பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தல் வேண்டும்.” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி, ’World Woman House’ உலகப் பெண்கள் இல்லத்தில் நடைபெற்ற World Woman Davos Agenda 2026 நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

“Women Leading the Changing Global Order” (மாற்றம் கண்டு வரும் உலகளாவிய ஒழுங்குமுறைகளை வழிநடத்தி வரும் பெண்கள்) என்ற கருப்பொருளின் கீழான உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய பிரதமர், உலகெங்கிலும் உள்ள பெண்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் அதிகளவில் தங்களது ஈடுபாட்டை உறுதிப்படுத்தி வருகின்ற போதிலும், அவர்களின் பங்களிப்புகள், குறிப்பாக ஊதியமற்ற பராமரிப்புப் பணிகள், முறைசாரா உழைப்பு மற்றும் விவசாயத் துறைகளில் தொடர்ச்சியாகக் கட்டமைப்பு ரீதியாகக் குறைத்து மதிப்பிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளில் இருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல, அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். தலைமைத்துவத்தில் இருக்கும் பெண்கள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக அரசியலில் அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், Character Assassination (தன்மைப் படுகொலை) மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டப்படுதல் போன்றவை, தலைமைத்துவத்தை இலக்காகக் கொண்ட பெண்கள் உட்படத் தகுதியுள்ள பலரை அரசியலிலிருந்து விலகச் செய்கின்றன அல்லது பங்கெடுப்பதைத் தவிர்க்கச் செய்கின்றன. இது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆணாதிக்கக் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்துகின்றது.

இந்தத் தடைகளை அகற்றுவதென்பது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது மாத்திரமல்ல, மாறாக, பெண்கள் தன்னாதிக்கம், அதிகாரம் மற்றும் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைப்பதேயாகும்.

மக்களின் மீண்டெழுதலுக்கான உத்வேகமும், அரசியல் அர்ப்பணிப்பும் இணையும்போது எதனைச் சாதிக்க முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணமாகும். எமது தற்போதைய அனைவரையும் அரவணைக்கும் அரசாங்கத்தின் கீழ், அரசியல் பிரதிநிதித்துவத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் முறையாக 20 பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அர்ப்பணிப்பு வெறும் தொலைநோக்கினை மாத்திரம் பிரதிபலிக்கவில்லை; இது மேலும் அரவணைப்புமிக்க ஒரு நிர்வாகத்தை நோக்கிய மாற்றத்தையே அடையாளப்படுத்துகின்றது.

தலைமைத்துவம் என்பது ஏற்கனவே உள்ள இடங்களில் அமர்வது மாத்திரமல்ல, மாறாக அந்த அமைப்புகளையே மறுசீரமைப்பதாகும் எனக் கூறிய பிரதமர், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், எதிர்கால உலக ஒழுங்கை வடிவமைக்கும் கொள்கைகளில் பெண்களும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களும் வெறும் பங்காளர்களாக மாத்திரமன்றி, அதன் முதன்மை வடிவமைப்பாளர்களாக இருப்பதை உறுதி செய்யுமாறு உலகளாவிய தரப்பினருக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலகப் பொருளாதார மன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியம், UNDP மற்றும் பெருநிறுவனத் தலைவர்களுடன் பிரதமர் உயர்மட்டச் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் ஜனவரி 21ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் உலகளாவிய தனியார் துறைப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொண்டார்.

தயார்நிலை மற்றும் நெருக்கடி முகாமைத்துவத்திற்கான ஐரோப்பிய ஆணையாளர் ஹட்ஜா லாபிப் (Hadja Lahbib) அவர்களைச் சந்தித்த பிரதமர், ’திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் வழங்கிய ஆதரவிற்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், உலக வங்கியின் ’GRADE’ அறிக்கையின் முக்கிய முடிவுகள் குறித்து ஆணையாளருக்கு விளக்கமளித்த பிரதமர், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மீட்சி முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவைக் கோரினார்.

அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ள அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) அவர்களைச் சந்தித்த பிரதமர், இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டியதோடு, வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐக்கிய நாடுகள் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் பாராட்டு தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் பெற்ற மக்கள் ஆணையைத் தொடர்ந்து, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன், சமூகப் பாதுகாப்பு முறைமைகளைப் பலப்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்குமான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு விசேட முக்கியத்துவம் அளித்து, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது. சிங்கப்பூரின் தொழிற்முறை கல்வியை மேம்படுத்துவதில் அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் ஆற்றிய முக்கிய பங்கைக் கருத்திற்கொண்டு, அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதில் இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தைப் பிரதமர் இதன்போது வெளிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே இந்த அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பொருட்டு, சாத்தியமான கண்காணிப்புக் கள விஜயம் ஒன்றின் அவசியம் குறித்தும் இக்கலந்துரையாடலின்போது முன்மொழியப்பட்டது.

மேலும், ’A.P. Moller Holding’ நிறுவனத்தின் தலைவர் ரொபர்ட் எம். உக்லா (Robert M. Uggla) அவர்களையும் பிரதமர் சந்தித்தார். இந்த உரையாடலானது தனியார் துறையுடனான ஈடுபாடு மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைந்திருந்தது.

இந்தச் சந்திப்புகள் இலங்கையின் மீட்சி, அபிவிருத்தி மற்றும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சர்வதேசப் பங்காளிகள் மற்றும் உலகளாவிய தரப்பினருடன் இலங்கை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இராஜதந்திர உறவுகளைப் பிரதிபலிக்கின்றன.

பிரதமர் ஊடகப் பிரிவு

சுற்றுலாத்துறை என்பது ஒரு மென்மையான அதிகாரக் கருவியாகுமென டாவோஸில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பிரதமர் வலியுறுத்தல்.

உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டங்களுக்கு இணையாக, ஜனவரி 20ஆம் திகதி டாவோஸ்(Davos), பிஸ் புய்னில் (Piz Buin) அமைந்துள்ள Euronews மையத்தில் “Tourism as Soft Power and Diplomatic Capital” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.

சுற்றுலாப் பயணங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான நேரடித் தொடர்புகள் ஊடாகச் சர்வதேச நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், சுற்றுலாத்துறை எவ்வாறு ஒரு மூலோபாய இராஜதந்திரக் கருவியாகச் செயற்படுகிறது என்பது குறித்து இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. இதில் துருக்கிய அரசுகளின் அமைப்பின் (Organization of Turkic States) பொதுச்செயலாளர் திரு. குபன் ஓமிராலியேவ் (Mr. Kuban Omiraliyev) மற்றும் சவூதி அரேபியாவின் Aseer Investment நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மெஷாரி அல்நாஹர் (Mr. Meshari Alnahar) ஆகியோருடன் பிரதமர் கலந்துகொண்டார்.

இதன்போது, உலகளாவிய போக்குகள் குறித்து உரையாற்றிய பிரதமர்,

மோதல்கள் நிறைந்த உலகில் இலங்கை ஒரு நம்பிக்கை, மீட்சி மற்றும் மீளெழும் திறனுக்கான எடுத்துக்காட்டாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாகக் காலநிலை தீர்வுகள், புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் சீரற்ற பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு மத்தியில் மாறிவரும் உலகச் சூழலில், சுற்றுலாத்துறை எவ்வாறு முக்கிய பங்காற்ற முடியும் என்பதை இலங்கை நிரூபிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். சுற்றுலாத்துறை என்பது வெறும் பொருளாதாரத் துறை மட்டுமல்ல, அது வாழ்வாதாரங்களை ஆதரிக்கும், உறவுகளைக் கட்டியெழுப்பும், மக்களை இணைக்கும் ஒரு முக்கியமான இராஜதந்திரப் பாலமாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கையின் சமீபத்திய அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ’திட்வா’ சூறாவளியின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் சுற்றுலாத்துறை வலுவாக மீட்சியடைந்ததை எடுத்துரைத்தார். வெளிப்படைத்தன்மைமிக்க நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேசப் பங்காளர்களுடனான மூலோபாய ரீதியான சிறந்த ஈடுபாடு ஆகியன சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைத் தக்கவைக்க உதவியதுடன், சவாலான சூழ்நிலைகளிலும் சாதனை படைக்கும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடைய வழிவகுத்ததாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

காலநிலை நேயமான பசுமைச் சுற்றுலாத்துறைக்கு உகந்த உட்கட்டமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், சுற்றுலாத்துறையில் நீண்டகால முதலீடுகளை இலங்கை வரவேற்பதாகவும் தெரிவித்தார். சுற்றுலாத்துறையானது உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குகின்ற ஒரு துறையாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாகப் பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகத்தினருக்கு நியாயமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கு அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகள் அத்தியாவசியமானவை எனவும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் (Davos-Klosters) நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாட்டில்...

பிரதமர் உலகப் பொருளாதார மன்றத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, உலகப் பொருளாதார மன்றத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்.

இதன்போது, சர்வதேச பங்காளிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஜோசப் சிகேலா (Jozef Síkela) அவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பிரதமர், இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்தி, இருதரப்புப் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்துக் கவனம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் அவர்கள் உலகப் பொருளாதார மன்ற (WEF) மாநாட்டு மையத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பணிப்பாளர் சபைத் தலைவர் மசாடோ கான்டா (Masato Kanda) அவர்களைச் சந்தித்தார்.

இதன்போது இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான உறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, மென்சீஸ் (Menzies) விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரி (Hassan El Houry) அவர்களுடனான சந்திப்பின்போது, பிரதமர் விமானப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினார்.

உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டங்களுக்கு இணையாக டாவோஸ், பிஸ் புய்னில் (Piz Buin) அமைந்துள்ள Euronews Hub இல் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா மன்றத்தின் (Global Tourism Forum) உயர்மட்டக் கலந்துரையாடலிலும் பிரதமர் பங்குபற்றினார்.

பிரதமருடன், தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த அவர்களும் இக்கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சுவிட்சர்லாந்தின்(Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 23 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF): 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, 2026 ஜனவரி 19ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

"A Spirit of Dialogue" (உரையாடல் மனப்பாங்கு) எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் - 2026 கூட்டப்படவுள்ளது. இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர்.

இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புத்தளம் வேலாசிய அரச பாடசாலைக்கு ஆசிரியர் விடுதி - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையற்ற கல்வி முறைமையை நாம் உருவாக்குவோம்.

தரமான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு, பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியை வழங்கப் பெற்றோர் செய்யும் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையற்ற ஒரு கல்வி முறைமையை நாம் உருவாக்குவோம் என்றும், தரமான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியை வழங்கப் பெற்றோர் செய்யும் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைக் கண்காணிப்பதற்குமான விஜயத்தின் ஓர் அங்கமாக, ஜனவரி 17ஆம் திகதி மதுரங்குளிப் பகுதியில் அமைந்துள்ள புத்தளம் வேலாசிய அரச பாடசாலைக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வேலாசிய பாடசாலைக்கு நீண்டகாலத் தேவையாக இருந்த ஆசிரியர் விடுதிக் கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் இதன்போது நட்டு வைத்தார். அத்துடன், அகில இலங்கை ரீதியில் விருதுகளை வென்ற பாடசாலை மாணவர்களைப் பாராட்டி, அவர்களுக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

பாடசாலையின் வகை, பாடசாலையின் அளவு மற்றும் பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் என்பவற்றின் அடிப்படையில் கல்வியின் தரம் தீர்மானிக்கப்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைகளுக்குத் தொழில்நுட்பக் கருவிகளைப் பெற்றுக்கொடுத்து, மாணவர்களைத் தொழில்நுட்பக் கல்வி முறைக்குப் பழக்கும்போது, அதனைச் சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகக் கல்வி அமைச்சு, ஆசிரியர் பயிற்சிகள் மூலம் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றத்தாழ்வை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளையும் எமது பிள்ளைகளாகக் கருதி, மாணவர்களுக்கு இடையிலான கல்வி மற்றும் சமூக ரீதியான இடைவெளிகளை அகற்றுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கிறோம்.

எமது பெற்றோர் கல்வியின் பெறுமதியை அறிந்தவர்கள். அவர்கள் தமது அனைத்து வளங்களையும் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிக்கின்றனர். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாகக் கல்வித்துறையில் நிலவும் சமத்துவமின்மையை நீக்க நாம் நடவடிக்கை எடுப்போம். தரமான கல்வியை வழங்கி, பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காகப் பெற்றோர் எடுக்கும் முயற்சிக்கு இது கைகொடுக்கும் என நான் நினைக்கிறேன்.

முந்தைய கல்வி முறையின்படி, கஷ்டப் பிரதேசப் பாடசாலை மாணவர்களின் கல்வி கற்றல் அந்தந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்களின் தனிப்பட்ட திறமைகளிலேயே தங்கியிருந்தது. ஆயினும், இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை அகற்றி, ’கஷ்டப் பிரதேசப் பாடசாலை’ என்று அழைக்கும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

அரசாங்கத்தின் புதிய தேசியக் கொள்கையின்படி, எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்குப் பல்வேறு துறைகளிலும் திறமையான மாணவர்கள் தேவைப்படுகின்றனர். அதற்குத் தகுந்த மனித வளத்தை உருவாக்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையற்ற ஒரு கல்வி முறைமையை நாம் உருவாக்குவோம். தரமான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியைப் பெற்றுக்கொடுக்கப் பெற்றோர் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நான் பாராட்டுகிறேன்" எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாணக் கல்விச் செயலாளர் உள்ளிட்ட பணிப்பாளர்கள் மற்றும் புத்தளம் வேலாசிய அரச பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு