பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும். புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் எம்மால் முடிந்துள்ளதென நான் நம்புகிறேன்.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டு வரும் நேர்மறையான கண்ணோட்டம், வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி முறைமை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியமை போன்ற பல பிரதான துறைகளின் ஊடாக 2025ஆம் ஆண்டைப் பற்றி நாம் திருப்தியடையலாம்.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்த துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தம், எமது நாட்டிற்குச் சவாலானதொரு காலப்பகுதியாக அமைந்தது. அது நம் அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்திய போதிலும், அத்தகைய இக்கட்டான தருணத்திலும் இலங்கையர்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், மனிதாபிமானம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிய விதம் குறித்து இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றது. அந்தச் சவால்களை வெற்றிகொண்டு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026ஆம் ஆண்டிற்குள் நாம் கால்பதிக்கின்றோம்.

கல்வித் துறையில் தரமான, அதேநேரம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற,கல்வித்துறையின் மாற்றம், அரச சேவை உட்பட அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கல், சாத்தியமான புதிய எண்ணக்கருக்களைக் கொண்ட முயற்சியாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உலகளாவிய ரீதியில் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குதல், போதைப்பொருள் அற்ற - சுற்றாடலை நேசிக்கும் - மனிதாபிமானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல சிறப்பான நோக்கங்களுடன், இன, மத மற்றும் கட்சிப் பேதங்களற்ற பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த வெற்றிகரமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.
2026 ஜனவரி 01 ஆம் திகதி

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே கிறிஸ்தவ மக்களின் எதர்பார்ப்பாகும்.

ஆனால் இந்தக் குளிர் கால டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சி அல்லது உற்சாகத்துடன் விடியவில்லை. முழு நாட்டையும் உலுக்கிய இயற்கைப் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எமது சகோதர சகோதரிகளின் துன்பங்கள் மற்றும் பெருமூச்சுகளுக்கு மத்தியிலேயே அதனை நாம் அடைந்தோம்.

எனினும், நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதிற் கொண்டு, இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எமது நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்ட தங்கள் சக குடிமக்களுக்காக அன்பு, கருணை மற்றும் இயேசு போதித்த ’மற்றவர்களை நேசித்தல்’ என்ற மகத்தான நன்னெறியினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர்.

நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை நாம் இப்போது அடைந்திருக்கின்றோம்.

உண்மையான மாற்றத்தினை எதிர்பார்த்த இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீண் போகாத வகையில் அவர்கள் எதிர்பார்க்கும் "வளமான நாடு - அழகான வாழ்க்கை"யை உருவாக்கும் ஒரே நோக்கத்திற்காக நாம் தொடர்ந்தேர்ச்சையாக பாடுபட்டு வருகிறோம்.

சிறந்த்தோர் எதிர்காலத்தை நோக்கிய எம் எல்லோருடையவும் அந்த கனவிற்காக, குடிமக்கள் என்ற வகையில் ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம்.

இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய,
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 டிசம்பர் 25-ஆம் திகதி

பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடப் பிரதமர் பதுளைக்கு விஜயம்: மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்

நாட்டைத் தாக்கிய சூறாவளியினால் பதுளை மாவட்டப் பாடசாலைக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் ஆராய்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (டிசம்பர் 24) விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குச் (தேசிய பாடசாலை) சென்ற பிரதமர், அங்கு நிலவும் அனர்த்தகரமான நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்.

​கடும் மழைவீழ்ச்சியினால் மா ஓயா பெருக்கெடுத்ததன் விளைவாக, பாடசாலை வளாகம் பெரும் மண்ணரிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறித்துப் பிரதமர் தனது விசேட கவனத்தைச் செலுத்தினார். இந்நிலைமையினால் பாடசாலைக் கட்டடத் தொகுதிக்கு ஏற்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தல், மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள இடர் மற்றும் பௌதீக வளங்கள் சேதமடையும் சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அதிபருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

​மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

​மண்ணரிப்பைத் தடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

​இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஆகியோருடன் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்தம் மிக்க பகுதிகளில் உள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, ​’டிட்வா​’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், மண்சரிவு போன்ற அச்சுறுத்தல்கள் நிலவும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு இடமாற்றவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

​’டிட்வா​’ சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல தேசிய பாடசாலையை இன்று, டிசம்பர் 24, நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கடும் காற்றினால் மரம் முறிந்து விழுந்ததில் முற்றாகச் சேதமடைந்த கெட்டவத்தை, யோதஉல்பத்த சமூக மண்டபத்தில் இயங்கிவந்த பாலர் பாடசாலையைப் பார்வையிட்ட பிரதமர், பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பான ஓரிடத்தில் குறித்த பாலர் பாடசாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படுகின்றனவா என்பது குறித்துக் கவனம் செலுத்திய பிரதமர், அனர்த்தத்தினால் தொடர்ந்து இயங்க முடியாத அளவிற்குச் சேதமடைந்துள்ள பாலர் பாடசாலைகளைக் கண்டறிந்து, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மண்சரிவு காரணமாகக் கடும் சேதங்களுக்கு உள்ளான பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையையும் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் தியத்தலாவை தீரானந்த தேரர், ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, மாகாணப் பிரதம செயலாளர் அனுஷா கோகுல, மீகஹகிவுல தேசிய பாடசாலையின் அதிபர் எச்.டபிள்யூ.கே.ஏ. பத்மகுமார, பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் கே. இந்துமதி உள்ளிட்ட அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

அனர்த்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவு உறுதி

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இன்று (2025 டிசம்பர் 23) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இலங்கை மீளக்கட்டியெழுப்பும் பணிகளை ஆரம்பித்துள்ள இத்தருணத்தில், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாகவே இந்தச் சந்திப்பு அமைந்தது.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளக்கட்டியெழுப்புதல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், வலுவான சட்ட, நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளின் ஆதரவுடன், பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறைகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினரும் தற்போதைய நிவாரண முயற்சிகளை மீளாய்வு செய்ததுடன், மீட்பு நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னரான மீட்புச் செயற்பாடானது, உடனடி நிவாரண முயற்சிகளுக்கு அப்பால் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது எனக் குறிப்பிட்ட பிரதமர், இதன்போது இந்திய அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காகத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதன் ஓர் அங்கமாகவே பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். அனர்த்த நேரத்தின்போது வெளிப்பட்ட மக்களின் ஒற்றுமை, அவர்களின் தன்னார்வத் தொண்டு மற்றும் கூட்டுச் செயற்பாடுகளைப் பாராட்டிய பிரதமர், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம், அனர்த்தங்களுக்குள்ளாகும் தன்மையைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் இந்தியத் தூதுவர் திரு.Santosh Jha , இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் (IOR) திரு.Puneet Agrawal, இணைச் செயலாளர் திரு.Sandeep Kumar Bayyapu, பிரதித் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேSatyanjal Pandey ஆகியோரும், இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாணிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தெற்காசியா) திரு. சமந்த பத்திரண மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திருமதி டயானா பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்தத்தால் சேதமடைந்த ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப நிலையம் இரண்டு நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் எண்ணக்கருவின் அடிப்படையில் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்தும் செயலணியும் OREL IT தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஹன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிலையத்தை இரண்டு நாட்களுக்குள் இயல்புநிலைக்கு கொண்டுவந்து இன்று (டிசம்பர் 22) மாணவர்களிடம் கையளித்தன.

அண்மையில் ஏற்பட்ட திட்வா புயல் காரணமாக ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிலையம் கடுமையாக சேதமடைந்தது.

திடீர் அனர்த்த நிலைமை காரணமாக, நாட்டில் உள்ள ஏராளமான ப்டசாலைகளின் உட்கட்டமைப்பு அழிவடைந்ததுடன், பிரதமரின் செயலாளரின் அழைப்பின் பேரில் சேதமடைந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பை மீட்டெடுக்க OREL IT நிறுவனம் தனது உதவியை வழங்கியது.

அனுராதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த பல பாடசாலைகளின் தகவல் தொழில்நுட்ப நிலையங்கள், பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், OREL IT நிறுவனத்தால் கடந்த இரண்டு வாரங்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டன. அதைத் தொடர்ந்து, OREL IT மற்றும் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான செயலணி ஆகியவை ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிலையத்தை இரண்டு நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவந்து மாணவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளின் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம், பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான செயலணி ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி அர்ஜுன ரத்நாயக்க, OREL IT நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி உபேந்திர பீரிஸ், OREL IT நிறுவனத்தின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு