மீட்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இராஜதந்திர சமூகத்தினருக்கு அரசாங்கம் விளக்கம் அளித்தது; சுற்றுலாச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன, சர்வதேச ஆதரவு பலப்படுத்தப்பட்டுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2025 டிசம்பர் 04ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில், இலங்கைக்கான இராஜதந்திர சமூகத்தினருக்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. விஜித ஹேரத் ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை ஆரம்பித்து வைத்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை அடுத்து உடனடியாக ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியமைக்காக இராஜதந்திர சமூகத்தினருக்குத் தமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். சமீப ஆண்டுகளில் இலங்கை சந்தித்த மிகவும் கடுமையான அனர்த்தங்களில் ஒன்றை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், மக்களின் மீள் எழுச்சித் திறனும் அரச நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளும் காரணமாக விரைவான தீர்வுகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்தார். அனர்த்தத்தின்போது ஒரு சுற்றுலாப் பயணியேனும் பாதிக்கப்படவில்லை என்றும், முன்னர் அணுக முடியாத பகுதிகளையும் இப்போது அடைய முடிந்துள்ளது என்றும் அவர் உறுதிப்படுத்தினார். நிலங்கள் மற்றும் பொது இடங்கள் மீண்டும் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தப் பாரிய சுத்திகரிப்பு மற்றும் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்தோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பாடல்கள் சீர் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மீட்பு, அப்புறப்படுத்தல் மற்றும் அவசர உதவிகள் ஆகியவை முப்படையினர், பொலிஸ், அரச அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதமர் தெளிவுபடுத்தினார். உட்கட்டமைப்பை மறுசீரமைத்தல், மீள்குடியேற்றத் தேவைகள் மற்றும் நீண்டகால அனர்த்தத் தணிப்புப் பணிகள் உள்ளிட்ட தொடர்ச்சியான சவால் இருப்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், பங்காளி நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப, மனிதாபிமான மற்றும் நிதி உதவிகளையும் பாராட்டினார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட, அனர்த்தத்தின் தற்போதைய நிலை, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, வெளியேற்ற மையங்கள், சேத மதிப்பீடுகள் மற்றும் மீட்புத் திட்டமிடலுக்கான சர்வதேச நிறுவனங்களுடனான தற்போதைய ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். இந்தச் சூறாவளி ஏறத்தாழ முழு நாட்டையும் பாதித்ததுடன், 22 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சில பிரதேசங்கள் 540 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சியையும், மணிக்கு 70 கி.மீ. வரையிலான வேகத்திலான காற்றையும் பதிவு செய்தன. இதனால் பரவலான உட்கட்டமைப்புச் சேதங்கள் ஏற்பட்டன. வெள்ளத்தால் மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், 1.8 மில்லியன் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1.1 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப மதிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் 40,152 கர்ப்பிணிப் பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகள், வரைபடத் திறன்கள் மற்றும் காலநிலை பதிலளிப்புத் தொழில்நுட்பங்கள் போன்ற மேலதிக தொழில்நுட்ப ஒத்துழைப்பு முக்கியமானதாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அறிக்கை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. புத்திக ஹேவாவசம் அவர்கள், அனர்த்தத்தின் சுற்றுலாத் துறை மீதான தாக்கம் குறித்து இராஜதந்திர சமூகத்தினருக்கு விளக்கமளித்தார். பிரதான சுற்றுலாப் பிரதேசங்கள் தொடர்ந்து இயங்குவதாகவும், பாதுகாப்பு மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும், வரவிருக்கும் பருவத்தில் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பதற்கும், தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் குறுகிய கால நடவடிக்கைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இக்கூட்டத்தில் இலங்கை ஹோட்டல் சங்கத்தின் தலைவர் அசோகா ஹெட்டிகொட அவர்கள், மாரவிலை முதல் பாசிக்குடா வரையிலான கடற்கரையில் ரிசார்ட் ஹோட்டல்கள் இயங்கி வருவதாகவும், பல ஹோட்டல்கள் 60-65 சதவீத ஆக்கிரமிப்பைப் பெற்றிருப்பதாகவும் உறுதிப்படுத்தினார். அத்துடன், நுவரெலியாவில் உள்ள ஹோட்டல்கள் பகுதியளவில் இயங்குவதாகவும், சுற்றுலா மூலம் தொடர்ந்து ஆதரவு வழங்குவதே சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கக்கூடிய சிறந்த உதவி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதன்போது இராஜதந்திரிகள் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்குத் தமது இரங்கலைத் தெரிவித்ததுடன், உடனடி நிவாரண முயற்சிகள் மற்றும் நீண்டகால மறுசீரமைப்பு ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு உதவுவதற்குத் தமது அரசாங்கங்கள் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினர். அரசாங்கத்தின் வெளிப்படையான ஈடுபாட்டிற்கும் நெருக்கடியை நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக இராஜதந்திரிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, வினைத்திறன் மிக்க மீள் எழுச்சியை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அனர்த்தத் தயார்நிலை, காலநிலை மீள் எழுச்சித் திறன் மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்துதல் ஆகியவை இலங்கையின் எதிர்கால தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கேந்திரமாக அமையும் என்பதையும் இச்சந்திப்பில் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் திரு. அருண் ஹேமச்சந்திர, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திருமதி. அருணி ரணராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதமரின் ஊடகப் பிரிவு





