பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைப் பிரதமரைச் சந்திப்பு

திருச்சீமையின் (Holy See – Vatican) அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடனான உறவுகளுக்கான செயலாளரும் (திருச்சீமையின் வெளிவிவகார அமைச்சர்) பேராயர் Paul Richard Gallagher அவர்கள், நவம்பர் 3ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, கல்வி, நல்லிணக்கம் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு அமைய, அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்துப் பிரதமர் விளக்கமளித்தார். கல்விச் சீர்திருத்தத்தைப் பாராட்டிய பேராயர் Gallagher, “கல்வியே அமைதி, நம்பிக்கை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய பெயர்” என்று குறிப்பிட்டதோடு, திருச்சீமையின் உலகளாவிய முயற்சியான உலகக் கல்விப் பொன்விழா குறித்தும் எடுத்துரைத்தார்.

போருக்குப் பின்னர் உருவாகி இருக்கும் நல்லிணக்கத்தைப் பற்றி வலியுறுத்திய பிரதமர், தற்போதைய அரசாங்கத்தின் அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளை, அனைவரையும் உள்வாங்கிய, பன்மைத்துவ அணுகுமுறையைப் பற்றி எடுத்துரைத்தார். நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தொடர்ச்சியான உரையாடல் மற்றும் புதிய சிந்தனை ஆகியன தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையைப் பாராட்டிய பேராயர் Gallagher, சர்வதேச நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு நீதி அமைப்புகள், நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

சந்திப்பின் முடிவில், திருச்சீமையின் திருத்தந்தை Leo XIV அவர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வது குறித்துப் பேராயர் Gallagher முன்மொழிந்தார். இந்தப் பரிந்துரையை வரவேற்றப் பிரதமர், உத்தியோகபூர்வ அழைப்பை விடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகத் தெரிவித்ததோடு, திருச்சீமைக்கு விஜயம் செய்யுமாறு பேராயர் Gallagher விடுத்த அழைப்பையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

வத்திக்கான் தூதுக்குழுவில் கொழும்பில் அமைந்துள்ள திருச்சீமைத் தூதரகத்தின் பொறுப்பாளர் கௌரவ அருட்தந்தை Monsignor Roberto Lucchini, திருச்சீமை அரச செயலகத்தின் இரண்டாம் செயலாளர் Rev. Monsignor Tomislav Zubac ஆகியோரும் உள்ளடங்கி இருந்தனர். இலங்கையின் சார்பாகப் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திரு. சுகீஷ்வர குணரத்ன மற்றும் பிரதிப் பணிப்பாளர் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) திருமதி அனோத்யா சிரஸ்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு.

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme - Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் இன்று (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்தனர்.

1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் (WFP), இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை (Resilience) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது.

2023 - 2027ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) வியூகத் திட்டம் (Strategic Plan) மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்திற்கமைய உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. எம்.எச்.ஏ.எம். ரிஃப்லான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அருவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை பிரதமர் கண்காணித்தார்.

மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப் பார்வையிட, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஒக்டோபர் 26ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆராச்சி, அசித நிரோஷன், அருண பனாகொட, தேவானந்த சுரவீர, அஜித் கிஹான், ஹிருணி விஜேசிங்க, கயான் ஜானக, பைசல் மொஹமட் ஆகியோரும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தின் பொது மக்கள், சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரசாங்கமும், தனியார் துறையும், பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு எச்.பி. பியசிறி அரச ஆயுர்வேத வைத்தியசாலை ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஒக்டோபர் 25ஆம் திகதி இடம்பெற்ற, தெய்யந்தர, பெல்பாமுல்லயில் அமைந்துள்ள எச்.பி. பியசிறி அரச ஆயுர்வேத வைத்தியசாலைக்காகக் கட்டப்பட்ட புதிய மூன்று மாடி சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த புதிய மூன்று மாடிக் கட்டடத் தொகுதியானது, Phenomenal Trading நிறுவனத்தின் அதிபதி தேசமான்ய எச்.பி. பியசிறி அவர்களினதும், அவரது பிள்ளைகளினதும் முழுமையான நிதி நன்கொடையுடன் கட்டப்பட்டது.இந்த சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கும் பரிசுப் பத்திரத்தை தேசமான்ய எச்.பி. பியசிறி அவர்கள் பிரதமரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், அரசாங்கமும், தனியார் துறையும், பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இந்த வைத்தியசாலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனத் தெரிவித்ததோடு. சமூகப் பொறுப்புடன் செயற்படும் வர்த்தகர்கள் பற்றிய முன்மாதிரியை எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்கத்தக்க திறமையான வர்த்தகர்களின் தேவை இந்தக் காலகட்டத்தில் இருந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இந்த மூன்று மாடிக் கட்டடத் தொகுதியை முழுமையாக நிர்மாணித்து அதனை நன்கொடையாக வழங்கியதன் மூலம் ஆற்றிய சேவைக்காக தேசமான்ய எச்.பி. பியசிறி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள்,

"இன்று இந்த வைத்தியசாலையை நிர்மாணித்த எச்.பி. பியசிறி அவர்களின் கனவு, 2030ஆம் ஆண்டிற்குள் புரியாது இந்தக் கிராமப் பிரதேசத்தைச் சுற்றுலாத் துறையின் மூலம் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே ஆகும். ஆயுர்வேதத்தை சுற்றுலாத் துறையுடன் இணைத்து, ஆரோக்கிய சுற்றுலாத் துறையாக (wellness tourism) அதனை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் இது ஒரு சிகிச்சையாகவும், பராமரிப்பாகவும் அமைகின்றது. இது நமது நாட்டை உலகளவில் மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய ஒரு தொழில்முயற்சி சார்ந்த கருப்பொருளாகும். அதற்கு பியசிறி அவர்களின் நோக்கு மிகவும் முக்கியமானதாகும். அத்தோடு ஆயுர்வேத வைத்தியசாலை என்பது அரசாங்க வைத்தியசாலையைப் போலவே மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். அந்த வகையில் இந்த பெருமதிமிக்க வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு பியசிறி அவர்கள் தமது பங்கை நேர்த்தியாக நிறைவேற்றி இருக்கின்றார். அவரது பணியின் மிகுதியை நிறைவு செய்ய அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கின்றோம்," என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ மகா சங்கத்தினர், தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மேத்தகே உட்பட விருந்தினர்களும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

“இலங்கையின் தேசிய மரபுரிமைகள் நம் அனைவருக்கும் சொந்தமானதாகும், அதனைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும்.”

ஒக்டோபர் 25ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற ’கலாநிதி ரொனால்ட் சில்வாவிற்கு அப்பால் - இலங்கையின் கலாசார பாரம்பரியத்தில் புதிய திசைகளை வகுத்தல்’ எனும் தொனிப்பொருளிலான 2025 தேசிய மாநாட்டின் ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.

ஒக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும், மத்திய கலாசார நிதியம் மற்றும் சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் பற்றிய சபை (ICOMOS) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்தத் தேசிய மாநாடு, மூத்த புத்திஜீவிகளுக்கும், தொழில்சார் வல்லுநர்களுக்கும், வளர்ந்து வரும் அறிஞர்களுக்கும் இலங்கையின் கலாசார மரபுரிமைகள் குறித்து அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுவதற்கும், கல்விசார் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு மேடையை உருவாக்குகின்றது.

தேசிய மரபுரிமைகளுக்கான நிலையான நிதி வழங்குதலின் முன்னோடியாகச் செயற்பட்டு, சர்வதேச தரத்திலான முன்மாதிரியாகத் திகழ்ந்த, தொல்பொருள் ஆய்வாளர், நிர்வாகி மற்றும் நிறுவனத்தை கட்டியெழுப்பியவர் என்ற வகையில், இலங்கையின் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய கலாசார நிதியத்தை ஸ்தாபிப்பதில் கலாநிதி ரொனால்ட் சில்வா அவர்கள் ஆற்றிய காலத்தால் அழியாத சேவையை, மத்திய கலாசார நிதியத்தின் தற்போதைய தலைவரான பிரதமர் அவர்கள் பாராட்டினார்.

இதன்போது, ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், ’எமது அரசாங்கத்தின் நோக்கம், இனத்துவம் , மதம், மொழி அல்லது இருப்பிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாத சகல குடிமகனின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே ஆகும்,’ எனத் தெரிவித்தார்.

இலங்கையின் மரபுரிமையானது அனைவருக்கும் சொந்தமானது என்றும், அதைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்திய பிரதமர், நாடெங்கும் இருக்கின்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகத் தக்க மரபுரிமைத் தலங்களைப் பாதுகாப்பதற்கு, புதிய தொழில்நுட்பம், டிஜிட்டல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலையை மாற்றியமைக்கும் உத்திகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மத்திய கலாசார நிதியம் (CCF), நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச சபை (ICOMOS) ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் பணிகளைப் பாராட்டிய பிரதமர் அவர்கள், அவற்றின் ஒத்துழைப்பு, இலங்கையின் மரபுரிமைகள் எதிர்நோக்கும் உலகளாவிய சவால்களிலிருந்து பாதுகாப்பதற்கும், எதிர்கால சந்ததியினருக்காக கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கும் உதவும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பொலன்னறுவையில் அமைந்திருக்கும் ’திவங்க உருவக் கூடம்’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு அதன் பிரதி பிரதமருக்கு வழங்கப்பட்டது. அத்துடன், நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச சபையின் (ICOMOS) முதலாவது ஆசியத் தலைவராக கலாநிதி ரொனால்ட் சில்வா தெரிவு செய்யப்பட்டதன் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த தபால் முத்திரையும், முதல்நாள் தபால் உறையும் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் சேனவி, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலன் கூரே, வெளிநாட்டுத் தூதுவர்கள், திருமதி ரொனால்ட் சில்வா மற்றும் அறிஞர்கள், தொழில்சார் வல்லுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உள்நாட்டுத் கைத்தொழில் துறையினைப் பலப்படுத்த அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது கட்டாயத் தேவையாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

உள்நாட்டுத் கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம் என்றும், உள்நாட்டு தொழில்முனைவோரை (Entrepreneurs) மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

ஒக்டோபர் 23ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற “2025 CNCI கைத்தொழில் மற்றும் சேவை மதிப்பீட்டு விருது விழாவில்” கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனத்தினால் (Ceylon National Chamber of Industries - CNCI) கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விருது விழாவின் நோக்கம், இலங்கையின் கைத்தொழில் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை இனங்கண்டு அவற்றை ஊக்குவிப்பதாகும்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"நாட்டின் கைத்தொழில் துறையை பலப்படுத்துவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், இறக்குமதிகளைக் குறைத்தல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு நேரடியான பங்களிப்பைச் செய்கின்றது.

கைத்தொழில் துறையின் கொள்ளளவு அபிவிருத்தி (Capacity Development), புத்தாக்கங்களை (Innovations) ஊக்குவித்தல், விரிவாக்கத்தை இலகுபடுத்துதல் மற்றும் புதிய சந்தைகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

பலமான போட்டித்தன்மை மிக்க கைத்தொழில் தளம் என்பது பொருளாதார ரீதியில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு முன்னுரிமை மட்டுமல்ல, அது ஒரு தேசியத் தேவையாகும்.

நிதி, தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் அபிவிருத்திக்கான வழிகளை விரிவுபடுத்தி கைத்தொழில் அபிவிருத்திக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.

கைத்தொழில் துறையில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குதலை நியாயமான பொருளாதார உத்தியாகவும் பயன்படுத்தப்படலாம்.

உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களின் வெற்றி மூலம் எமது தேசியப் பொருளாதாரத்தின் அத்திவாரம் வலுப்பெறுகிறது. உற்பத்தி, முகாமைத்துவம், புத்தாக்கம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய போதிலும், அவர்களின் பங்களிப்பு பெரும்பாலும் சரியாக இனங்காணப்படுவதில்லை. ஊழியர்கள், முகாமையாளர்கள் அல்லது தொழில்முயற்சியாளர்கள் என பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலம், உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்கம் மூலம் ஒட்டுமொத்த கைத்தொழில் சூழலியல் அமைப்பையும் (Industrial Ecosystem) பலப்படுத்த உதவுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், கொள்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்கள் மூலம் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். துரிதக் கடன் வசதி மற்றும் நிதிச் சேவைகள், தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி, சமமான சேவைக்குச் சமமான ஊதியம் வழங்குதல், பெண்களை மையமாகக் கொண்ட தொழில்முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் தலையிடும்.

தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பைக் கட்டுப்படுத்தும் ஊதியம் வழங்கப்படாத பராமரிப்பு (Unpaid Care) போன்ற தடைகளை நீக்குவதற்கும், பரந்த மேம்பாட்டிற்காக பால்நிலைக்குப் பதிலளிக்கும் கைத்தொழில் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. தேசிய அபிவிருத்தியில் தொழில்முயற்சியாளர்களின் பங்கை நாம் பாராட்ட வேண்டும். அவர்களின் படைப்பாற்றலும் உறுதிப்பாடும் பொருளாதார முன்னேற்றத்தின் அத்தியாவசிய காரணிகளாகும் என்றும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

ஹேகாப் PLC (Hekab PLC) மற்றும் மாத்தறை ஃபிரீலன் என்டர்பிரைசஸ் (பிரைவேட்) லிமிடெட் (Matara Freelan Enterprises (Pvt) Ltd) ஆகிய நிறுவனங்களுக்கு இரண்டு பளிங்கு விருதுகளும் (Crystal Awards), குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு 10 விசேட விருதுகளும் பிரதமர் வழங்கி வைத்தார்.

இவ்விழாவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்நெத்தி, பிரதி அமைச்சர் திரு. சதுரங்க அபேசிங்க, CNCI இன் தலைவர் திரு. பிரதீப் கஹவலகே உள்ளிட்ட விசேட அதிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு