உள்ளூராட்சி நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான குழு நேற்று (03) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் கூடியது.

இந்த குழுவை ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், (அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட) மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில் நிறுவப்பட்டது.

உள்ளூராட்சி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்தல், அந்த நிறுவனங்களின் நிதி ஒதுக்கீடுகளின் முகாமைத்துவம், அனைத்து விடயங்களையும் கண்காணித்தல் மற்றும் பேணுதல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் பல்வேறு முறைமைளை இந்த குழுவின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், இது தொடர்பான சில விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள்,
“நாட்டில் ஏற்பட்டிருந்த பத்து மாத கால பின்னடைவு கடந்த ஆறு மாதங்களில் படிப்படியாக முன்னேற்றமடைந்துள்ளது. நிதி நெருக்கடி, புதிய ஊழியர் ஆட்சேர்ப்பு சுற்றறிக்கை என பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளன. ஜனாதிபதி அவர்கள் சுற்றறிக்கை மற்றும் நேரடி அறிவிப்பு மூலம் ஒவ்வொரு மாவட்டக் குழுவிற்கும் ஆளுநர்களை இணைத் தலைவர்களாக நியமித்துள்ளார். அபிவிருத்திப் பணிகள் மற்றும் பதவிக் காலம் முடிவடைந்த உள்ளுராட்சி மன்றங்களின் நாளாந்த சேவைகளை அவ்வாறே முன்னெடுத்து அந்தக் குழுக்களின் மூலம் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

உள்ளூராட்சி தொடர்பான இந்த பரிந்துரைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே ஆளுநர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். மாவட்ட அரசாங்க அதிபர்களும் பிரதேச செயலாளர்களும் இவ்விடயத்தை ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த பாதையில் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்த கடினமான பயணத்தை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சுற்றறிக்கைகளால் வேலை செய்ய முடியாது என்பது போன்ற கதைகள் இனி போதும்.

எதிர்காலத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் 24 மணி நேரமும் செயற்படும் பிரிவு ஏற்படுத்தப்படும். இது பற்றி அபிவிருத்திக் குழுக்களில் கவனம் செலுத்தி அபிவிருத்திக் குழுத் தலைவரின் அறிவுறுத்தலின்படி அதனை நடைமுறைப்படுத்துங்கள். அலுவலகத்திற்குச் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மக்கள் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளும் ஒரு முறைமை இருக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களில் அங்கத்தவர்கள் இல்லாவிட்டாலும் இந்த அலுவலகத்தின் ஊடாக நடைபெற்று வந்த நிறுவனத்தின் அன்றாடப் பணிகள் அவ்வாறே மேற்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்களும் மாவட்டக் குழுக்களில் தொடர்புபட முடியும். ஜனாதிபதி உங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதால், வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். பிரச்சினைகள் எழும் விடயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மூலமே மாகாண சபை விவகாரங்கள் நடைபெறுவதுடன் அபிவிருத்திப் பணிகளுக்கான பணமும் உங்களூடாகவே வருகின்றது.

மாகாண சபை மீண்டும் நியமிக்கப்படும் வரையில் கலைக்கப்பட்ட மாகாண சபையின் தவிசாளர்கள் சம்பளத்துடன் உங்களின் அதிகாரத்தின் கீழ் உள்ளனர். அவர்களின் ஆதரவையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடவடிக்கைகளை செயற்படுத்தும்போது அவசர விடயங்கள் எழலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி அவசர விடயங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு ஒப்படைப்பார். அவற்றை ஆளுநர்கள், மாவட்டச் செயலாளர்கள் நிறைவேற்ற வேண்டும். நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் சிக்கல்கள் எழுந்தால் அவற்றை மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவித்து தீர்வு காண முடியும்.

நலன்பேணல் கணக்கெடுப்பை வெற்றிகரமாக செய்வதும் முக்கியமானதாகும். இந்த சந்தர்ப்பத்தில், சர்வதேச சமூகத்திடமிருந்து எமக்கு கிடைக்கும் ஆதரவை இதன் மூலம் அதிகரித்துக்கொள்ள முடியும்.

மேலும், உள்ளூராட்சி நிறுவனங்களின் சேவைகளை மக்கள் எவ்வித சிரமமும் இன்றி தொடர்ந்து பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அவற்றைப் பேண வேண்டும்" என்று தெரிவித்தார்.

அனைத்து ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர் பதவி வகிக்கும் அமைச்சர்கள், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு