பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

“எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை. எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது. “எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை. எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், அந்த உணர்வே நாம் எதிர்கொண்ட ஒவ்வொரு நெருக்கடியின்போதும் எம்மை முன்னோக்கிக் கொண்டு சென்றிருக்கின்றது,” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், 2025 டிசம்பர் 04ஆம் திகதி கொழும்பு ஐ.சி.டி (ICT) ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற, வருகை தந்திருந்த NASSCOM நிர்வாகக் குழு மற்றும் SLASSCOM தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

டிஜிட்டல்-பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) எதிர்காலப் பாதை குறித்துக் கலந்துரையாடுவதற்காக 3,000இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் உயர் தொழில்நுட்பத் துறைசார் நிறுவனமான NASSCOM மற்றும் 350 இற்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களைக் கொண்ட IT மற்றும் BPM துறைக்கான இலங்கை தேசியச் சபையாகிய SLASSCOM சங்கம் ஆகியன இந்த நிகழ்வில் இணைந்துகொண்டன.

நாட்டின் அண்மையகால சவால்களுக்கு மத்தியிலும் இலங்கைக்குத் தமது வருடாந்த விஜயத்தை மேற்கொண்ட NASSCOM பிரதிநிதிகள் குழுவைப் பாராட்டிய பிரதமர், அவர்களது வருகை இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கும் மீள்கட்டுமானத்திற்கும் பலம் சேர்த்திருப்பதாகத் தெரிவித்தார். மீள்குடியேற்றம், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை வலுப்படுத்துதல், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய மறுசீரமைப்புப் பணிகளை வழிநடத்த அரசாங்கம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் இதன்போது விளக்கமளித்தார்.

கலந்துரையாடலின்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இலங்கையின் பொருளாதாரத் திட்டம் உறுதியாகப் பேணப்படுவதை வலியுறுத்தினார். மத்திய கால மற்றும் நீண்ட கால இலக்காக 7% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் இலக்காகக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்தல் ஆகிய முக்கிய துறைகளுக்கு வருகை தந்திருக்கும் தொழில்நுட்பப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் எடுத்துரைத்தார். “வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். இந்தத் துறைகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தி வரும் செயல்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், கல்வி அமைச்சினால் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை தொடர்பான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவது ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஏனைய அமைச்சுகளும் தமது டிஜிட்டல் மயமாக்கல் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் தமது முறைமைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

அனர்த்த நிலைமைகளைக் கண்டறிதல், வரைபடமாக்கல் மற்றும் புவியியல் தரவுகளைப் பெற்றுக் கொள்ள ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்மொழிவை பிரதமர் ஏற்றுக்கொண்டார். அத்தோடு, ஆவணப்படுத்தல் மற்றும் காலத்திற்கேற்ற கண்காணிப்பு உட்பட இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதிநிதிகள் முன்வந்தனர். தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டு மழையின் சரியான முன்னறிவிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் வரையறுக்கப்பட்டிருந்தது என்றும், இதனால் எதிர்கால அனர்த்த நிலைமைகளைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கையின் முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகளை வலுப்படுத்துவதிலும் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை விளக்கிய பிரதமர், IT மற்றும் BPM முதலீடுகளுக்கு இலங்கையை ஒரு முன்னணித் தளமாக மாற்றுவது தொடர்பான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு, மறுசீரமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான முன்முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார். மனித வளத்தை மேம்படுத்துதல், கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் தேசியத் திட்டம் மூலம் 2030ஆம் ஆண்டளவில் IT மற்றும் BPM துறையின் ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு இலங்கை இலக்கு வைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். அரச துறையை டிஜிட்டல் மயமாக்குதல், டிஜிட்டல் அடையாள அட்டை முறைமையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்துவதையும், முன்னணி இந்திய மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத் தொழில்களுக்கான மூலோபாய விரிவாக்கச் சந்தையாக இலங்கையை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட NASSCOM மற்றும் SLASSCOM இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு முயற்சியாகும். அத்துடன் 2026ஆம் ஆண்டில் NASSCOM தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றம் (Technology and Leadership Forum) SLASSCOMஇன் அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கு இணையாக இது அமைந்தது.

இந்த நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா மற்றும் SLASSCOM, NASSCOM ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே அரசாங்கம் பொறுப்புக்கூறும்.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் பாராட்டுக்குரிய பங்களிப்பை தற்போது வழங்கி வருவருகின்றன. அவ்வாறு பங்களிப்புச் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர்களின் நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அரசாங்கத்தினால் சில வங்கிக் கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதிப் பங்களிப்புகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் அமைச்சுக்கள் நேரடியாகப் பொறுப்புக்கூரும்.

நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வேறு எந்தவொரு அமைப்பு அல்லது தனியாரின் வங்கிக் கணக்குகளுக்கு  இந்த அமைச்சு அனுமதியோ,அங்கீகாரமோ வழங்கவில்லை.  அத்தகைய நிதிப் பங்களிப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் அல்லது தனிநபர்களே ஏற்றுக்கொள்வார்கள்.

இந்தக் இக்கட்டான தருணத்தில் மக்கள் வழங்கி வரும் பங்களிப்பைப் பாராட்டும் அதே வேளை, மாணவர்களுக்கான நிதிப் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்கும் போது, அதன் நம்பகத்தன்மை குறித்து மக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அரசாங்கத்தின் வங்கிகணக்குப் பற்றிய தகவல்களுக்கு பிரவேசியுங்கள்  www.donate.gov.lk

வங்கி பரிமாற்றங்களுக்கு

1. US Dollar (USD)
Bank: Deutsche Bank Trust Company Americas, New York, USA
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 04015541
Routing Number: 021001033
SWIFT: BKTRUS33XXX

2. Euro (EUR)
Bank: ODDO BHF Bank, Frankfurt am Main, Germany
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 0000739854
IBAN: DE39500202000000739854
SWIFT: BHFBDEFF500

3. Pound Sterling (GBP) – Account 1
Bank: HSBC Bank Plc, London, UK
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 39600144
Sort Code: 40-05-15
IBAN: GB48MIDL40051539600144
SWIFT: MIDLGB22XXX

4. Pound Sterling (GBP) – Account 2
Bank: Bank of Ceylon (UK) Ltd, London, UK
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 88001249
Sort Code: 40-50-56
IBAN: GB89BCEY40505688001249
SWIFT: BCEYGB2LXXX

5. Japanese Yen (JPY)
Bank: MUFG Bank, Tokyo, Japan
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 653-0407895
SWIFT: BOTKJPJTXXX

6. Australian Dollar (AUD)
Bank: Reserve Bank of Australia
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 81736-4
BSB: 092002
SWIFT: RSBKAU2SXXX

7. Sri Lankan Rupees (LKR)
Account Name: Deputy Secretary to the Treasury
Account Number: 2026450
Bank: Bank of Ceylon
Branch Name : Thaprobane branch
Swift: BCEYLKLX

8. Sri Lankan Rupees (LKR)
Account Name: Deputy Secretary to the Treasury
Account Number: 014100130110432
Bank: People’s Bank
Branch: Union Place Branch
SWIFT: PSBKLKLX

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்த நிலைமை காரணமாகக் குவிந்துள்ள குப்பைகளை முறையான வேலைத்திட்டத்தின் மூலம் விரைவாக அகற்றி, சுத்தம் செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மேற்கு மாகாணக் கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (04) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது, அனர்த்த நிலைமை காரணமாகக் குவிந்துள்ள குப்பைகளை முறையான வேலைத்திட்டத்தின் கீழ் அகற்றி, சுத்தம் செய்யும் பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், குவிந்துள்ள குப்பைகளை விரைவாக அகற்றுவதற்காக, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கெரவலப்பிட்டியவில் உள்ள ஐந்து ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. ஆகையினால், தற்போது குவிந்துள்ள குப்பைகளை எவ்விதப் பிரச்சினையும் இன்றி அகற்ற முடியும் எனக் குழு தீர்மானித்தது. அந்தக் காணியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சர் எரங்க குணசேகர, மேற்கு மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான லக்ஷ்மன் நிபுணஆராச்சி, கொழும்பு மாநகர முதல்வர் விராய் கெலி பல்தசார், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார, மேலதிக மாவட்டச் செயலாளர் கௌசல்யா குமாரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோரும், காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும், மின்சார சபையின் மேலதிகப் பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அயராது பாடுபடும் முப்படைகள், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் அனைத்து வெளிநாடுகளுக்கும் அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் முப்படைகள், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நாட்டு மக்கள் மற்றும் அனைத்து வெளிநாடுகளுக்கும் அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலைமை குறித்துப் பிரதமர் இன்று (03) பாராளுமன்றத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர்,

கடந்த சில நாட்களாக, நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. முதலாவதாக, இந்தப் பேரிடரால் உயிர் இழந்த, இடம்பெயர்ந்த, சொத்துச் சேதங்களைச் சந்தித்த, பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட எனது சக குடிமக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பேரழிவால் இடம்பெயர்ந்த அனைவருக்கும், வீடுகள், வணிகங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப, ஒரு அரசாங்கம் என்ற வகையில், சாத்தியமான சகல ஆதரவையும் வழங்குவோம் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கடந்த சில நாட்களாக, குறிப்பாக, நமது நாட்டின் அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பேரிடரால் பாதிக்கப்பட்ட நமது சக குடிமக்களை மீட்டு, நிவாரணம் வழங்கக் கடுமையாக உழைத்துள்ளனர். அரச அதிகாரிகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்ட, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, இந்தச் சவாலை எதிர்கொள்வதில், நமது மக்களிடையே ஒற்றுமை, தைரியம், கருணை, இரக்கம் மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றைக் கண்கூடாகக் காணக் கிடைத்தது. இது இந்தப் பணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல எமக்கு மேலும் பலத்தை அளிக்கிறது.

இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அயராது உழைத்த இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார், அரச அதிகாரிகள் மற்றும் அனைத்து அவசர நிவாரணக் குழுக்களுக்கும் எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களும் உள்ளனர், இது எளிதில் காணக்கூடிய ஒரு விடயம் அல்ல. அவர்கள் அனைவரையும் நான் மரியாதையுடன் இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன். அதேபோல், மீட்புப் பணியின் போது வென்னப்புவ, லுனுவில, ஜின் ஓயாவில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகொப்டரின் விமானி விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய, வெள்ள அனர்த்தத்தைக் கட்டுப்படுத்த சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் கழிமுகத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன ஐந்து கடற்படை அதிகாரிகளுக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றத் தனது உயிரைப் பணயம் வைத்த வீரத்தை ஒருபோதும் மறக்க முடியாது.

மேலும், ஆளுநர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குநர்கள் இந்த கடினமான நேரத்தில் களத்தில் இருந்து நேரடியாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையும் பாராட்டப்பட வேண்டும்.

விசேட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அரச நில அளவைத் திணைக்களம், தொலைபேசி சேவை நிறுவனங்களின் ஊழியர்கள், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகிய நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தியாவசிய சேவைகளை வழமைக்குக் கொண்டு வர அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

எமது சுகாதாரத் துறை, மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மருத்துவச்சிகள் மற்றும் சமூகச் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் அயராத அர்ப்பணிப்புக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வக் குழுக்கள், இளைஞர் குழுக்கள், மகளிர் குழுக்கள், அமைப்புகள் மற்றும் மத நிறுவனங்களையும் நாம் குறிப்பாகக் குறிப்பிட வேண்டும். இவர்கள் அனைவரும் எந்த இலாப நோக்கமும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள். இந்த நோக்கத்திற்காக அவர்கள் பல நாட்களாக அயராது உழைத்து வருகின்றனர். ஒரு நாடாக, இலங்கையாக, நமக்கு இருக்கும் மிகவும் மதிப்புமிக்க பலம், மனிதநேயத்தை அறிந்த, பிறர் மீது இரக்கம் கொண்ட நமது மனித இதயங்களே. இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.

இந்தச் சவாலான நேரத்தில் என்னோடு நின்று எமக்குப் பலம் அளித்த நமது நட்பு நாடுகளையும் நான் குறிப்பாக நினைவில் கொள்ள விரும்புகிறேன். எமக்குப் பல்வேறு உதவிகளை வழங்கவும், எமது தேவைகளை ஆராயவும் இராஜதந்திர மட்டத்தில் பங்களிப்பை வழங்கிய அனைத்து வெளிநாடுகளுக்கும், அந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டுத் தூதரகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும், இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவத் தயாராக இருக்கும் பல சர்வதேச அமைப்புகள் இருக்கின்றமையும் இந்த நேரத்தில் எமக்கு ஒரு பலமாக இருக்கிறது. குறிப்பாக நான் அவர்களை நினைவில் கொள்கிறேன்.

அத்துடன், வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அவர்களின் பல்வேறு அமைப்புகள் தமது தாயகம் தற்போது எதிர்கொள்ளும் பேரழிவைக் கண்டு, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அவர்களது சொந்தக் காலில் நிற்க உதவவும் முன்வந்துள்ளனர். உலகில் எங்கிருந்தாலும், துயரங்களை எதிர்கொள்வதில் எனது சக இலங்கை மக்களின் தலையீடு, அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுக்காக நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.

தற்போதைய நிலைமை குறித்த துல்லியமான தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகத்துறை சார்ந்தோருக்கும் மற்றும் குடிமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீட்புப் பணிகளை வழிநடத்துவதிலும், சரியான நிர்வாகத்தை உறுதி செய்வதிலும், பொதுமக்களைப் பாதுகாப்பாக வழிநடத்துவதிலும் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதனுடன், நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு விசேட அம்சமும் உள்ளது. சிலர் பல்வேறு நன்மைகளுக்காக இந்தத் தருணத்திலும் தவறான தகவல்களைப் பரப்புவதை நாம் காண்கிறோம். இருப்பினும், துல்லியமான தகவல்களைப் பொறுப்புடன் பகிர்ந்துகொள்வதில் உங்களது சேவையானது இவை அனைத்தையும் நிர்வகிப்பதில் எமக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

இந்த அவசர நிலைமையில் பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்த கல்வி அமைச்சின் செயலாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரீட்சை ஆணையாளர் நாயகம், பிரதி ஆணையாளர்கள் நாயகம் உள்ளிட்ட பரீட்சைத் திணைக்களத்தின் ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் பாதுகாக்கவும், பரீட்சை மையங்களைப் பாதுகாக்கவும், பரீட்சை செயல்முறையின் நேர்மையைப் பராமரிக்கவும் எடுத்துக்கொண்ட அவர்களின் அயராத முயற்சிகள் அவர்களின் தொழில்மீதான அர்ப்பணிப்புக்கு ஒரு உண்மையான சான்றாகும்.

இந்த நேரத்தில், தலவாக்கலை சுமன மகா வித்யாலயத்தில் இயங்கும் பிரதேச சேகரிப்பு மையத்தின் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரி, பணியில் இருந்த உத்தியோகத்தரின், மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் இழக்க நேர்ந்ததை மிகுந்த வருத்தத்துடன் நினைவு கூறுகிறேன். அது மிகவும் துன்பகரமான ஒரு சம்பவமாகும்.

அதேபோல், நமது பாடசாலைகளைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், பரீட்சைகள் இடையூறு இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யவும் இரவும் பகலும் உழைத்த ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஊழியர்கள், மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மாகாண, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். துன்பங்களுக்கு மத்தியிலும், உங்கள் அர்ப்பணிப்பானது முன்மாதிரியானது.

நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைத்து, விரைவான தொடர்பாடல் மூலம் தகவல்களை நிர்வகித்து, ஒவ்வொரு சவாலுக்கும் உடனடியாக பதிலளித்த பரீட்சைத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சின் ஊழியர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

உயர்கல்வி, தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து இணைக்கப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் அவர்களின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நெருக்கடியின் போது வளங்கள், வசதிகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை வழங்க உங்கள் ஆதரவு, நெகிழ்வுத்தன்மை மற்றும் தயார்நிலை ஆகியவை உண்மையான தேசிய ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன. மேலும், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் வழங்கி வரும் ஆதரவை பற்றியும் இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் நாம் மேற்கொண்ட மிக முக்கியமான தீர்மானம், எமது மாணவர்களின் கல்விக் கற்றல் தொடர்வதை உறுதி செய்யும் வகையில், அவர்களை உளரீதியாக மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த விடயத்தில் உங்கள் தொடர்ச்சியான ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில், இதனை நேர்த்தியாக முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

அமைச்சுகள், மாவட்டங்கள், மாகாணங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு முயற்சி, நமது கல்வி முறை வெறுமனே ஒரு முறைமை அல்ல, மாறாக அது ஒரு குடும்பம் என்பதை நிரூபிக்கின்றது. கல்வி அமைச்சர் என்ற வகையில், இந்த மகத்தான தேசியப் பணிக்குப் பங்களித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன்.

நாம் எப்போதும் கூறுவதைப் போல், நமது பலம் நம் நாட்டின் குடிமக்களே. அவர்களின் கருணைமிக்க இதயங்களே. மற்றவர்கள் மீது இரக்கத்துடனும், மிகுந்த மனிதாபிமானத்துடனும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் குடிமக்களின் இதயங்களைப் பற்றி நாம் பெருமை கொள்கிறோம். பெரும் பேரழிவை எதிர்கொண்டப்போதிலும், கடின உழைப்பு, செயல்திறன், மனிதநேயம் மற்றும் கருணை மிக்க ஒரு நாடாக நமது பலம் என்ன என்பதை நம் நாட்டவர்கள் முழு உலகிற்கும் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

தமது கஷ்டங்களையும் துன்பங்களையும் பொருட்படுத்தாது, "என்னால் முடிந்ததை நான் தருகிறேன்" என, முன்வந்து இரண்டு பனடோல் பாக்கெட்டுகளை நன்கொடையாக வழங்கிய அந்த "தாயின்" கருணை, நமது தேசத்தின் கருணை, தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இது ஒரு கடினமான நேரம். நம் முன்னே ஒரு சவாலான பயணம் உள்ளது, அதைச் சிரமங்களுக்கு மத்தியிலேயே கடக்க வேண்டி இருக்கின்றது. இந்த நேரத்தில் மற்றவர்கள் மீது கருணை, அன்பு மற்றும் புரிதலுடன் செயல்படுவது அவசியமாகும். உயிரிழந்த அனைவர் பற்றியும் நமது இதயங்களில் ஏற்பட்ட வலியும் அதிர்ச்சியும் ஒருபோதும் நமது இதயங்களை விட்டு நீங்காது. இருப்பினும், நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்தப் பெரும் துயரத்தைத் தாண்டி நாம் உயர வேண்டும். நாம் ஒற்றுமை, தைரியம், புதிய அணுகுமுறைகள் மற்றும் புதிய உயிர்ப்புடன் மீண்டும் எழ வேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை வைத்து அதில் இணைந்ததற்காக அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நேரத்தில் சகல வித கட்சிச் சார்புகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பாடுபடுவோம் என நமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.

மின்தடை, தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு நீங்கள் காட்டிய பொறுமையும் வலிமையுமே நமது ஒட்டுமொத்தத் தேசத்தின் பலம் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தக் கடினமான நேரத்தில் பல்வேறு வழிகளில் நீங்கள் வழங்கிய பங்களிப்புகள், தைரியம் மற்றும் ஒற்றுமைக்கு எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் விளக்கமளித்த பிரதமர்,

யாழ்ப்பாண மாவட்டத்தின் எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. 1999ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பாடசாலைகளின் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்காகக் காரைதீவில் அமைந்துள்ள சென். அந்தோனிஸ் கல்லூரியின் பரீட்சை நிலையத்திலேயே தோற்றுகின்றனர். எழுவைதீவிலுள்ள பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த எண்ணிக்கையாக இருப்பதால், அவை பரீட்சை நிலையங்களாகப் பேணப்படவில்லை. புள்ளிவிவரப்படி, 2022இல் 10 மாணவர்களும், 2023இல் 8 மாணவர்களும், 2024இல் 5 மாணவர்களுமே சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். எனவே, இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படாமல், மிக அண்மையிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த மாணவர்களுக்குக் காரைதீவுத் தீவில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

அதேபோல், தற்போது நடைமுறையிலுள்ள வரலாற்றுப் பாடத்தில் தமிழ் மன்னர்கள் குறித்து உள்ளடக்கப்பட்டுள்ளது. பத்தாம் தரத்தின் ஏழாவது பாடத்தில் அதற்கென ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, பத்தாம் தரத்தின் பத்தாவது பாடத்தில் யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய ஓர் அத்தியாயமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் சங்கிலி மன்னன் ஆட்சி செய்த காலம் குறித்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், நாம் தற்போது ஆறாம் ஆண்டுக்கான வரலாறு பற்றிய புதிய பாடத்திட்டங்களைத் தயாரித்துள்ளதுடன், அதில் சங்கிலி இராச்சியத்தின் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்கும்போது சிங்களம் மற்றும் தமிழ் எனப் பிரித்துக் கற்பிக்கப்படுவதில்லை. இலங்கையின் வரலாறு என்ற வகையில் பல்வேறு காலப் பகுதிகளில் மன்னர்கள் மற்றும் இராச்சியங்கள் குறித்துக் கற்பிக்கப்படுகின்றன.

இலங்கையின் வரலாற்றைப் பாதுகாப்பதிலும், காட்சிப்படுத்துவதிலும் முன்னோடியான தேசிய அருங்காட்சியகத் திணைக்களம், தமிழர் வரலாற்றைக் காட்சிப்படுத்துவதற்காகக் காட்சிக்கூடங்களில் இடங்களை ஒதுக்கியுள்ளது. கொழும்பு அருங்காட்சியகத்தின் கல் புராதனப் பொருட்கள் கூடங்களில், நான்கு தமிழ்த் தூண் கல்வெட்டுகளும், இரண்டு தமிழ்க் கல்வெட்டுக் கடிதங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள், இந்தியாவின் இராசராச மற்றும் இராஜேந்திராதிராச மன்னர்களின் இலங்கைப் பிரதிநிதிகளாலும் ஆரியச்சக்கரவர்த்தி ஆரியர்களாலும் நிறுவப்பட்ட கல்வெட்டுகளாகும். மேலும், கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு நூல் பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்டுள்ளதுடன், திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவினால் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல, இந்து மதத்தைச் சேர்ந்த சிவன், பார்வதி, நடராசர், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கல் மற்றும் வெண்கலச் சிலைகளும் சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, யாழ்ப்பாண இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட சேது நாணயங்களின் தொகுப்பு ஒன்று பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சங்க காலத்தைச் சேர்ந்த சோழ மற்றும் பாண்டிய நாணயங்கள் குறித்து கலாநிதி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேனரத் விக்ரமசிங்க ஆகியோரால் எழுதப்பட்ட ஒரு நூலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சித்திரக்கலை பாடமானது நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் சிறந்த கலைப் படைப்புகளைக் கற்பதற்கான ஒரு பாடமாகும். இந்தப் பாடத்திட்டத்தைத் தயாரிக்கும்போது குறிப்பாகச் சர்வ தேசிய, சர்வ மத மற்றும் சர்வ பௌதிக கலைப் படைப்புகளை உள்ளடக்கிய சர்வதேசத் தரம் கவனத்தில் கொள்ளப்பட்டது. அத்தோடு, சித்திரக்கலை பாடத்தின் மறுசீரமைப்பின்போது இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஏற்ப, முதலீட்டுப் பின்னணியையும் சூழலையும் உருவாக்கி, தந்திரோபாய ரீதியிலும் சரியான கொள்கைகளின் அடிப்படையிலும் செயற்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

ஏற்பட்டுள்ள நிலைமைகளைச் சமாளிக்க, தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டும் என்றும், வரவுசெலவுத் திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு முதலீட்டுப் பின்னணியையும் சூழலையும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சரியான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு ஷங்ரிலா (Shangri-La) விடுதியில் டிசம்பர் 02ஆம் திகதி நடைபெற்ற ’இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு 2025’ (SRI LANKA ECONOMIC AND INVESTMENT SUMMIT 2025) இல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள சுமார் 100 முதலீட்டாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் ’இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு 2025’ நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்ததாவது:

"இலங்கைக்காக முன்மொழியப்பட்டிருக்கும் எதிர்வு கூறலுக்கு அமைய, முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம். எம்மால் மீண்டும் பின்னோக்கிச் செல்ல இயலாது. நாட்டைப் பின்னோக்கிச் செல்லவிடவும் முடியாது. ஆகையால், நாம் ஏற்படுத்திக் கொண்ட இலக்குகளை அடைவதே எமது இலக்காகும்.

தற்போது நிலவுகின்ற சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் மாறும்போது, நாமும் அதற்கு இணங்கிச் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமைகளைச் சமாளிப்பதற்காக, நாம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆயினும், அரசாங்கத்தின் இலக்குகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. வரவுசெலவுத் திட்ட உரையின்போது, ஜனாதிபதி அவர்கள் நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், டிஜிட்டல் மயமாக்கல், உற்பத்தித்திறன் மிக்க பொருளாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தினார்.

அந்த இலக்குகளை அடைவதற்குச் சரியான பாதையில் பயணிக்க வேண்டுமென நாம் உறுதிபூண்டுள்ளோம்.

அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் பிரதான தந்திரோபாய முன்மொழிவுகள் குறித்துப் பேசியது. வர்த்தகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மறுசீரமைப்புச் செயல்முறைகளுக்கான ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவுகளும் அதில் உள்ளடங்குகின்றன. அதற்கான பல சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் பணியை நாம் ஏற்கெனவே ஆரம்பித்து இருக்கின்றோம். அவை அடுத்த வருட ஆரம்பத்தில் முன்வைக்கப்பட உள்ளன. அவற்றைத் தாமதப்படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. உண்மையில், நாம் இன்னும் வேகமாக முன்னோக்கிச் செல்வோம், ஏனெனில் அது எமது மீண்டும் கட்டி எழுப்பும் தந்திரோபாயத்தின் ஓர் அங்கமாகும்.

பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்குத் தேவையான சூழல் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதை நாம் உறுதிப்படுத்துவோம். ஆகையினால், எதையும் பிற்போடுவதில் எண்ணம் எமக்கு இல்லை.

ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமைக்கு ஏற்ப தந்திரோபாயத்துடன் செயற்பட வேண்டி இருக்கின்றது. அத்தோடு, எமது வரவுசெலவுத் திட்டத்திலும் சில பொருத்தங்களை ஏற்படுத்த வேண்டி வரலாம்.

இந்த அழிவில் இருந்து மீண்டு வர முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நாம் எமது பொருளாதாரத்தை வலுவானதாகவும் தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் வைத்திருக்க வேண்டும். இவை வெறும் ’அலங்காரத்திற்காக செய்யப்படும் மேலதிக விடயங்கள்’ அல்ல. பொருளாதாரத்தை நிலையானதாகவும், போட்டியிடக் கூடியதாகவும் வைத்திருப்பதற்கு இவை அடிப்படைக் காரணிகளாகும். ஆகையினால், இந்த அத்தியாவசிய விடயங்களைச் செய்து ஆகவேண்டும். அதற்குத் தேவையான நிதியைத் தேடிக்கொள்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இதன் போது நிதியை விடச் சரியான கொள்கைகளே மிகவும் முக்கியமாகின்றன.

உதாரணமாக, ஒற்றைச் சாளர முறைமையை (single window) முன்னெடுத்துச் செல்வதற்கு அதிக செலவு ஏற்படாது. அது ஒரு முகாமைத்துவம் பற்றிய விடயம். ஆதலால், கொள்கைகளைச் சரியாக வகுப்பதே மிக முக்கியமானதாக அமைகின்றது. அதேபோல, அனைவரும் சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்படுவதை உறுதிப்படுத்த அரசியல் தலையீடும் முக்கியமானதாக அமைகின்றது.

எமது நாட்டில் கல்வித் துறையில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றத்தை நான் ஒரு மறுசீரமைப்பு என்பதைவிட ’மாற்றம்’ (transformation) என்று குறிப்பிட விரும்புகிறேன். காரணம், நாம் தற்போதுள்ள முறைமையை மறுசீரமைப்பதற்குப் பதிலாக, ஒரு புதிய முறைமையை அறிமுகப்படுத்தவே திட்டமிடுகிறோம்.

இந்த மாற்றம் ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அவை: மதிப்பீட்டு மற்றும் விசாரணை முறைகளின் மறுசீரமைப்பு, கல்வி நிர்வாகத்தின் மறுசீரமைப்பு, பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியனவே ஆகும். நாம் முன்மொழியும் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கின்றன. முதலாவது, மதிப்பீட்டு முறைமையின் மாற்றம். தற்போது எமக்கு இருப்பது பரீட்சையை இலக்காகக் கொண்டு கற்பித்தல் நடைபெறும், பெரும்பாலும் பரீட்சையை மையமாகக் கொண்ட முறைமையாகும். இதனால், மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி அடைவதற்காகவே கற்கிறார்கள்.

நாம் இதை பாடசாலை அடிப்படையிலான, தொடர்ச்சியான மதிப்பீட்டு முறைமையாக மாற்ற விரும்புகிறோம். இதன்மூலம் போட்டிப் பரீட்சைகள் மீதான கவனம் குறையும். அதேநேரம், கற்றலை ஓர் அனுபவமாகவும் செயற்பாடாகவும் கருதுவதில் அதிக கவனம் செலுத்தப்படும். கட்டக முறைகள் (Modular Systems), பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தவும், பரீட்சை பற்றிய சுமையைக் குறைக்கவும் நாம் திட்டமிடுகிறோம். இது கல்வியில் ஒரு பாரிய மாற்றம். இதற்கு, கற்றலை நோக்கும் விதத்தில் ஒரு மனப்பாங்கு மாற்றமும் தேவைப்படுகிறது.

நாம் ஏற்படுத்த இருக்கும் இரண்டாவது பாரிய மாற்றம், தொழிற்கல்வியை (Vocational Education) முதன்மை கல்வியில் ஒரு முறைசார் பாடத்திட்டமாகத் தெரிவு செய்யத்தக்க பாடமாக அறிமுகப்படுத்துவதே ஆகும்.

தற்போது, தொழிற்கல்வி என்பது ’தோல்வியடைந்தவர்களின் தெரிவு’ என்றே கருதப்படுகிறது. எவரேனும் பரீட்சையில் தோல்வியடைந்தால் அல்லது வகுப்பறையின் பின்வரிசையில் இருக்கும் மாணவராக இருந்தால், அவர்கள் மாத்திரமே தொழிற்கல்விக்கு அனுப்பப்படுகிறார்கள். மேலும், பொதுவாகத் தொழிற்கல்வி பெற பாடசாலையில் இருந்து விலக வேண்டியுள்ளது. நாம் முன்மொழிவது என்னவென்றால், தரம் 6 இலிருந்தே தொழிற்கல்வியைத் முதன்மை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றுவதுதே ஆகும். இதன் மூலம், அனைத்து மாணவர்களும் தொழில்சார் துறைகளை அடையாளம் காண முடியும். அத்துடன், கல்வியின் ஒவ்வொருப் படியிலும் ஒரு தொழில்சார் பாதையைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். இது ஜேர்மன் முறைமைக்கு ஓரளவுக்குச் சமமானது. அங்கு பாடசாலையில் கற்கும் காலப்பகுதியைப் போலவே, தொழில்நுட்பப் பயிற்சிக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் ஒதுக்கப்படும்.

அதேபோல, நாம் வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் தனியார் துறையுடன் மிக விரைவில் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம். மேலும், திறன் தேவைப்படும் துறைகளை அடையாளம் காண, தனியார் துறையிடம் இருந்து எமக்குத் தொடர்ச்சியான தகவல்கள் தேவைப்படுகின்றன.

எமது மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி (Internships) வழங்குவதற்கும், தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்கும் தனியார் துறை பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பாடவிதானங்களைத் தயாரிப்பதற்கும் அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு, நான் இதையும் குறிப்பிட வேண்டும், எமது கல்வி மறுசீரமைப்பின் நோக்கம் வெறுமனே தொழில் சந்தைக்காக ஒருவரை உருவாக்குவது மட்டும் அல்ல. குறிப்பாக, எமக்குத் தேவைப்படுவது ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதே. பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்வது ஒரு நல்ல குடிமகனாக இருப்பதன் ஒரு பகுதியே ஆகும். ஒரு பணியாளராக, தொழில்முனைவோராக அல்லது ஆக்கப்பூர்வமான ஒருவராக நாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய குடிமக்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

’இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு 2025’, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி குழுமம், வெளிவிவகார அமைச்சு, இலங்கை வர்த்தகத் திணைக்களம், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்குதாரர்கள் பலரின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

பிரதமர் ஊடகப் பிரிவு