சுவிட்சர்லாந்தின்(Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 23 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF): 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, 2026 ஜனவரி 19ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

"A Spirit of Dialogue" (உரையாடல் மனப்பாங்கு) எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் - 2026 கூட்டப்படவுள்ளது. இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர்.

இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு