப்பு மற்றும் கலாசார ஆலோசகர் ஒலிவியா பெல்லெமியர் ஆகியோரும் கலந்து கொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஜே.எம்.ஐ.ஆர்.கே. ஜயசுந்தர, பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சாகரிகா போகஹவத்த மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் இசுரிகா கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்..
பிரதமர் ஊடகப் பிரிவு