பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

தொழில்துறையின் எதிர்காலமானது தொழினுட்ப அறிவில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, மாறாக நேர்மை, தம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் திறன், புத்தாக்கத் திறன் மற்றும் அரச சேவை மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றிலேயே தங்கியிருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தொழில்துறையின் எதிர்காலமானது தொழினுட்ப அறிவில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, மாறாக நேர்மை, தம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் திறன், புத்தாக்கத் திறன் மற்றும் அரச சேவை மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக்கொண்ட சந்ததியினர் மீதே தங்கியிருக்கின்றது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“எல்லைகளுக்கு அப்பால்சென்று, அடிவானத்திற்கு அப்பால் - உலகின் எதிர்காலத்தைச் சித்தரித்தல்” எனும் கருப்பொருளில் ஆகஸ்ட் 02 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை அளவையாளர் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய பங்களிப்பு மற்றும் தொழில்முனைவோர் விருது மற்றும் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கான கௌரவிப்பு விருது ஆகிய விருதுகள் இதன்போது வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

அளவையாளர் தொழில்துறையானது ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அடிப்படையாக அமையும் பிரதான தொழில்களுள் ஒன்றாகும். அவர்களின் பெரும்பாலான பணிகள் பொதுமக்களுக்கு நேரடியாகப் புலப்படாவிட்டாலும், நிலையான அபிவிருத்தி, திறமையான காணி முகாமைத்துவம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயற்படுத்துதல் உள்ளிட்ட தேசிய வளர்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. சிறப்பாகத் திட்டமிடப்பட்ட ஒவ்வொரு நகரத்திற்கும், பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கும், விவசாய அபிவிருத்திக்கும் மற்றும் பாதுகாப்பான காணி உறுதிக்கும் பின்னால் திறமையான அளவையாளர்களின் தொழினுட்ப அறிவே இருக்கின்றது.

இலங்கை முழுவதும் செயற்படுத்தப்படும் பிரதான உட்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஊடாகத் தேசிய அபிவிருத்திக்காக அளவையியல் துறையின் தேவை எவ்வாறானது என்பது தெளிவாகின்றது. பாதுகாப்பான காணி உரிமையையும் திறமையான காணி நிர்வாகத்தையும் உறுதிப்படுத்துவதற்காகத் நாடளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 50,000 காணித்துண்டுகளின் எல்லைக் கற்களை அடையாளப்படுத்தி, அரசாங்கத்தின் காணி உரிமை வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதும் அளவையியல் துறை மேற்கொண்டு வரும் முக்கியமானதொரு பணியாகும்.

வடமத்திய மற்றும் வட மாகாணங்களின் நீர்ப்பாசன அபிவிருத்தி மற்றும் நீர்வள மேலாண்மைக்காக அளவையாளர்களினால் 100 க்கும் மேற்பட்ட குளங்களின் அளவீட்டுப் பணிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து அனுராதபுர மாவட்டத்தின் ஹுருளுவேவ வரை நீரைக் கொண்டுசெல்லும் ரஜரட்ட கால்வாய் திட்டம் நீண்ட நிலத்தடிச் சுரங்கப்பாதையினைக் கொண்டுள்ளதுடன், அகழ்வாராய்ச்சிப் பணிகளின் துல்லியத்தன்மை மற்றும் தரத்தினை உறுதிப்படுத்துவதற்காக அளவையாளர்களினால் அதன் சீரமைப்பு மற்றும் சரிவுக் கோணங்கள் (gradient) தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அதிவேகப் பாதைகளுக்கான அளவீட்டுப் பணிகள் உள்ளிட்ட பிரதான உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அவர்களின் அறிவும் திறனும் அத்தியாவசியமானதாக இருக்கின்றன. அளவையாளர்களின் துல்லியமான அளவீடுகளினாலும் தொழினுட்ப அறிவினாலும் பிரம்மாண்டமான தேசியத் திட்டங்கள் பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன என்பதையே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

இன்று ஒரு அளவையாளரின் பங்களிப்பானது காணி எல்லைகளை அளவிடுவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. உலகம் முழுவதிலும் செயற்கைக்கோள் தொழினுட்பம், புவியியல் தகவல் முறைமைகள் (GIS), தொலைவு உணர்தல் (Remote Sensing), செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன் (Drone) தொழினுட்பம் மற்றும் டிஜிட்டல் வரைபடமாக்கலின் வளர்ச்சி ஆகியவற்றின் ஊடாக அரசாங்கங்கள் நகரங்களைத் திட்டமிடுதல், இயற்கை வளங்களை நிர்வாகித்தல், பேரிடர்களுக்கு பதிலளித்தல் மற்றும் அரச சேவைகளை வழங்கும் முறையை முற்றிலும் மாற்றியமைத்திருக்கின்றன. நம்பகமான புவிசார் தகவல்கள் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான தேசிய வளமாக மாறியிருக்கின்றன.

நாம் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் போது, திறமையான, வெளிப்படைத்தன்மைமிக்க மற்றும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட நிறுவனங்களை உருவாக்க வேண்டும். காணி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் நிர்வாகத்தினைப் பலப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. நீண்டகாலத் தேசியத் திட்டமிடலுக்குத் துல்லியமான அதே நேரத்தில், இலகுவாகப் பெறக்கூடிய காணி பற்றிய தகவல் முறைமையொன்று அத்தியாவசியமாகின்றது. அதற்காக அரச நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் இலங்கை அளவையாளர் நிறுவனம் போன்ற தொழில்சார் நிறுவனங்களுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு இருக்கவேண்டியது அவசியமாகும்.

வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடற்கரை அரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சவால்கள் ஊடாகக் காலநிலை மாற்றங்கள் எமது சமூகத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. எனவே புவிசார் அறிவியல்துறையின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கின்றது.

அண்மையில் ஏற்பட்ட ’திட்வா’ சூறாவளி (Cyclone Ditwah) மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கானது, வழமை நிலைக்குத் திரும்புவதன் உண்மையான அளவுகோல் என்பது மீளக் கட்டியெழுப்பும் வேகமல்ல, மாறாக நாம் மீளக் கட்டியெழுப்பியவற்றின் தரம், மீளெழும் திறன் மற்றும் நிலையான தன்மையே ஆகும் என்பதையே எமக்கு நினைவூட்டியது.

பெரும்பாலான வீடுகள், அரச கட்டிடங்கள், வீதிகள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளுக்குக் கடும் சேதங்கள் ஏற்பட்டதோடு பெரும்பாலும், பொருத்தமற்ற நிலத்தைத் தேர்வுசெய்தல், போதியளவு திட்டமிடலின்மை, தரக்குறைவான பலவீனமான கட்டுமானம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் குறித்துப் போதிய கவனம் செலுத்தாமை ஆகியவற்றின் காரணமாகவே ஏற்பட்ட அழிவுகள் மேலும் அதிகரித்தன.

ஆகையினால், சான்றுகளின் அடிப்படையிலான திட்டமிடலும், துல்லியமான வரைபடமாக்கலும், மீளெழும் திறன்கொண்ட உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்புதலும், பாதிப்பிற்குள்ளாகக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்காக தகவல்களுடன் கூடிய சரியான தீர்மானங்களை எடுப்பதற்கும் மிகவும் அவசியமானவையாகும்.

தொழில்துறையின் எதிர்காலமானது வலுவான தொழினுட்ப அறிவில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, மாறாக நேர்மை, மீண்டும் தம்மைத் தயார்படுத்திக்கொள்வதற்கான திறன், புத்தாக்கம் மற்றும் அரச சேவை மீதான வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு தலைமுறையிலேயே தங்கியுள்ளது என்பதே எனது நம்பிக்கையாகும்.

அவர்கள் புவிசார் தொழினுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), தொலைவு உணர்தல், ட்ரோன்கள், செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் கட்டமைப்புகள், Digital Twins (நிஜத்தின் மெய்நிகர் நகல்) மற்றும் தரவுப் பகுப்பாய்வுகளின் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் அதிவேகமாக மாற்றமடைந்துவரும் ஒரு தொழிற்துறைக்குள்ளேயே பிரவேசிக்கின்றனர். இந்த மாறிவரும் சூழலில் காலத்திற்கு ஏற்றவாறு நிலைத்திருக்க வேண்டுமாயின், இளம் தொழில்முறையாளர்கள் தங்களது தொழினுட்ப ஆற்றல்களைத் தொடர்ச்சியாகக் கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதோடு பொறியியலாளர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்" என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண, பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஏ. ருவன்திலக்க, தெஹிவளை கல்கிஸ்சை மாநகரசபையின் முதல்வரும் முன்னாள் மேலதிக நில அளவையாளர் நாயகமுமான பராக்கிரம சாந்த, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்க, மேலதிக நில அளவையாளர் நாயகம் பாக்யா பிரணாந்து, முன்னாள் நில அளவையாளர் நாயகம் ஷியாமாலீ பெரேரா ஆகியோர் உட்பட இலங்கை அளவையாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளைக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையேயன்றி, சலுகை அல்ல. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’நெண இசுர’ புலமைப்பரிசில், அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னெடுக்கும் திட்டத்திற்குப் பாரிய பக்கபலமாகும்.

கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளைக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையேயன்றி, அதுவொரு சலுகை அல்ல என்றும், மாணவர்கள் கல்வியை இடையில் கைவிட்டுச் செல்ல நேரிடுகின்ற சூழலை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ’நெண இசுர’ புலமைப்பரிசில் பாரிய பக்கபலமாக அமைகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆகஸ்ட் 02 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற அதிவணக்கத்துக்குரிய கல்போட சிறி ஞானிஸ்ஸர தேரர் நினைவாஞ்சலி "நெண இசுர - 2026" புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் ஆலோசனைக்கு அமைய, அதிவணக்கத்துக்குரிய கல்போட சிறி ஞானிஸ்ஸர தேரர் நினைவாஞ்சலி புலமைப்பரிசில் நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 460 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு க.பொ.த (உயர்தரக்) கல்வி நிறைவடையும் வரை இப்புலமைப்பரிசில் நிதி இந்த மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கி வைத்து, அங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

காலம் சென்ற பொடி ஹாமுதுருவோ (சின்னத் தேரர்), விகாரை என்ற எல்லைக்கு அப்பால் சென்று சமூகச் சேவையைத் தனது பிரதான பொறுப்பாகக் கொண்ட ஒரு மகத்தான தேரர் ஆவார்.

அவர் ஒரு பிக்கு என்ற வகையில் மத ரீதியான மற்றும் புத்த சாசன ரீதியான பணிகளை ஆற்றியதைப் போன்றே, நாட்டின் ஆதரவற்ற, பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாரிய நிழலாக இருந்து வந்தார்.

குறிப்பாக, தொழிற்கல்வி, இளைஞர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் நலன்புரி ஆகியவற்றிற்காக அவர் கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு ஆற்றிய சேவையை நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. இன்று செயற்படுத்தப்படும் இந்த ’நெண இசுர’ புலமைப்பரிசில் நிதியம் என்பதும் அவரது மனிதநேய மற்றும் தொலைநோக்குத் தரிசனத்தின் நேரடிப் பிரதிபலிப்பாகும்.

பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியிலும் தளராது உயர்தரம் வரை முன்னேறிச் செல்லும் இந்தப் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கு இப்புலமைப்பரிசில் உதவி பாரிய பக்கபலமாக அமையும்.

தற்போது நாட்டின் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தையும், புதிய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசாங்கம் என்ற வகையில் எங்களது தெளிவான தொலைநோக்கு என்னவென்றால், கல்வியானது சகல பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையே தவிர, அதுவொரு சலுகையாக இருக்கக்கூடாது என்பதேயாகும்.

நாட்டில் எத்தகைய பொருளாதாரச் சிரமங்கள் இருந்தபோதிலும், ஒரு பிள்ளையின் கல்விக்காகச் செய்யப்படும் முதலீடானது இந்த நாட்டின் எதிர்காலத்திற்காகச் செய்யப்படும் மிகச் சிறந்த, அதே நேரத்தில் மகத்தான முதலீடாகும். நமக்கு இருக்கும் மிக வலுவான வளம் மனிதவளமேயாகும். அரசாங்கம் என்ற வகையில் நாம் கல்வித்துறைக்காகப் பல முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காகக் கலைத்திட்டங்களைப் புதுப்பித்து, தற்போதுள்ள பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைமைக்குப் பதிலாகப் பிள்ளைகளின் திறமைகள், கண்காணிப்புத் திறன் மற்றும் சிந்தனைத் திறன் ஆகியவற்றை வளர்க்கும் நடைமுறைசார் கல்விச் சூழலை உருவாக்குவதே எமது பிரதான இலக்காகும்.

அத்தோடு, புத்தகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது, நாட்டிற்குத் தேவையான மனப்பாங்குகள் மற்றும் நடைமுறைச் சாத்தியமான கல்வி முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டியதே நமது தேவையாக இருக்கின்றது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு, கிராமப்புறப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்கவும் நாம் அதிக நிதியை ஒதுக்கியிருக்கின்றோம். ஏனெனில் நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்திருப்பினும் பிள்ளைகளுக்குச் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

அதேபோல், நீண்டகாலமாக முறையான திட்டமின்றிச் செயற்படுத்தப்பட்டு வந்த கல்வி முறைமையினால், கல்வி என்பது பரீட்சைகளை நடத்தும், பெறுபேறுகளை வெளியிடும் நிலைக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இன்று முறையான கால அட்டவணைக்கு அமைய முறைப்படி கல்வித்துறையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக எமக்கு உங்களது ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது.

நாம் எமது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாகப் பாடசாலைக் கல்வியின் முடிவில் எந்தவொரு பிள்ளையும் நடுத்தெருவில் கைவிடப்படாமல், தொழிற்கல்வி அல்லது உயர்கல்வியைக் கற்பதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் வாய்ப்புகளையும் விரிவாக்கி வருகின்றோம். கல்வித்துறையின் மனிதவளத்திற்காக முதலீடு செய்து, பாடசாலை மதிய உணவு, பாடநூல்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில் வேலைத்திட்டங்கள் ஊடாக வறிய குடும்பங்களின் பிள்ளைகள் கல்வியைக் கைவிட்டுச் செல்ல நிர்பந்திக்கும் சூழலை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

அந்த வகையில் ’நெண இசுர’ வேலைத்திட்டத்தை அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்திற்குக் கிடைக்கும் மற்றுமொரு பெறுமதிமிக்க ஆதரவாகவே நான் பார்க்கின்றேன். கங்காராம விகாரையும் ’நெண இசுர’ நிதியமும் இணைந்து மேற்கொள்ளும் இந்தச் சமூகச் சேவை, அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னெடுக்கும் திட்டத்திற்குப் பாரிய பக்கபலமாகும்.

காலம் சென்ற சின்னத் தேரரின் வேலைத்திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் கலாநிதி, வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் ஆற்றிவரும் மத மற்றும் சமூகப் பணிகளுக்காக அரசாங்கம் என்ற வகையில் எமது கௌரவத்தைத் தெரிவித்துக்கொள்வதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்கின்றேன்.

இதற்காக ஆலோசனைகளையும் உபதேசங்களையும் வழங்கிவரும் எமது கிரிந்தே அஸ்ஸஜி தேரர் அவர்களுக்கும், புலமைப்பரிசில் நிதியத்தின் அறங்காவலர் குழுவிற்கும், இதற்கு உதவி உபகாரங்களைச் செய்யும் அனைவருக்கும் எனது கௌரவத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பிள்ளைகள் பெறும் இப்புலமைப்பரிசில் என்பது வெறும் பணமோ அல்லது பௌதிக உபகரணங்களோ மாத்திரமல்ல. அது ஒட்டுமொத்த நாடும் உங்களது எதிர்காலத்தின் மீது வைக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாகும். எனவே எத்தனை சவால்கள் வந்தபோதிலும் உங்களது முயற்சியையும் அர்ப்பணிப்பையும் கைவிடாதீர்கள். கல்வியால் பலப்படுத்தப்பட்ட, இந்த நாட்டை நல்வழிப்படுத்தும், கருணையுள்ள, நற்பண்புமிக்க பிரஜைகளாக மாறுவதற்கு உறுதிபூணுங்கள், என பிரதமர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சியாம் மகா நிகாயவின் மகா நாயக்க தேரர் உட்பட மல்வத்து, அஸ்கிரி அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்த, ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, முப்படைத் தளபதிகள், தூதுவர்கள், கொடையாளிகள், புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பிரதமரைச் சந்தித்தார்

இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாகத் தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, ஜூலை மாதம் 31ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் சிறந்த இராணுவச் சேவை, முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் தாய்நாட்டிற்காகச் செய்த அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டினார்.

இதன்போது, தனது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தின் செயற்பாட்டுத் திறன்கள் மற்றும் தொழில்சார் தரங்களை உயர்மட்டத்திற்குக் கொண்டுவருவதற்காகத் தான் ஆற்றிய பங்களிப்பை முன்னாள் இராணுவத் தளபதி நினைவுகூர்ந்தார்.

சந்திப்பின் இறுதியில், பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் இராணுவத் தளபதியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகப் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறையிலிருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஐந்து மில்லியனாக உயர்த்துவதும், சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை 800,000 வரை அதிகரிப்பதும், 10 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்வதும் அரசாங்கத்தின் ’2030 தேசிய சுற்றுலாத் தொலைநோக்கின்’ பிரதான இலக்காகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஜூலை 31 அன்று நடைபெற்ற இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் (SLITHM) 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

1964 ஆம் ஆண்டில் ’இலங்கை ஹோட்டல் பாடசாலை’ என ஆரம்பிக்கப்பட்ட இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிபுணர்களை இத்துறைக்கு வழங்குவதற்குச் செயற்பாட்டு ரீதியிலான பங்களிப்பினைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது. பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் விருதுகளையும் பிரதமர் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதமர், ’டிட்வா’ சூறாவளி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் சுற்றுலாத்துறை பாராட்டுக்குரிய வகையில் மீண்டெழுந்துள்ளதாகவும், தற்போது சுற்றுலாத்துறையானது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் பிரதான சக்தியாக மாறியிருப்பதோடு, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம் சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வருகை தந்துள்ளதுடன், இத்துறையின் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 429,000 ஐக் கடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்கால இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தொழில்நுட்ப அறிவைப் போலவே, சுற்றுச்சூழல் பற்றிய பொறுப்புணர்வு, தொழில்முறை கௌரவம், மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தொழிற்துறையாளர்கள் இத்துறைக்குத் தேவைப்படுகின்றனர் என்பதையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு SLITHM நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய பிரதமர், பாதுகாப்பான பணிச்சூழலுக்குள் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சுற்றுலாப் பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, சுற்றுலா அமைச்சின் செயலாளர் தீர ஹெட்டிஆரச்சி, SLITHM தலைவர் வசந்த மந்திரீபால உள்ளிட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், இராஜதந்திரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் பட்டதாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளரும் UNDP ஆசிய பசிபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா அவர்கள் பிரதமரைச் சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா அவர்கள், ஜூலை மாதம் 31 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கையின் நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக UNDP அமைப்பு வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் பாராட்டினார்.

கடந்த அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முன்னுரிமைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் இதன்போது பிரதிநிதிகள் குழுவிற்குத் தெளிவுபடுத்தினார்.

அரச துறையின் மீளாய்வுச் செயற்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்ட முறைமைகளின் ஊடான ஆட்சேர்ப்புகள் மற்றும் அரச துறைக்குள் மனிதவள நிர்வாகத்தினை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், டிஜிட்டல் அரச உட்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் அரச சேவை வழங்கலைத் திறம்படச் செய்வதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசாங்கம் மேற்கொண்டுள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் நிர்வாக நடவடிக்கைகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்குமான பணிகளுக்கும் தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக விக்னராஜா அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை வலுப்படுத்துதல், நிலையான சுற்றுச்சூழல் வள மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை விரிவுபடுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துதல் என்பவற்றின் மீது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தல் மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வுக்காக நிதியைத் திரட்டுவதற்கான விரிவான காலநிலை நிதி மூலோபாயமொன்றைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கமளித்தார்.

எதிர்கால உலகின் உருவாகிவரும் வேலைவாய்ப்புச் சந்தைத் தேவைகளை அடையாளம் காண்பதற்கும், எதிர்காலப் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு ஏற்பத் திறன் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்குமாக UNDP அமைப்பினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ’Future Skills Study’ குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், இலங்கையின் ’பராமரிப்புப் பொருளாதாரத்தை’ (Care Economy) மேம்படுத்துதல், பெண்களின் உழைப்புப் பங்களிப்பை உயர்த்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல் குறித்தும் இருதரப்பிற்கும் இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கையின் UNDP வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, பிரதி வதிவிடப் பிரதிநிதி Marina Ten, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோருடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இரத்மலானை கந்தவளை வீதி மற்றும் வடிகாலமைப்பின் புனரமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறு பிரதமர் ஆலோசனை

பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கான பிரவேச வசதிகளை வழங்கும் இரத்மலானை கந்தவளை வீதி மற்றும் இருமருங்கிலுமுள்ள வடிகாலமைப்பின் புனரமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பிரதமர் அவர்களின் தலைமையில் ஜூலை மாதம் 31ஆம் திகதி மேல் மாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பிரதமர் இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

வீதியின் இருமருங்கிலுமுள்ள வடிகாலமைப்பில் காணப்படும் அடைப்புகள் காரணமாக மழைக்காலத்தில் வீதியும் இருமருங்கிலுமுள்ள கட்டிடங்களும் தொடர்ச்சியாக வெள்ளத்தில் மூழ்குவதுடன், இதனால் பிரதேசவாசிகள், நிறுவனங்களுக்கு வருகை தரும் சேவைப் பெறுநர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதும், வீதியைப் புனரமைப்பதன் மூலம் பாரிய பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் பல கிடைக்கப்பெறும் போதிலும், பல ஆண்டுகளாக முறையான பராமரிப்புகள் மேற்கொள்ளப்படாமையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த சட்டவிரோத நிர்மாணங்கள் கூட உருவாக்கப்பட்டு இருக்கின்றன என்பதும் இதன்போது தெரிய வந்தது.

இரத்மலானை கந்தவளை வீதியின் நீர் வடிந்தோடுதல் சரியான முறையில் இடம்பெறாமைக்குக் காரணமாக அமைந்துள்ள பிரதான காரணங்கள் சில இக்கலந்துரையாடலில் அடையாளம் காணப்பட்டதுடன், மழைநீர் வடிந்தோடத் தடையாக இருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்கள், வடிகாலமைப்பைச் சரியான முறையில் துப்புரவு செய்து பராமரிக்காமை மற்றும் தற்போது கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற மதகுகள் மற்றும் பாலங்கள் தற்போதைய தேவைகளுக்குப் போதுமானதாக, பெரிதாக இல்லாமை என்பன அவற்றுள் பிரதானமானவையாகும்.

அத்தோடு, நீர் பாய்ந்தோடும் வீதி மட்டத்திற்கும் வடிகாலமைப்பின் அமைவிடத்திற்கும் இடையிலான உயரத்தின் வேறுபாடு வித்தியாசமாக இருப்பதும், அப்பிரதேசத்தின் நிலத்தடி நீர் மட்டம் தரை மேற்பரப்பளவிற்கு மிகச் சமீபமாக இருப்பதும் இந்த வெள்ளப்பெருக்கு நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், சம்பந்தப்பட்ட காணிகளின் உரிமை தொடர்பில் நிலவும் பிரச்சினைகள், வடிகாலமைப்பு மற்றும் கால்வாய்களின் பராமரிப்புப் பணிகள் உரிய நிறுவனங்களால் சரியாக அடையாளம் காணப்படாமை என்பன இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பாரிய தடையாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, குறுகிய நிறுவன ரீதியான மற்றும் கடமை எல்லைகளுக்குள் முடங்கிவிடாமல், அனைத்து அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்கும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தொழிற்சாலைகளுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சேவையாற்றும் வகையில் தயாரிக்கப்படும் இறுதித் திட்டத்தில் அப்பிரதேசத்தின் வெள்ளக் கட்டுப்பாடும் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்கனவே இதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டதன் பின்னர், மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, இரத்மலானை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான சமன்மலீ குணசிங்க, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் வீதி உபகுழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தேவானந்த சுரவீர, மேல் மாகாணப் பிரதம செயலாளர், தெஹிவளை-கல்கிஸ்ஸ மேயர் உள்ளிட்ட இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெரும் எண்ணிக்கையிலான அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு