பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

’இது எமது காலம்’ நடமாடும் வரலாற்று அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட்டார்

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றை ஆராய்வதற்கான வாய்ப்பைப் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கும் நோக்கத்துடன் தற்போது கொழும்பு பொது நூலக வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள "இது எமது காலம்" என்ற நடமாடும் வரலாற்று அருங்காட்சியகத்தை ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.

2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் அருங்காட்சியகம், இதுவரை நாட்டின் 9 மாகாணங்கள், 10 மாவட்டங்கள் மற்றும் 11 நகரங்களை உள்ளடக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,. ஆகஸ்ட் 19 ஆந் திகதி முதல் கொழும்பில் அதன் முதலாவது கண்காட்சியை ஆரம்பித்தது. இது கொழும்பு பொது நூலக வளாகத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, 1940கள் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் இந்த நாட்டின் வரலாற்றில் தேசம் மற்றும் தேசிய அடையாளத்தை கட்டியெழுப்புதல், மோதல்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

இதன் மூலம் வரலாறு என்றால் என்ன? அதை யார் எழுத முடியும்? வரலாற்றைக் கற்றுக்கொள்வதற்கான பல்வேறு வழிகள் என்ன? போன்ற விடயங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மற்றும் செயற்பாடுகள் மூலம், இந்தக் கண்காட்சி பிள்ளைகள் சிந்திக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நடமாடும் அருங்காட்சியகம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் வெளியுறவு அலுவலகத்தால் நிதியளிக்கப்பட்ட வரலாற்று உரையாடல் மற்றும் நினைவக கூட்டணி (CHDM) , இலங்கை சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கான நிறுவனத்துடன் (SCOPE) இணைந்தும், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தும் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு (GIZ) இலங்கை நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் நிக்கோலஸ் லமாடே மற்றும் CHDM நிறைவேற்றுப் பணிப்பாளர் தனுஜா துரைராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கையின் புதிய அரசாங்கம் என்ற வகையில், அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாங்கள் எப்போதும் பொதுமக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம், எந்தவித பாகுபாடும், பிரிவினையும் இல்லாமல் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும், அனைத்து மக்களுக்கும் சமமான மரியாதை, அங்கீகாரம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆகஸ்ட் 22 ஆந் திகதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

"ஒரு அரசாங்கமாக, ஐக்கியம், மரியாதை, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகிய கருத்துக்களை ஊக்குவிக்க நாங்கள் எப்போதும் பாடுபடுகிறோம். மனித உரிமைகளை மதிக்கும் கலாசாரம் சமூகத்தில் ஒரு பொது இயல்பாக மாறாவிட்டால் அல்லது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், நிறுவனங்கள் எவ்வளவு எளிதில் சரிந்துவிடும் அல்லது பலவீனமடையக்கூடும் என்பதை நாம் காணலாம். ஒரு அரசாங்கமாக நாம் கட்டியெழுப்பியுள்ள கொள்கைகளுடன் நாம் அதனை ஆரம்பிக்கலாம். பிரிவினை, வெறுப்பு அல்லது வன்முறையை விதைக்கும் கூற்றுக்களைத் தவிர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஜனாதிபதி உட்பட எங்கள் அரசாங்கத்தின் அனைத்து பிரதிநிதிகளும் இந்தக் கொள்கையை தொடர்ந்து பேணி வருகின்றனர். இருப்பை அல்லது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இனவெறி, வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டுவதை நாட மாட்டோம் என்ற எங்கள் வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.

இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம். பொதுமக்கள் உட்பட அனைவரினதும் கருத்துக்களுக்கு செவிமடுக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அதன்படி, சரியாக செயற்படவும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு பதிலளிக்கக்கூடியதாக இருக்கவும் நாங்கள் பாடுபடுவோம் என்று பிரதமர் கூறினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“கலாநிதி நந்தா மாலனியின் குரல் இந்த நாட்டிற்கு ஒரு தனித்துவமான, அருவமான கலாச்சாரப் பொக்கிஷமாகும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கலாநிதி நந்தா மாலனியை கௌரவிக்கும் விதமாக, இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஆகஸ்ட் 22ஆம் திகதி வானொலி கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க முனிதாச கலையகத்தில் நடைபெற்றது.

நம் நாட்டின் இசைத் துறைக்கும், இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்திற்கும் கலாநிதி நந்தா மாலனி அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அளித்த பங்களிப்பை கௌரவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம். அவரை கௌரவிக்கும் விதமாக, வானொலி கூட்டுத்தாபனத்தின் ஒரு கலையரங்கம் அவரது பெயரால் திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு, வானொலி கூட்டுத்தாபன வளாகத்தில் கலாநிதி நந்தா மாலனியின் உருவப்படமும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. வானொலி கூட்டுத்தாபனத்தின் 9வது கலையரங்கமே "கலாநிதி நந்தா மாலனி கலையரங்கம்" எனப் பிரதமர் மற்றும் கலாநிதி நந்தா மாலனி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

"அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிறுமி "சிறுவர் மேடை" நிகழ்ச்சியில் பாடல்களைப் பாட இந்த வானொலி கூட்டுத்தாபனத்திற்கு வந்தார். அங்கு அவர் முதன்முதலாக ’துர பவனே மே குளு குவனே’ என்ற பாடலுக்கு குரல் கொடுத்தார். அவருடைய தனித்துவமான குரலின் திறமையைக் கண்டறிந்த கலாநிதி பண்டித் அமரதேவ அவர்கள், இலங்கையின் முதலாவது வர்ணத் திரைப்படமான ’ரன்முது தூவ’ திரைப்படத்தில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார். அந்தக் கிராமியச் சிறுமி, ’கலன கங்ககி ஜீவிதே தயாலு லோகயே’ என்ற அற்புதமான பாடல் வரிகளுக்கு இந்த வானொலி கூட்டுத்தாபன கலையரங்கத்தில் தனது குரலை இணைத்தார்.

"அன்று அந்தப் பாடலைப் பாடிய சிறுமியின் பெயரில் இன்று வானொலி கூட்டுத்தாபனத்தில் ஒரு கலையரங்கம் திறக்கப்படுவது ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும். அவரே தேசத்தின் பெருமைக்குரிய பாடகி கலாநிதி நந்தா மாலனி.

"நந்தா மாலனி என்ற பாடகி நமது இசைத் துறையில் வெறுமனே ஒரு பெயர் மட்டுமல்ல. மாறாக, ’ரன்முது துவ’ திரைப்படத்தில் தொடங்கிய தனது இசைப் பயணத்தில், காதல், பிரிவின் துயரம் போன்ற வழக்கமான தலைப்புகளுக்கு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது, ஒடுக்குமுறை, ஊழல், வன்முறை, சமூக அநீதி போன்ற சமகாலப் பிரச்சினைகள் குறித்தும் தனது துணிச்சல்மிக்கக் குரலில் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் ஒருபோதும் தயங்கவில்லை.

"கலாநிதி நந்தா மாலனியின் குரல் இந்த நாட்டிற்கு ஒரு தனித்துவமான, அருவமான கலாச்சாரப் பொக்கிஷமாகும். நீங்கள் எங்களுக்கு வழங்கிய அந்த ரசனை, உங்கள் பாடல்கள் மூலம் சிந்திக்கத் தூண்டிய விதம், இந்த நாடு இக்கட்டான சூழலில் இருந்தபோதும் பாடல்கள் மூலம் எங்களை உற்சாகமூட்டிய உங்களின் உன்னத சேவைக்கு நன்றி கூற இந்த சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய பாதேகம ஞானேஸ்வர தேரர் உள்ளிட்ட மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், சமன் மாக்சிமஸ் அடிகளார், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில்சேனவி, சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷான் குணசேகர உள்ளிட்ட பல மூத்த கலைஞர்களும், பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப்பிரிவு

பாடசாலைகளில் உள்ள விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல்

பாடசாலைகளில் நிலவும் விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து, கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை ஆகஸ்ட் 21 அன்று பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சுக்கும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையில் ஒரு தொடர்பாடலை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து இருதரப்பு அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், விளையாட்டுச் சங்கங்களில் நிலவும் அனுமதிப்பத்திரப் பிரச்சினைகள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களால் ஏற்படும் வன்முறைகள், பாடசாலை விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல் ஆகியன தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து மாணவர்களும் விளையாட்டில் பங்கேற்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதன் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, தற்போதைய போட்டி மனப்பான்மைக்கு மாறாக, மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்தும் விளையாட்டுக் கலாசாரத்தை பாடசாலைகளில் உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கல்வி அமைச்சும் விளையாட்டு அமைச்சும் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பாடசாலைக் கல்விக்குப் பிறகு உயர்கல்விக்காக விளையாட்டுத் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்களின்போது கணினித் தரவு முறைமை ஊடாக விண்ணப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, மேலதிக செயலாளர் (இணை பாடத்திட்டம்) உதாரா திக்கும்புர, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, தேசிய விளையாட்டு சபைத் தலைவர் பிரியந்த ஏக்கநாயக்க உட்பட கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டில் இளைஞர்கள் குறித்த புதிய உரையாடல் தேவை

ஆகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 19 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு மற்றும் திறந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இளைஞர் பேரவையின் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்,

"கடந்த காலங்களில் இளைஞர் பேரவையில் பெண் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த வருடம் அந்த நிலைமை மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அந்த மாற்றத்தை இப்போது எல்லாத் துறைகளிலும் காணலாம்.

வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையிலும் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது."

"இளைஞர்களின் வரலாற்றை ஆராயும்போது, இளைஞர் வன்முறை, இளைஞர் அமைதியின்மை மற்றும் இளைஞர் இறப்புகள் பற்றியே நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது, நாட்டுக்கு இளைஞர்களைப் பற்றிய ஒரு புதிய உரையாடல் தேவை. அதற்கான தனித்துவமான வாய்ப்பும் பொறுப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில், இளைஞர் பேரவையின் 52 பிரதிநிதிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, இளைஞர் பேரவையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆகஸ்ட் 18 அன்று கடுவெல புராதன சங்கபிட்டி விகாரையை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டு, அதற்கான பிரகடன பத்திரத்தை அதி வணக்கத்துக்குரிய கனங்கம நாரத தலைமை தேரரிடம் வழங்கினார்.

பிரகடன பத்திரத்தை வழங்கிய பின்னர் உரையாற்றிய பிரதமர்,

"இன்று இந்த விகாரைக்கு ஒரு சிறப்புவாய்ந்த நாள். கடுவெல, கொத்தலாவல கிராமத்தில் அமைந்துள்ள சங்கபிட்டி புராதன ரஜமகா விஹாரையை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தி பிரகடன பத்திரம் எமது தலைமை தேரரிடம் வழங்கப்பட்டது.

மேலும், இன்று இந்த விகாரையின் தற்போதைய தலைமைத் தேரரான அதி வணக்கத்துக்குரிய கனங்கம நாரத தேரரின் பிறந்தநாள். அவர் நீண்ட காலம் தர்மத்திற்குச் சேவை செய்ய, நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

"இந்த பழமை வாய்ந்த பௌத்த விகாரையில், கம்பளை மற்றும் கோட்டை காலத்தைச் சேர்ந்த பண்டைய ஓவியங்கள் மற்றும் சிலைகள் இருப்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று, நமது வரலாற்று பாரம்பரியத்தின் இந்த விலைமதிப்பற்ற ரத்தினத்தை என் கண்களால் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை சமூகத்தின் நலன் மற்றும் மக்களின் ஒற்றுமைக்கு மிக முக்கியமானவை. நமது பாரம்பரியங்களே எதிர்காலத்திற்கான வலிமையைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன. நமது நாட்டின் பாரம்பரியத்தின் மதிப்புகளை மக்கள் மதிக்கும் வகையில் பாதுகாப்பது ஒரு அரசாங்கமாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய பொறுப்பாகும்.

அதனால்தான் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர், இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பிரதம பதிவாளர் சங்கைக்குரிய பலப்பிட்டியே சிறி சீவலி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், பௌத்த சாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார பிரதி அமைச்சர் காம கெதர திசாநாயக்க, கடுவெல மாநகர சபையின் மேயர் ரஞ்சன் ஜயலால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அசித நிரோஷன மற்றும் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள், விகாரை நிர்வாகத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு