பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

“கலாநிதி நந்தா மாலனியின் குரல் இந்த நாட்டிற்கு ஒரு தனித்துவமான, அருவமான கலாச்சாரப் பொக்கிஷமாகும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கலாநிதி நந்தா மாலனியை கௌரவிக்கும் விதமாக, இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஆகஸ்ட் 22ஆம் திகதி வானொலி கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க முனிதாச கலையகத்தில் நடைபெற்றது.

நம் நாட்டின் இசைத் துறைக்கும், இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்திற்கும் கலாநிதி நந்தா மாலனி அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அளித்த பங்களிப்பை கௌரவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம். அவரை கௌரவிக்கும் விதமாக, வானொலி கூட்டுத்தாபனத்தின் ஒரு கலையரங்கம் அவரது பெயரால் திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு, வானொலி கூட்டுத்தாபன வளாகத்தில் கலாநிதி நந்தா மாலனியின் உருவப்படமும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. வானொலி கூட்டுத்தாபனத்தின் 9வது கலையரங்கமே "கலாநிதி நந்தா மாலனி கலையரங்கம்" எனப் பிரதமர் மற்றும் கலாநிதி நந்தா மாலனி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

"அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிறுமி "சிறுவர் மேடை" நிகழ்ச்சியில் பாடல்களைப் பாட இந்த வானொலி கூட்டுத்தாபனத்திற்கு வந்தார். அங்கு அவர் முதன்முதலாக ’துர பவனே மே குளு குவனே’ என்ற பாடலுக்கு குரல் கொடுத்தார். அவருடைய தனித்துவமான குரலின் திறமையைக் கண்டறிந்த கலாநிதி பண்டித் அமரதேவ அவர்கள், இலங்கையின் முதலாவது வர்ணத் திரைப்படமான ’ரன்முது தூவ’ திரைப்படத்தில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார். அந்தக் கிராமியச் சிறுமி, ’கலன கங்ககி ஜீவிதே தயாலு லோகயே’ என்ற அற்புதமான பாடல் வரிகளுக்கு இந்த வானொலி கூட்டுத்தாபன கலையரங்கத்தில் தனது குரலை இணைத்தார்.

"அன்று அந்தப் பாடலைப் பாடிய சிறுமியின் பெயரில் இன்று வானொலி கூட்டுத்தாபனத்தில் ஒரு கலையரங்கம் திறக்கப்படுவது ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும். அவரே தேசத்தின் பெருமைக்குரிய பாடகி கலாநிதி நந்தா மாலனி.

"நந்தா மாலனி என்ற பாடகி நமது இசைத் துறையில் வெறுமனே ஒரு பெயர் மட்டுமல்ல. மாறாக, ’ரன்முது துவ’ திரைப்படத்தில் தொடங்கிய தனது இசைப் பயணத்தில், காதல், பிரிவின் துயரம் போன்ற வழக்கமான தலைப்புகளுக்கு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது, ஒடுக்குமுறை, ஊழல், வன்முறை, சமூக அநீதி போன்ற சமகாலப் பிரச்சினைகள் குறித்தும் தனது துணிச்சல்மிக்கக் குரலில் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் ஒருபோதும் தயங்கவில்லை.

"கலாநிதி நந்தா மாலனியின் குரல் இந்த நாட்டிற்கு ஒரு தனித்துவமான, அருவமான கலாச்சாரப் பொக்கிஷமாகும். நீங்கள் எங்களுக்கு வழங்கிய அந்த ரசனை, உங்கள் பாடல்கள் மூலம் சிந்திக்கத் தூண்டிய விதம், இந்த நாடு இக்கட்டான சூழலில் இருந்தபோதும் பாடல்கள் மூலம் எங்களை உற்சாகமூட்டிய உங்களின் உன்னத சேவைக்கு நன்றி கூற இந்த சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய பாதேகம ஞானேஸ்வர தேரர் உள்ளிட்ட மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், சமன் மாக்சிமஸ் அடிகளார், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில்சேனவி, சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷான் குணசேகர உள்ளிட்ட பல மூத்த கலைஞர்களும், பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப்பிரிவு

பாடசாலைகளில் உள்ள விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல்

பாடசாலைகளில் நிலவும் விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து, கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை ஆகஸ்ட் 21 அன்று பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சுக்கும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையில் ஒரு தொடர்பாடலை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து இருதரப்பு அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், விளையாட்டுச் சங்கங்களில் நிலவும் அனுமதிப்பத்திரப் பிரச்சினைகள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களால் ஏற்படும் வன்முறைகள், பாடசாலை விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல் ஆகியன தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து மாணவர்களும் விளையாட்டில் பங்கேற்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதன் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, தற்போதைய போட்டி மனப்பான்மைக்கு மாறாக, மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்தும் விளையாட்டுக் கலாசாரத்தை பாடசாலைகளில் உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கல்வி அமைச்சும் விளையாட்டு அமைச்சும் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பாடசாலைக் கல்விக்குப் பிறகு உயர்கல்விக்காக விளையாட்டுத் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்களின்போது கணினித் தரவு முறைமை ஊடாக விண்ணப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, மேலதிக செயலாளர் (இணை பாடத்திட்டம்) உதாரா திக்கும்புர, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, தேசிய விளையாட்டு சபைத் தலைவர் பிரியந்த ஏக்கநாயக்க உட்பட கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டில் இளைஞர்கள் குறித்த புதிய உரையாடல் தேவை

ஆகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 19 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு மற்றும் திறந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இளைஞர் பேரவையின் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்,

"கடந்த காலங்களில் இளைஞர் பேரவையில் பெண் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த வருடம் அந்த நிலைமை மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அந்த மாற்றத்தை இப்போது எல்லாத் துறைகளிலும் காணலாம்.

வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையிலும் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது."

"இளைஞர்களின் வரலாற்றை ஆராயும்போது, இளைஞர் வன்முறை, இளைஞர் அமைதியின்மை மற்றும் இளைஞர் இறப்புகள் பற்றியே நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது, நாட்டுக்கு இளைஞர்களைப் பற்றிய ஒரு புதிய உரையாடல் தேவை. அதற்கான தனித்துவமான வாய்ப்பும் பொறுப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில், இளைஞர் பேரவையின் 52 பிரதிநிதிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, இளைஞர் பேரவையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆகஸ்ட் 18 அன்று கடுவெல புராதன சங்கபிட்டி விகாரையை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டு, அதற்கான பிரகடன பத்திரத்தை அதி வணக்கத்துக்குரிய கனங்கம நாரத தலைமை தேரரிடம் வழங்கினார்.

பிரகடன பத்திரத்தை வழங்கிய பின்னர் உரையாற்றிய பிரதமர்,

"இன்று இந்த விகாரைக்கு ஒரு சிறப்புவாய்ந்த நாள். கடுவெல, கொத்தலாவல கிராமத்தில் அமைந்துள்ள சங்கபிட்டி புராதன ரஜமகா விஹாரையை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தி பிரகடன பத்திரம் எமது தலைமை தேரரிடம் வழங்கப்பட்டது.

மேலும், இன்று இந்த விகாரையின் தற்போதைய தலைமைத் தேரரான அதி வணக்கத்துக்குரிய கனங்கம நாரத தேரரின் பிறந்தநாள். அவர் நீண்ட காலம் தர்மத்திற்குச் சேவை செய்ய, நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

"இந்த பழமை வாய்ந்த பௌத்த விகாரையில், கம்பளை மற்றும் கோட்டை காலத்தைச் சேர்ந்த பண்டைய ஓவியங்கள் மற்றும் சிலைகள் இருப்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று, நமது வரலாற்று பாரம்பரியத்தின் இந்த விலைமதிப்பற்ற ரத்தினத்தை என் கண்களால் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை சமூகத்தின் நலன் மற்றும் மக்களின் ஒற்றுமைக்கு மிக முக்கியமானவை. நமது பாரம்பரியங்களே எதிர்காலத்திற்கான வலிமையைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன. நமது நாட்டின் பாரம்பரியத்தின் மதிப்புகளை மக்கள் மதிக்கும் வகையில் பாதுகாப்பது ஒரு அரசாங்கமாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய பொறுப்பாகும்.

அதனால்தான் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர், இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பிரதம பதிவாளர் சங்கைக்குரிய பலப்பிட்டியே சிறி சீவலி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், பௌத்த சாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார பிரதி அமைச்சர் காம கெதர திசாநாயக்க, கடுவெல மாநகர சபையின் மேயர் ரஞ்சன் ஜயலால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அசித நிரோஷன மற்றும் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள், விகாரை நிர்வாகத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வென்று ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கத் தேவையான நிலையான கொள்கைகள் உருவாக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை என்றும், எனவே சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், "Gem City Ratnapura- 2025" எனும் தலைப்பில் 2025 ஆகஸ்ட் 15, 16, மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் பெல்மடுல்ல கிராண்ட் சில்வரே விடுதியில் நடைபெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி 2025-இன் தொடக்க விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, இலங்கையை உலகின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையாக நிலைநிறுத்தும் நோக்குடன், பல்வேறு வகையான இரத்தினக்கற்கள், ஆபரணங்கள், அகழ்வு மற்றும் பதப்படுத்தும் முறைகள், ஆய்வக சேவைகள், களப்பயிற்சி மற்றும் கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் மேலும் கூறியதாவது:

"இலங்கை இரத்தினக்கற்கள் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றிருக்கின்றன. அத்துடன், இந்த இரத்தினக்கற்களில் பெரும் பகுதி இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன. எனினும், இரத்தினபுரிக்கு அந்த கௌரவம் கிடைத்துள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உயர்தர இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினக்கல் துறை தேசிய பொருளாதாரத்திற்கு அளிக்கும் பங்களிப்பு மிகப் பெரியது.

இருப்பினும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையிலிருந்து உள்ளூர் ஏற்றுமதி வருமானத்திற்கு நாம் அளிக்கக்கூடிய உச்சபட்ச பங்களிப்பினை இன்னும் அடையவில்லை. பொருத்தமற்ற கொள்கைகளே இத்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றன. ஆகையால், இரத்தினக்கல் துறையின் இலக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டத் தேவையான நிலையான கொள்கைகளை உருவாக்க எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும்

இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருக்கும் அமெரிக்கா, இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, அரசாங்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து எதிர்காலத்திலும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளுமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி மூலம் எதிர்பார்க்கப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என்ற கடினமான இலக்கை அடைவதற்கு, வைரக்கல் துறையின் வளர்ச்சி மற்றும் பட்டை தீட்டப்படாத இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல புதிய கொள்கைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் முதலாவது அரச வர்த்தக இணையதளமாகிய www.gemcityratnapura.com என்ற இணையதளம், GOV PAY என்ற புதிய வசதியுடன் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஸ்ரீபாதஸ்தானதிபதி பென்கமுவே தம்மதின்ன மஹா நாயக்க தேரர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் அதிகாரிகளும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உட்படப் பல அரச அதிகாரிகளும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் வர்த்தகர்கள் உட்படப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதே எமது நோக்கம். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அதற்கு, தொழிற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்.

தொழிற்கல்வியை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற "Sri Lanka Skills Expo 2025" கண்காட்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நிலவிவரும் இளைஞர்களின் வேலையின்மையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கண்காட்சியை, மூன்றாவது முறையாகவும் ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை கைத்தொழில்துறை திறன்கள் பேரவையும் (ISSC) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

பிரதமர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்:

"தற்போதைய கல்வி முறையின் கீழ், மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் மற்றும் வணிகப் பாடங்களைத் தேர்வு செய்கின்றனர். அந்தப் பாடங்களைப் கற்பதற்கு போதுமான தகைமைகள் இல்லாத பிள்ளைகள் கலைத்துறை பாடங்களைத் தேர்வு செய்கிறார்கள்." அவர்களில், சித்தியடையத் தவறும் மாணவர்கள்தான் தொழிற்கல்வியை நோக்கித் திரும்புகிறார்கள். தொழிற்கல்வி என்பது அத்தகைய தோல்விகளுக்குப் பின்னர் திரும்ப வேண்டிய ஒரு துறை அல்ல. அது மாணவர்கள் தேர்வாக இருக்க வேண்டும்.

எமது கல்வி சீர்திருத்தங்களில் நாம் அடைய எதிர்பார்க்கும் நோக்கம், மாணவர்கள் 10 ஆம் வகுப்பை அடையும் போது அவர்கள் எந்தத் தொழிலைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவை அவர்களுக்கு வழங்குவதும், அந்தப் பாதையை நோக்கி அவர்களை வழிப்படுத்துவதும் ஆகும்.

தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது, எமக்குப் பல்வேறு தொழில்முறை அறிவு கொண்ட மனித வளம் தேவை. எனவே, அந்த மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனையும், நெகிழ்வுத்தன்மையையும், அறிவையும் எமது பிள்ளைகளுக்கு நாம் தொடர்ந்து வழங்க வேண்டும். பிள்ளைகளுக்கு அறிவை வழங்குவதைப் போலவே, அவர்களை மனித நற்பண்புகள் நிறைந்தவர்களாக மாற்றுவதும் அவசியம்.

புதிய உலகிற்குள் பிரவேசிப்பதற்கு தொழிற்கல்வி அவசியம் என்பதால், எமது கல்வி சீர்திருத்தங்களில் தொழிற்கல்விக்கு விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

"இந்த கண்காட்சியின் மூலம் பிள்ளைகள் பல்வேறு தொழில்களைப் பற்றிய சிறந்த விளக்கங்களைப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்." என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி அமைச்சு மற்றும் கைத்தொழில்துறை துறை திறன்கள் பேரவை (ISSC) அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு