பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ஸ்மார்ட் போர்டுகளுக்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துங்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும்.

இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

வதந்திகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டாம்.

புதிய கல்வி மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகளைக் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதற்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

"இலவசக் கல்வி என்பது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையாக இல்லாவிட்டாலும், இந்தச் சந்தர்ப்பத்திலாவது அதற்காக அவர் குரல் கொடுப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் சமூக ஊடகங்கள் அல்லது வதந்திகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ நாம் எந்த முடிவும் எடுக்கவில்லை. விக்ரமாராச்சி மருத்துவ பீடம் எவ்வித விதிமுறைகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இன்று அந்த மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். இது ஒரு அரசியல் தீர்மானம் அல்ல. விக்ரமாராச்சி மருத்துவ பீடத்தின் பிரச்சினை தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே நாம் செயற்படுகிறோம்.

இவ்வருடம் பாடசாலை அமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். எக்காரணம் கொண்டும் இதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கத் தேவையில்லை. அவ்வாறு வசூலிக்கப்பட்டால் அதை உடனடியாக நிறுத்துங்கள். பாடசாலைகளில் பணம் வசூலிக்க வேண்டாம் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1-5 தரங்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் தனிப்பாடமாகக் கற்பிக்கப்படாது. எனினும், தொழில்நுட்ப உலகத்துடன் இணைந்து பயணிப்பதற்காக, ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவை வழங்குவது குறித்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். சிறுவர் பாதுகாப்பு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டே நாம் தீர்மானங்களை எடுப்போம். பாடத்திட்டங்கள் குறித்து அரசியல் ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது; அவை அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்களாலேயே தீர்மானிக்கப்படும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் அத்தியாவசிய வெற்றிடங்களுக்காகக் கல்விசார் ஊழியர்களைப் சேவையில் இணைத்துக்கொள்ள அந்தந்த நிறுவனங்கள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேபோல், ஆசிரியர் சேவை நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதன் தரத்தை மேம்படுத்த மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. ஆசிரியர் சேவையின் பதவி உயர்வுக்கான மதிப்பீட்டுச் செயல்முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சேவையாப்பின்படி நியமனங்கள் வழங்கப்படாமை போன்ற பிரச்சினைகளைத் தீர்த்து, தரமான கல்விக்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது."

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்:

"பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவுகளின்படி பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் ’சுரக்ஷா’ காப்புறுதி என்பவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, 6-13 தரங்களில் பயிலும் மாணவிகளுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின் கொள்வனவு செய்ய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ’அஸ்வெசும’ நன்மைகளைப் பெறாத மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை மேலும் விரிவுபடுத்துவதற்காகத் தேவையான தரவுகளைத் திரட்டி வருகின்றது.

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிலிருந்து உரிய கால அட்டவணைப்படி பரீட்சைகளை நடத்த முயற்சித்து வருகிறோம்" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு புதிய பாதையில் பிரவேசித்திருக்கின்றோம்.

மானிடப் பண்புகள் நிறைந்த, திறமைமிக்க, புத்திசாலித்தனமான எதிர்காலச் சந்ததியினருக்காக எமது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும் உங்கள் அனைவரதும் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

பலமான பொருளாதார அடிப்படையொன்றின் மீது நாட்டை நிலைப்படுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக அரசியல் மற்றும் அரசியல்வாதி பற்றிய புதிய முன்மாதிரிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுதல், இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவத்துடனும், கௌரவத்துடனும், மனிதநேயத்துடனும் மக்களை நேசிப்பதற்காக அவர்களை வழிப்படுத்துதல், கிராமிய வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட முன்னுரிமை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

பாதிப்புக்குள்ளான அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடிய எந்தவொரு குடிமகனும் கைவிடப்படாத விதத்தில், அத்தியாவசிய சமூகக் குழுக்களுக்கான அணுகலை உறுதிப்படுத்தும் நலன்புரிப் பொறிமுறைகளை உருவாக்குதல், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் ஊடாகப் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் உலகின் அனைத்து நாடுகளுடனும் தேசங்களுடனும் மிகவும் நம்பகமான முறையில் உறவுகளைப் பேணக்கூடிய அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட நாடாகச் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கையை மீண்டும் ஒரு வர்த்தக நாமமாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த இலக்குகளை அடைவதற்காகக் குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டிய காலமே ஆரம்பமாகியிருக்கின்றது. அதற்காக அனைத்து இலங்கை மக்களும் மிகவும் பலமாகவும் நம்பிக்கையுடனும் அணிதிரளுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறும் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு
2026 பெப்ரவரி 04

மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாகவும் சமூகம் சார்ந்த அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் தெரிவிப்பு.

நூறு ஆண்டுகள் பழமையான மனநலச் சட்டத்தைக் காலத்திற்கேற்ப மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை - சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி.

மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாக மாத்திரமன்றி சமூகம் சார்ந்த அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மனநலச் சேவைகளைப் பெறுபவர்கள் குறித்துச் சமூகம் கொண்டுள்ள மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் மனநலச் சுகாதாரத் துறையின் முன்னோடி நிறுவனமான அங்கொடை தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் (NIMH) நூற்றாண்டு விழா பெப்ரவரி 03ஆம் திகதி அந்த நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்வின் ஆரம்பத்தில், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட புகைப்படக் கண்காட்சியையும் மனநலச் சேவைகளைப் பெறுபவர்களின் ஆக்கங்கள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.

நினைவுவிழாவில் உரையாற்றிய பிரதமர், கடந்த நூறு ஆண்டுகளாக இந்நிறுவனம் ஆற்றி வரும் அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் சமூக மனநலச் சேவைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டுமெனக் கூறினார்.

மனநலத் துறை என்பது வெறுமனே மருத்துவச் சிகிச்சையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. பல வெளித்துறைகளை ஒருங்கிணைத்து மிகவும் பரந்த மற்றும் மனிதாபிமான முறையிலான சிகிச்சை முறையொன்றை நாம் கட்டியெழுப்ப வேண்டும். குறிப்பாக, மனநலச் சேவைகளைப் பெறுபவர்கள் தொடர்பாகச் சமூகம் கொண்டுள்ள தவறான கண்ணோட்டங்களை மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது.

மருத்துவமனை ஊழியர்களின் சிறப்பான அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், நோயாளிகள் மீது மனிதநேயத்துடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜயமுனி, முக்கியமானதொரு விடயத்தை வெளிப்படுத்தினார். அதாவது, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நூறு ஆண்டுகள் பழமையான மனநலச் சட்டத்தைத் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்ப வரைவு ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் காலங்களில் இச்சட்டம் குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களையும் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் மூலம் நவீன மருத்துவ முறைகளைச் சட்ட முறைமைக்குள் உள்வாங்கி, நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க, உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைக்கான பிரதிநிதி மருத்துவர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ், தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் மருத்துவர் தம்மிக அலகப்பெரும உள்ளிட்ட அதிதிகள், மருத்துவர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

6ஆம் தர மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சர்ச்சைக்குரிய கற்றல் தொகுதி (Module) தொடர்பில் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது; கற்றல் தொகுதிகளை அச்சிட்டதால் அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை

பாடப்புத்தக அச்சிடல் மற்றும் கற்றல் தொகுதிகள் (Module) தொடர்பாக இன்று (03) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:

"2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் பாடப்புத்தகங்களை ஓடர் செய்வதற்கு முறையான தரவு அமைப்பு ஒன்று இருக்கவில்லை. பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஓடர் ஆவணங்கள் மூலமே அவை பெறப்பட்டன. பாடசாலைகளிலும் ஏனைய நிறுவனங்களிலும் எஞ்சியிருந்த பாடப்புத்தகங்கள் கணக்கிடப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை. இதனால் எஞ்சிய புத்தகங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிதிப் பெறுமதியைக் கணக்கிட முடியாமலிருக்கின்றது.

2023 முதல் 2025 வரை பாடப்புத்தகங்களை ஓடர் செய்யும் நடைமுறை தரவு அமைப்பு மூலமே முன்னெடுக்கப்பட்டது. அதனால் அவை முறையாகக் கணக்கிடப்பட்டுள்ளன. ஆண்டின் ஆரம்பத்திலேயே அடுத்த ஆண்டிற்குத் தேவையான பாடப்புத்தகத் தரவுகள் அந்த அமைப்பின் ஊடாகப் பெறப்படுகின்றன. தரவு அமைப்பு மற்றும் கையிருப்பிலுள்ள புத்தகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, விற்பனை மற்றும் அவசர அனர்த்தங்களின் போது ஏற்படும் தேவைகளைக் கருத்திற்கொண்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

பாடப்புத்தக விநியோகம் மற்றும் அச்சிடுவதற்குத் தேவைப்படும் காலம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே கொள்முதல் செயல்முறை முன்னெடுக்கப்படுகின்றது. அரச மற்றும் தனியார் துறையினர் இணைந்து தேவைகளைக் கருத்திற்கொண்டு பாடப்புத்தகங்களை அச்சிடுகின்றனர். களஞ்சியங்களுக்குப் புத்தகங்கள் கிடைக்கப்பெறும் முறைமைக்கு ஏற்ப, அவை விரைவாக விநியோகிக்கப்படுகின்றன.

பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் தொகுதிகள் (Modules) ஆகியன வெவ்வேறானவை. தற்போது அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களின்படி, 6ஆம் தரத்தின் முதலாம் தவணைக்காகக் கற்றல் தொகுதிகள் (Modules) அச்சிடப்பட்டன. அந்தத் தொகுதிகள் அனைத்தையும் நாம் நீக்கிவிடவில்லை. 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த கற்றல் தொகுதிகளைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கற்றல் தொகுதி (Module) தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானித்துள்ளோம். ஆயினும் கற்றல் தொகுதிகள் எவையும் அகற்றப்படவில்லை. அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் வகையில் நாம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. 6ஆம் தர மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை பெப்ரவரி மாதத்தில் நாம் விநியோகிப்போம்.

6ஆம் தர மாணவர்களுக்கு எவ்விதத்திலும் அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசிய மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

தேசிய மாணவ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் நேற்று (02) பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மாணவ பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டதன் பின்னர் அலரி மாளிகையைப் பார்வையிடும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

புதிய கல்வி மறுசீரமைப்பானது மாணவர்கள் என்ற ரீதியில் நேரடியாகத் தங்களைப் பாதிக்கும் ஒரு விடயம் என்றும், புதிய தொழில்நுட்ப உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு கல்வி மறுசீரமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் புத்தாக்கம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் குறிப்பிட்ட மாணவ பாராளுமன்றப் பிரதிநிதிகள், கல்வி மறுசீரமைப்பிற்காகத் தமது நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்:

புதிய கல்வி மறுசீரமைப்பை அண்மையில் நாம் முதலாம் தரத்திலிருந்து ஆரம்பித்தோம். இவ்வருடம் 6ஆம் தரத்திற்குப் பிரவேசிக்கும் பிள்ளைகளைப் புதிய கல்வி மறுசீரமைப்பிற்குள் உள்வாங்குவது குறித்துத் தற்போது கலந்துரையாடி வருகின்றோம். புதிய கல்வி மறுசீரமைப்புகளை நாம் நிறுத்தப்போவதில்லை. குறைகளற்ற முறையில் முறையாகப் புதிய கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்கவே நாம் முயற்சிக்கின்றோம். அதற்காக ஐந்து பிரதான துறைகளின் ஊடாகச் செயற்பட்டு வருகின்றோம். ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதும்; மனிதநேயம் மிக்க, சுற்றுச்சூழலை நேசிக்கின்ற, மனிதாபிமானப் பண்புகள் நிறைந்த, சமூகத்திற்குப் பொறுப்புக்கூறத்தக்க ஒரு பிரஜையை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதித் கல்விப் பணிப்பாளர் கசுன் குணரத்ன உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய மாணவ பாராளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பில் நடைபெற்ற FICAC தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்பு

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பெப்ரவரி 02ஆம் திகதி நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். இலங்கையிலுள்ள தூதர்கள் சங்கம் (Association of Consuls in Sri Lanka) மற்றும் உலகத் தூதர்கள் சம்மேளனம் (World Federation of Consuls) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பெப்ரவரி 01 முதல் 04 வரை நடைபெறவுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் தெற்காசியாவின் நிலையான வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இராஜதந்திரிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

சர்வதேச அரங்கில் இலங்கையை ஒரு நம்பகமான மற்றும் நிலையான தேசமாக நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் சர்வதேசப் பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயற்படும் ஒரு தருணத்தில், இம்மாநாட்டை நடத்தும் நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு விசேட சந்தர்ப்பமாகும், எனக் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியின் தாக்கத்தை நினைவுகூர்ந்த பிரதமர், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் இலங்கையின் தயார்நிலை குறித்துக் கவனம் செலுத்தியதுடன், அந்த அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்குச் சர்வதேசப் பங்காளிகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டினார். இத்தகைய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் உலகளாவிய ஒத்துழைப்பு, பொறுப்பு மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் அவசியம் என்பதையும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

அரச துறையின் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், தேசிய ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சேவைகளை வழங்குவதிலும் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இலங்கை அரசாங்கம் தெளிவான கொள்கைக் கட்டமைப்பின் ஊடாகப் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்புடன் உள்ளது. நிதி ஒழுக்கம், நிலையான கடன் முகாமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் ஊடாக வளர்ச்சியை மேம்படுத்தும் சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதன் ஊடாக, மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவளிப்பதற்காக நாம் சமூக நலத்திட்டங்களைப் பலப்படுத்தி வருகின்றோம், எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையை ஒரு ஸ்திரமான மற்றும் நம்பகமான சர்வதேசப் பங்காளியாக நிலைநிறுத்துவதுடன், உலக அரங்கில் இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, FICAC தலைவர் Nikolaos K. Margaropoulos, இலங்கைத் தூதர்கள் சங்கத்தின் தலைவர் மஹேன் காரியவசம் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு