பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

உணவுப் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, அவை பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உணவுப் பாதுகாப்பு பற்றிய நடைமுறைகள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது, அவை பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாகவும் மாற்றப்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு, காலி முகத்திடல் ஹோட்டலில் இன்று (28) நடைபெற்ற, "உணவுத் துறையில் சுழற்சி பொருளாதாரத் திட்டம் (2024 - 2027)" எனும் தலைப்பிலான, உள்நாட்டு சுழற்சி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்குமான கல்வி குறித்த தேசிய கருத்தரங்கில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) நிதிப் பங்களிப்பில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் ’குளோபல் கேட்வே’ (Global Gateway) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கு பல தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்டிருந்தது. இதன்போது, குறிப்பாகப் பாடசாலைக் கல்வியில் சுழற்சி பொருளாதாரக் கருத்துருக்களை உள்வாங்குவதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும், கொள்கை வகுப்பாளர்கள், இளைஞர்கள், திறன் அபிவிருத்திப் பிரிவுகள் மற்றும் முறைசார் கல்விப் பங்குதாரர்களை உள்ளடக்கிய மூன்று குழுக்களின் ஊடாக சுழற்சி பொருளாதாரத்தை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், 2027ஆம் ஆண்டு வரை இலங்கையின் உணவுத் துறையில் நிலையான மற்றும் சுழற்சி பொருளாதார முறைகளை ஊக்குவிப்பதற்கும், அதற்கான கல்வித் தளத்தை உருவாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்:

கல்வி என்பது வெறும் பரீட்சைகளில் சித்தியடைந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல. உண்மையான கல்வி என்பது தனிமனிதனுக்குள் சமூகம் மற்றும் சூழல் மீதான பொறுப்புணர்வையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதேயாகும். குறிப்பாக, தற்காலச் சூழலில் எமக்கு மிகவும் முக்கியமானது ’சுழற்சி பொருளாதாரம்’ (Circular Economy), அதாவது வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு முறைமையே ஆகும்.

இன்று நாம் ’Circular Economy’ என அழைக்கும் இந்தக் கருத்துரு எமது முன்னோர்களுக்குப் புதிய ஒன்றல்ல. எனக்கு எனது பாட்டி நினைவுக்கு வருகின்றார். உணவு வீணாவதைக் குறைப்பதில் அவர் வியக்கத்தக்க திறமையைக் கொண்டிருந்தார். நாம் தூக்கி எறியும் பஸன் புரூட் (Passion Fruit) தோல்களிலிருந்தும் அவர் சுவையான ஜாம் மற்றும் சட்னிகளைத் தயாரித்தார். பால் போத்தல்களின் உலோக மூடிகளைக் கூட அவர் வீசுவதில்லை, அவற்றைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கும் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்குவார்.

இன்று சுப்பர் மார்க்கெட்களில் இலகுவாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை, அன்று அவர்கள் தமது கைகளாலேயே உருவாக்கிக்கொண்டார்கள். ’எதனையும் வீணாக்காதிருத்தல்’ என்பதே அவர்களின் வாழ்க்கை தத்துவமாக இருந்தது.

ஆயினும், இன்று காலம் மாறியுள்ளது. அன்று எமது பாட்டிமாருக்கு இவற்றைச் செய்ய நேரம் இருந்தது. இன்று பெண்கள் தொழிலுக்குச் செல்கிறார்கள், பிள்ளைகளின் பணிகளைக் கவனிக்கிறார்கள், அவர்கள் கடும் பணிச்சுமைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தால், நேரமின்மை காரணமாக வீணாகிப்போன காய்கறிகளையோ அல்லது பழைய தேங்காய்த் துண்டுகளையோ காண்பது சாதாரண விடயமாக மாறியிருக்கின்றது.

இது வெறும் பெண்ணின் அல்லது தாயின் பொறுப்பாக மட்டும் இருக்கக் கூடாது. ஒரு வீட்டிற்குள் இந்தப் பொறுப்புகளும் உழைப்பும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கங்கள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக அவை மாற வேண்டும். உணவைப் பரிமாறும்போது தமக்குத் தேவையான அளவை மட்டும் பெற்றுக்கொள்ளுதல், தனது தட்டைத் தானே கழுவுதல், வளங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுதல் போன்றவை வெறும் பாடங்களாக அன்றி, வாழ்க்கை முறைகளாக மாற வேண்டும்.

சுற்றுலாத்துறை போன்ற துறைகளுக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான இந்தக் கருத்துருக்கள் மிகவும் முக்கியமானவை. கல்வி அமைச்சு என்ற ரீதியில் நாம் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். வெறும் அறிவை மாத்திரமன்றி, மனப்பூர்வமாகச் சூழலையும் சமூகத்தையும் நேசிக்கும் பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் கலாநிதி ஜொஹான் ஹெஸே (Dr. Johann Hesse), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் கார்மென் மொரேனோ (H. E. Carmen Moreno), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி விம்லேந்திர ஷரன் (Vimlendra Sharan) உள்ளிட்ட தேசிய கல்வி நிறுவனம் (NIE), ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலகப் பொருளாதார மேடையில் இலங்கையின் புதிய மறுமலர்ச்சியைக் குறித்துக்காட்டிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் டாவோஸ் விஜயம் நிறைவு; சர்வதேச நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய பாதை திறப்பு.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் (Davos-Klosters) நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இலங்கையின் எதிர்காலப் பயணத் திசையையும் புதிய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையையும் உலகிற்குப் பெருமையுடன் எடுத்துக்கூறி, தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஜனவரி 23ஆம் திகதி நாடு திரும்பினார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொண்ட இந்த விஜயம், வெறும் இராஜதந்திரச் சந்திப்புகளுக்கு அப்பால், இலங்கை மீதான சர்வதேச நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பிய ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இவ்விஜயத்தின் போது, பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசாடோ கான்டா ஆகியோருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானவையாக அமைந்தன. இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயல்முறை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான நிதி முகாமைத்துவம் குறித்து இதன்போது விளக்கமளித்த பிரதமர், இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்கு அந்த நிறுவனங்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்.

இராஜதந்திர உறவுகள் ரீதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சர்வதேசப் பங்காளர்களுக்கான ஆணையாளர் ஜோசப் சிகேலா மற்றும் அவசரகால முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப் ஆகியோரைச் சந்தித்த பிரதமர், இலங்கையில் ஏற்பட்ட ’திட்வா’ (Ditwah) சூறாவளியை எதிர்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால ஒத்துழைப்பையும் அவர் இதன்போது உறுதிப்படுத்தினார்.

அதேபோன்று, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிர்வாகி அலெக்சாண்டர் டி குரூ உடனான சந்திப்பில், புதிய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு அமைய, நல்லாட்சி மற்றும் பலமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

உலகப் பொருளாதார மன்றத்தின் பிரதான பேச்சாளராகப் பிரதமர் கலந்துகொண்ட "Jobs Crisis in Emerging Markets" மற்றும் "Reskilling Revolution" ஆகிய அமர்வுகளில் முன்வைத்த கருத்துகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதப் பண்புகளுக்கும் இடையிலான ’கால இடைவெளியைத்’ தவிர்ப்பதற்கு, ’கற்கும் சமூகம்’ (Learning Society) ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் தர்க்கரீதியாக விளக்கினார்.

இலங்கையில் 50,000 இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் முழுமையான நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழிற்கல்வி மறுசீரமைப்புகள் குறித்துத் தெளிவுபடுத்திய பிரதமர், குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மாற்றங்களுக்கு மத்தியில் தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்காத வகையில், "கற்கும் சமூகம்" ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதன் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தார்.

உலகப் பெண் தலைவர்கள் பற்றிய "World Woman Davos Agenda 2026" மாநாட்டில், "மாறிவரும் உலகிற்குத் தலைமை தாங்கும் பெண்கள்" எனும் தலைப்பில் பிரதமர் ஆற்றிய உரையில், தலைமைத்துவம் என்பது வெறும் பதவிகளில் அமர்வது மட்டுமல்ல, மாறாக இருக்கும் கட்டமைப்புகளைப் புனரமைப்பதாகும் என்று குறிப்பிட்டார். குறிப்பாகப் பெண்கள் மேற்கொள்ளும் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளைப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு, இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு 20 பெண்கள் தெரிவு செய்யப்பட்டமை அனைவரையும் உள்ளடக்கிய ஆளுமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் உலகின் முன்னணி நிறுவனமான MAERSK இன் தலைவர் ரொபர்ட் உக்லா மற்றும் மென்சீஸ் (Menzies) விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரி ஆகியோருடன் இலங்கையின் துறைமுகங்கள், விநியோகச் சங்கிலி மற்றும் விமானச் சேவைத் துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தார்.

அத்தோடு, சுவிட்சர்லாந்தின் Hamilton Medical மற்றும் Variosystems ஆகிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விஜயம் செய்த பிரதமர், சுவிட்சர்லாந்தின் இரட்டைத் தொழிற்பயிற்சி (Dual Vocational Training) மாதிரியை இலங்கைக்குப் பொருத்தமான வகையில் அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தினார்.

பிராந்திய ஒத்துழைப்பைப் பலப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தைச் சந்தித்துக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பு குறித்துக் கலந்துரையாடியதோடு, பங்களாதேஷ் தலைமை ஆலோசகரின் விசேட பிரதிநிதி லட்பி சித்திக் அவர்களுடனும் இருதரப்பு உறவுகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

சுற்றுலாத்துறை தொடர்பாக யூரோ நியூஸ் (Euronews Hub) இல் நடைபெற்ற கலந்துரையாடலில், சுற்றுலாத்துறையை "மென் அதிகாரம்" (Soft Power) மற்றும் இராஜதந்திர மூலதனமாகப் பயன்படுத்துவதன் முக்கியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

தனது விஜயத்தின் நிறைவு அம்சமாகச் சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்முறைச் சமூகத்தினரையும், சுவிஸ் வர்த்தகப் பிரதிநிதிகளையும் சந்தித்த பிரதமர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் சர்வதேச முதலீட்டாளர்களும் வழங்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

பிரதமரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டாவோஸ் விஜயத்தின் மூலம், இலங்கை என்பது வெறும் உதவி பெறும் நாடு மட்டுமல்ல, மாறாக உலகின் புதிய போக்குகளை இனங்கண்ட, கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையைக் கொண்ட, மனித கௌரவத்தை மையமாகக் கொண்ட ஒரு முற்போக்கான நாடாகும் என்பதை உலக அரங்கில் உறுதிப்படுத்த முடிந்தது. இவ்விஜயத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நன்மதிப்பும் நம்பிக்கையும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை மேலும் பிரகாசமாக்க உதவும்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற பிரதமர், பல வெற்றிகரமான இராஜதந்திரச் சந்திப்புகளின் பின்னர் நாடு திரும்பினார்

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட தூதுக்குழுவினர், நான்கு நாள் வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இன்று (23) முற்பகல் நாடு திரும்பினர்.

ஜனவரி 19 முதல் 22ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டின் போது, பிரதமர் உலகின் முன்னணி அரச தலைவர்கள், சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்து, இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரப் பாதையை வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். இந்த விஜயத்தில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர் இணைந்திருந்தனர்.

இந்த விஜயத்தின் சிறப்பம்சமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசாடோ கான்டா (Masato Kanda) ஆகியோருடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார். மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவி உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிர்வாகி அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) ஆகியோருடனான சந்திப்புகளின் ஊடாகச் சர்வதேச உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும், இலங்கை மீதான உலகளாவிய நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் முடிந்தது.

உலகளாவிய ரீதியில் இலங்கையின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை விளக்கிய பிரதமர், ’World Women Davos Agenda 2026’ நிகழ்வில் விசேட உரையொன்றை நிகழ்த்தியதுடன், வளர்ந்து வரும் சந்தைகளில் வேலைவாய்ப்பு நெருக்கடி மற்றும் உலகளாவிய திறன் மேம்பாடு குறித்த உயர்மட்டப் பங்குதாரர் கலந்துரையாடல்களிலும் (Stakeholder Dialogues) தனது பங்களிப்பை வழங்கினார். அத்துடன், உலகளாவிய சுற்றுலா மன்றத்தின் (GTF) உயர்மட்ட அமர்வில் பங்கேற்று, இலங்கையின் சுற்றுலாத்துறையின் எதிர்கால நோக்கை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.

முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், AP Moller-Maersk உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தினருடன் கலந்துரையாடிய பிரதமர், சுவிட்சர்லாந்தின் சில தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கும் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

தனது விஜயத்தின் நிறைவாகச் சூரிச் (Zurich) விமான நிலையத்தில், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்களைச் சந்தித்த பிரதமர், நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கலந்துரையாடினார். இந்த வெற்றிகரமான இராஜதந்திரப் பணியின் மூலம், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்காகச் சர்வதேச ஒத்துழைப்பின் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிக்கப் பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவினரால் முடிந்துள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு

சுவிட்சர்லாந்து மற்றும் டாவோஸ் இலங்கை வர்த்தகச் சமூகத்தினருடன் பிரதமர் சந்திப்பு

டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் World Economic Forum வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தின் உறுப்பினர்களையும், அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வர்த்தகத் தலைவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கூட்டுறவைப் பலப்படுத்துதல், நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒத்துழைப்புக்கான நடைமுறைச் சாத்தியமான வழிகளை ஆராய்தல் ஆகிய விடயங்கள் குறித்து இச்சந்திப்புகளின் போது கவனம் செலுத்தப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்சார் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, வர்த்தகத் தொடர்புகளை வளர்ப்பதிலும், முதலீட்டு வாய்ப்புகளை இலகுபடுத்துவதிலும், சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதிலும் அவர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கினைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தொழில்முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சர்வதேச வர்த்தக வலையமைப்புடன் இலங்கையின் ஈடுபாட்டைப் பலப்படுத்துதல் ஆகியவற்றிலும் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

அத்தோடு, சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தினருடனான சந்திப்பில், இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் போக்கு, மறுசீரமைப்பு முன்னுரிமைகள் மற்றும் முதலீட்டிற்கான முக்கிய துறைகள் குறித்துப் பிரதமர் விளக்கமளித்தார். பொருளாதார ஸ்திரத்தன்மை, முன்கூட்டியே கணிக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பற்றியும் இதன்போது அவர் எடுத்துரைத்தார்.

சேவைத் துறை வளர்ச்சி, மூலதனச் சந்தைகள், நிதித் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டது. அத்துடன், இந்த ஈடுபாடுகளை முதலீட்டு ஆர்வம், துறை சார்ந்த கூட்டுறவு மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு போன்ற உறுதியான பெறுபேறுகளாக மாற்றுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

மறுசீரமைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேசக் கூட்டுறவு ஆகியவற்றின் ஊடாகத் தொடர்ச்சியான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை வர்த்தகத் தரப்பினரின் தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தல் வேண்டும்.” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி, ’World Woman House’ உலகப் பெண்கள் இல்லத்தில் நடைபெற்ற World Woman Davos Agenda 2026 நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

“Women Leading the Changing Global Order” (மாற்றம் கண்டு வரும் உலகளாவிய ஒழுங்குமுறைகளை வழிநடத்தி வரும் பெண்கள்) என்ற கருப்பொருளின் கீழான உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய பிரதமர், உலகெங்கிலும் உள்ள பெண்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் அதிகளவில் தங்களது ஈடுபாட்டை உறுதிப்படுத்தி வருகின்ற போதிலும், அவர்களின் பங்களிப்புகள், குறிப்பாக ஊதியமற்ற பராமரிப்புப் பணிகள், முறைசாரா உழைப்பு மற்றும் விவசாயத் துறைகளில் தொடர்ச்சியாகக் கட்டமைப்பு ரீதியாகக் குறைத்து மதிப்பிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளில் இருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல, அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். தலைமைத்துவத்தில் இருக்கும் பெண்கள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக அரசியலில் அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், Character Assassination (தன்மைப் படுகொலை) மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டப்படுதல் போன்றவை, தலைமைத்துவத்தை இலக்காகக் கொண்ட பெண்கள் உட்படத் தகுதியுள்ள பலரை அரசியலிலிருந்து விலகச் செய்கின்றன அல்லது பங்கெடுப்பதைத் தவிர்க்கச் செய்கின்றன. இது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆணாதிக்கக் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்துகின்றது.

இந்தத் தடைகளை அகற்றுவதென்பது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது மாத்திரமல்ல, மாறாக, பெண்கள் தன்னாதிக்கம், அதிகாரம் மற்றும் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைப்பதேயாகும்.

மக்களின் மீண்டெழுதலுக்கான உத்வேகமும், அரசியல் அர்ப்பணிப்பும் இணையும்போது எதனைச் சாதிக்க முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணமாகும். எமது தற்போதைய அனைவரையும் அரவணைக்கும் அரசாங்கத்தின் கீழ், அரசியல் பிரதிநிதித்துவத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் முறையாக 20 பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அர்ப்பணிப்பு வெறும் தொலைநோக்கினை மாத்திரம் பிரதிபலிக்கவில்லை; இது மேலும் அரவணைப்புமிக்க ஒரு நிர்வாகத்தை நோக்கிய மாற்றத்தையே அடையாளப்படுத்துகின்றது.

தலைமைத்துவம் என்பது ஏற்கனவே உள்ள இடங்களில் அமர்வது மாத்திரமல்ல, மாறாக அந்த அமைப்புகளையே மறுசீரமைப்பதாகும் எனக் கூறிய பிரதமர், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், எதிர்கால உலக ஒழுங்கை வடிவமைக்கும் கொள்கைகளில் பெண்களும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களும் வெறும் பங்காளர்களாக மாத்திரமன்றி, அதன் முதன்மை வடிவமைப்பாளர்களாக இருப்பதை உறுதி செய்யுமாறு உலகளாவிய தரப்பினருக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலகப் பொருளாதார மன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியம், UNDP மற்றும் பெருநிறுவனத் தலைவர்களுடன் பிரதமர் உயர்மட்டச் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் ஜனவரி 21ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் உலகளாவிய தனியார் துறைப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொண்டார்.

தயார்நிலை மற்றும் நெருக்கடி முகாமைத்துவத்திற்கான ஐரோப்பிய ஆணையாளர் ஹட்ஜா லாபிப் (Hadja Lahbib) அவர்களைச் சந்தித்த பிரதமர், ’திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் வழங்கிய ஆதரவிற்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், உலக வங்கியின் ’GRADE’ அறிக்கையின் முக்கிய முடிவுகள் குறித்து ஆணையாளருக்கு விளக்கமளித்த பிரதமர், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மீட்சி முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவைக் கோரினார்.

அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ள அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) அவர்களைச் சந்தித்த பிரதமர், இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டியதோடு, வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐக்கிய நாடுகள் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் பாராட்டு தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் பெற்ற மக்கள் ஆணையைத் தொடர்ந்து, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன், சமூகப் பாதுகாப்பு முறைமைகளைப் பலப்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்குமான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு விசேட முக்கியத்துவம் அளித்து, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது. சிங்கப்பூரின் தொழிற்முறை கல்வியை மேம்படுத்துவதில் அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் ஆற்றிய முக்கிய பங்கைக் கருத்திற்கொண்டு, அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதில் இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தைப் பிரதமர் இதன்போது வெளிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே இந்த அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பொருட்டு, சாத்தியமான கண்காணிப்புக் கள விஜயம் ஒன்றின் அவசியம் குறித்தும் இக்கலந்துரையாடலின்போது முன்மொழியப்பட்டது.

மேலும், ’A.P. Moller Holding’ நிறுவனத்தின் தலைவர் ரொபர்ட் எம். உக்லா (Robert M. Uggla) அவர்களையும் பிரதமர் சந்தித்தார். இந்த உரையாடலானது தனியார் துறையுடனான ஈடுபாடு மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைந்திருந்தது.

இந்தச் சந்திப்புகள் இலங்கையின் மீட்சி, அபிவிருத்தி மற்றும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சர்வதேசப் பங்காளிகள் மற்றும் உலகளாவிய தரப்பினருடன் இலங்கை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இராஜதந்திர உறவுகளைப் பிரதிபலிக்கின்றன.

பிரதமர் ஊடகப் பிரிவு