லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது அழுத்தங்களுமின்றி, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான அனைத்துப் பின்னணிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று,மார்ச் 17, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிப்பது தொடர்பான இடைக்கால முன்மொழிவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் முன்மொழிவானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவாகும் என நான் கருதுகின்றேன்.
2023ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது தொடர்பான ஆணைக்குழுவொன்று இருப்பதை நாம் 2025ஆம் ஆண்டிலிருந்தே உணரத் தொடங்கினோம். அதன் பின்னர், இந்த ஆணைக்குழுவைச் செயற்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக, பணியாளர்களை இணைத்துக்கொள்வதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் ஆணைக்குழுவின் தேவைக்கேற்பச் செயற்படுவதைத் தடுக்கும் ஏராளமான தடைகளும் சவால்களும் இருந்து வந்தன.
குறிப்பாக, ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் போது, தனது பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரம், செயற்பாட்டிற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளை வரையறுப்பதற்கான சுதந்திரம், அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் வருடாந்தத் திட்டங்களுக்கு அமைவான நிதி ஒதுக்கீட்டு மதிப்பீடுகளைச் சமர்ப்பித்தல் போன்ற பல நடைமுறைச் சாத்தியமான நிலைமைகளையும் நிபந்தனைகளையும் உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்ற போது, சுமார் 4,000-இற்கும் அதிகமான கோப்புகள் விசாரணைகள் முடிந்த நிலையிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தேங்கிக் கிடந்தன. மேலும், அங்கு வெறும் 31 சட்ட அதிகாரிகள் மாத்திரமே பணியில் இருந்தனர்.
இந்த முன்மொழிவு நிறைவேற்றப்படுவதன் மூலம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம், அவர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிக்கும் சுதந்திரம், நிதி விவகாரங்களில் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை ஆகியவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் புதிய அரசியல் கலாசாரத்தினுள் ஊழலற்ற, லஞ்சத்துக்கு எதிரான சுத்தமான அரச சேவையை உருவாக்குவதற்கான மிக முக்கியமானதொரு அடித்தளம் இடப்படுகின்றது, என அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:
தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறை ஆகியன பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் இவ்வாறான நிலைமைகளை எம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாதுள்ளது. இப்பாதிப்புகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு தருணமாகும். இருப்பினும், அரசாங்கம் என்ற ரீதியில் இம்மாற்றங்களை இனங்கண்டு, அதன் மூலம் எமது பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதே எமது பொறுப்பாகும். அதற்காக, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விசேட குழுக்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய,அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான குழு. அரசத் துறையில் எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி, சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான குழு. தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, எரிசக்தியைப் பெற்றுக்கொள்வதில் தற்போதுள்ள முறைகளுக்கு மேலதிகமாகப் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுவதற்கான குழு. இந்த நெருக்கடியால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்கள், குறிப்பாகச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நியாயமான தீர்வுகளைக் காணுதல் மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான குழு ஆகிய குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இவை நாம் ஒரு நாடாகக் கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளாகும். இதற்காக எமது அரச சேவையினரும், தனியார் துறையினரும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பேதமின்றி அரசியல் அதிகாரத் தரப்பினரும், நாட்டு மக்களும் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில் சவால்களை எதிர்கொண்டது போலவே, இப்போதும் நாம் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும். சரியான தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்தினூடாக, தேவையான தருணத்தில் உரிய தீர்மானங்களை மேற்கொண்டு இந்த இக்கட்டான நிலைமையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு, எனப் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு





