இந்நாட்டுப் பிள்ளைகளைச் சைபர் அச்சுறுத்தல்கள், இணையவழி (Online) வன்முறைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காக ஒழுங்குபடுத்தல் மற்றும் கல்விசார் தீர்வுகளைக் கொண்ட விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் ஜூலை 21, பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
டிஜிட்டல் கல்விச் செயலணியின் (Digital Education Task Force) பல்துறைசார் செயற்குழுவொன்றின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விசேட கலந்துரையாடலில், பிள்ளைகள் டிஜிட்டல் களத்திற்குள் பிரவேசிப்பதால் பெற்றுக்கொள்ளும் நன்மைகளை உறுதிசெய்யும் அதேவேளை, இணையவழியில் ஏற்படும் தீங்குகளிலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வயதுக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்துக் கலந்துரையாடி வரும் பின்னணியில், இத்தகைய தடைகளை அறிமுகப்படுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள சிக்கலான செயன்முறைகள் குறித்தும், பிள்ளைகளைப் பாதுகாப்பதில் இத்தகைய நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
முதன்முதலில் இத்தகைய தடையை விதித்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, 85% பிள்ளைகள் வேறு வழிகள் ஊடாகத் தொடர்ந்து அத்தளங்களைப் (Platforms) பயன்படுத்தியமை தெரியவந்திருக்கின்றது.
அத்துடன், இத்தகைய தடைகள் மூலம் கற்றல் வாய்ப்புகளை இழத்தல், ஆபத்து நிறைந்த வேறு தளங்களின் பயன்பாடு அதிகரித்தல், சமூக உறவுகள் முறிவடைதல் மற்றும் அனைத்துப் பயனாளர்களினதும் தனிப்பட்ட பரிசீலனைக்கு ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் உட்பட ஏற்படக்கூடிய பாதகமான பக்கவிளைவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிள்ளைகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான தீங்குகள், அதாவது இணையவழி மூலம் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குதல், (Grooming and exploitation), பாதகமான உள்ளடக்கங்களுக்கு வழிவகுத்தல், தூக்கம் பாதிக்கப்படுதல், அடிமையாக்கும் இணையவழிச் சேர்ப்பாடுகள், உளவியல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏற்படும் எதிர்மறையான பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளுக்குத் திறம்படத் தீர்வுகாண்பதற்காகப் பல்வேறு கருவிகள் மற்றும் மூலோபாயங்களைக் கொண்ட ’புத்திசாலித்தனமான சேர்க்கை’ (Smart mix) பரிந்துரைக்கப்பட்டது.
இம்மூலோபாயங்களுள் டிஜிட்டல் எழுத்தறிவை உயர்த்துதல், பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பலப்படுத்துதல், இணையவழித் தளங்களின் பொறுப்புக்கூறலை அதிகரித்தல், அடிமையாக்கும் அம்சங்களைச் செயலிழக்கச் செய்தல், ’வடிவமைப்பிலேயே பாதுகாப்பு’ (Safety-by-design) குறித்துக் கவனம் செலுத்துதல் மற்றும் ஏற்படும் தீங்குகளுக்குத் திறம்படப் பதிலளித்தல் ஆகிய விடயங்கள் உள்ளடங்குகின்றன.
சிறுவர்களின் இணையவழிப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வுக்காகச் சான்றுகள் சார்ந்த அணுகுமுறை மற்றும் அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடனான விரிவான அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இச்செயன்முறைக்குச் சமாந்தரமாக, மாணவர்கள், கல்விமான்கள் மற்றும் பெற்றோர்களுக்காக இணையவழிப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடசாலை மட்டத்திலான வரைவு வழிகாட்டற்கோவையொன்றும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது.
வளர்ந்து வரும் ஆபத்துகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் மூலங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி, சர்வதேசக் கட்டமைப்புகள், தேசிய அனுபவங்கள் மற்றும் இலங்கையில் தற்போதுள்ள மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொருத்தமான அதிகாரிகளின் அனுமதியின் பின்னர், உரிய பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல் திட்டங்களுடன் இவ்வழிகாட்டல்கள் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் டிஜிட்டல் கல்விச் செயலணியின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு